Pages

Wednesday, January 20, 2016

A.V.M. - அன்பே வா {Anbe vaa} - 50years - M.G.R. {எம்.ஜி.ஆர்.}

எம்.ஜி.ஆர். நடித்த அன்பே வா படம் வெளிவந்து இந்த பொங்கலோடு ஐம்பது வருடங்கள் ஆகிறது. இந்த படத்திற்கு பல சிறப்பு அம்சங்கள் உள்ளது. திரையரங்கில் நான் பார்த்த முதலும் கடைசியுமான தலைவர் படம். 

எங்கள் பகுதியில் இருந்த மத்திய அரசு தொழிற்சாலையின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர ஊழியர்களுக்கான மனமகிழ் மன்றத்தின் திறந்த வெளி திரையரங்கில் அதிகம் ஞாபகம் இல்லாத ஒரு சனிகிழமை அன்று பார்த்தேன். 

ஜெ.பி.யாக தலைவர் திரையில் தோன்றும் முதல் காட்சியில் ரசிக்க ஆரம்பித்து, ஆனந்தத்தின் உச்சியில் அவர் பாடும் புதிய வானம் புதிய பூமி பாடலில் அவரின் ரசிகனாகிவிட்டேன். 

என்னதான் புதிய வானம் புதிய பூமி பாடல் எனக்கு பிடித்து இருந்தாலும் நான் அதிகம் முணுமுணுப்பது கல்லூரி மாணவர்கள் பாடும் ஒன்ஸா பாப்பா மெத்தமாமா என்னடி அம்மா எங்கள் லிட்டில் டூரிஸ்ட் என்ற பாடல் தான். 

அதுவரை நாயக பிம்பத்திலேயே நடித்து வந்த தலைவர் முதல்முறையாக நகைச்சுவை வேடம் ஏற்றிருப்பார். சின்ன பாப்பூ, ராமைய்யா, புண்ணியகோடி ஆகியோரது நகைச்சுவை மறக்க முடியாத ஒன்று. 

திரையில் படம் பார்த்து கொண்டு இருந்த பொழுது, இடைவேளையில் ஒரு பெரியவர் இந்த படம் வெளி வந்த பொழுது படத்திற்கு இரண்டு இடைவேளை இருந்தாக சொன்னார். உண்மை தான். அன்று பெரும்பாலும் டூரிங் டாக்கீஸில் இரண்டாம் வெளியீடாக அன்பே வா போட்டபட்ட பொழுது படத்தின் நீளம் காரணமாக சூடான ப்ராஜெக்ட்டரை இரண்டு தடவை நிறுத்தி ரீல் சுற்றி, மாற்றி வைத்து படதை ஓட்டினார்கள். 


இடைவேளை போடுவதில் இந்த படத்தில் புதுமை செய்து 
இருந்தார்கள். அது கல்லூரி மாணவர்களுக்கு எம்.ஜி.ஆர். 
சவால் விடுவதற்கு கையை நீட்டி காட்டுவார், அப்பொழுது அவரது 
கையிலிருந்து ஒன்றின் கீழ் ஒன்றாக இயக்குநர் பற்றிய குறிப்பும் 
மற்றும் இடைவேளை பற்றிய குறிப்பும் வரும். 
இது டிவிடியில் காண கிடைக்காத ஒன்று

படத்தில் சேகர் எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது, என் முதல் மனைவி விமானம் என்று சொல்வார்.... அவரது விமானத்தின் மீதான காதலை பின்னாட்களில் சாண்டில்யன் எழுதிய கடல் புறா நாவலில் அகூதா மற்றும் அமீர் ஆகியோரின் கடல் மீதான காதலில் கண்டேன். அந்த நாவலில் ஒரு வரி வரும் (சரியாக ஞாபகம் இல்லை) ஒருவன் கடலில் பயணித்து விட்டால், கடல் அவனை விடாது.. அவனை கடல் அழைத்து கொண்டே இருக்கும். அந்த வரியை போல அன்பே வா படத்தை ஒருதரம் பார்த்துவிட்டதால் அந்த படத்தை மீண்டும் மீண்டும் இந்நாள் வரையில் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். 

அதிகாலை பனியின் பொழுது புதிய வானம் புதிய பூமி பாடல், குளித்து விட்டு வரும் பொழுது லவ் பேர்ட்ஸ் பாடல், நண்பர்களுடன் இருக்கும் பொழுது ஒன்ஸா பாப்பா மெத்தமாமா பாடல் என்று இந்த படத்தை ஞாபகபடுத்தும் விஷயங்கள் தினசரி வாழ்க்கையில் கிடைத்து கொண்டே இருக்கிறது. 

எல்லாவற்றுக்கும் மேலே தான் யார் என்று தெரியாமல் கலாட்டா பண்ணும் கல்லூரி மாணவர்களை பார்த்து தலைவர் சிரிக்கும் அந்த சிரிப்புக்காகவே படத்தை எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம். 

Saturday, January 16, 2016

சுஜாதா : மூன்று புத்தகங்கள் போதும்

மூன்று புத்தகங்கள் போதும் சுஜாதாவின் ஆளுமையை புரிந்து கொள்ள .....

அவை கணையாழியின் கடைசி பக்கங்கள், ஏன்? எதற்கு? எப்படி?, ஸ்ரீரங்கத்து கதைகள் (தேவதைகள்). 

ஸ்ரீரங்கத்து கதைகள் ..... 2002-2003 வாக்கில் விகடனில் வாராவாரம் ஒரு சிறுகதை வந்துகொண்டு இருந்தது. மெயின்கார்ட்கேட், ஸ்ரீரங்கம் என்று அப்பொழுது நான் பெரிதும் சுற்றி கொண்டு இருந்த பகுதிகளை சார்ந்து கதைகள் இருந்ததால் தொடர்ந்து வாசித்து வந்தேன். அந்த கதைகளில் சொல்லபட்டு இருந்த எல்லா இடங்களையும் பார்த்திருக்கிறேன் என்பதால் ஒரு கட்டத்தில் அந்த கதைகள் மூலம் 1940-1950களின் திருச்சியில் வாழ ஆரம்பித்தேன். 

ஒவ்வொரு கதையை படிக்கும் பொழுதும் மனதிற்குள் அத்தனை கோடி பரவசம். எதோ எனக்கு ஏற்பட்டதை எல்லாம் எப்படியோ தெரிந்து கொண்டு சுஜாதா எழுதுகிறார் என்று நினைத்து கொள்வேன். 

பிறகு வேலைக்கு சேர்ந்து வாங்கிய முதல் சம்பளத்தில் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. 

சில வருடங்களுக்கு முன்பு விடுமுறைக்கு வந்த அண்ணன் கேட்கவே தந்துவிட்டேன். நேற்று எதோ ஞாபகம் வந்து இந்த புத்தகத்தை தேடினேன்... கிடைக்காமல் போகவே நான் பெரிதும் கலவரமடைந்ததை கண்டு அப்பா அண்ணனது வீட்டில் அதே பெயரில் புத்தகத்தை பார்த்தாக சொன்னார், அண்ணனுக்கு தந்தது ஞாபகம் வந்தது உடனே யார் மூலமாவது அதை கொடுத்து அனுப்ப சொல்லி அண்ணனுக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பினேன். 

2011
ஆம் ஆண்டு புத்தக கண்காட்சியில் எல்லோரும் பாராட்டி பேசுகிறார்களே என்று கணையாழியின் கடைசி பக்கங்கள் புத்தகத்தை வாங்கினேன். இதில் ஒவ்வொரு கட்டுரையும் படித்து, பிறகு அதில் சொல்லபட்டு இருக்கும் விஷயங்களை பற்றி மேலும் தெரிந்துகொள்ள கூகிளில் தேடி தேடி படித்தேன். புத்தகத்தை முடித்த பிறகு ஒரே ஒரு கேள்வி தான் மனதிற்குள் எழுந்தது.. எப்படி இத்தனை விஷயங்களை பற்றி தெரிந்து வைத்து இருந்திருக்கார் ???

ஏன்? எதற்கு? எப்படி? .... முதல் பதிப்பு 1992ல் வந்த பொழுதே அப்பா எங்களுக்காக வாங்கி கொடுத்தார். எனக்கும் என் அண்ணனுக்கும் சண்டையே நடக்கும், யார் படிப்பது என்று. அந்த வயதில் அந்த புத்தகத்தை படிக்கும் பொழுது பிரம்மிப்பாக இருக்கும். பள்ளியை விட எனக்கு அறிவியலை சுலபமாக அதிகம் கற்று தந்தது. கால ஓட்டத்தில் அந்த முதல் பதிப்பு எங்கோ தொலைந்து போய் விடவே, கொஞ்ச நாள் முன்பு விகடன் பதிப்பக அலுவலகத்திற்கே போய் வாங்கி வந்தேன். 
Related Posts with Thumbnails