Pages

Sunday, July 31, 2022

வாடகை மகிழுந்து - அநியாய கட்டணம்


இன்றைய தேதியில் வாடகைக்கு வாகனங்களை அமர்த்துவது என்பது பலரது தினசரி வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. சிலரது அன்றாட வேலையே இதனை நம்பியே தான் இருக்கிறது.

கொஞ்ச நாட்களாக எரிபொருள் விலை உயர்வினால் சொந்தமாக வாகனம் வைத்திருப்போர் பலரும் பேருந்து, இரயில்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதுவுமே அதிக சேவைகளை கொண்டதாக இல்லை.

இது தான் வேளையென நாங்கள் இருக்கிறோம் போக்குவரத்து நெரிசல் பற்றியோ எரிபொருள் விலை பற்றியோ கவலை படவேண்டாம், எங்களது வாடகை மகிழுந்து சேவையை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று விளம்பர படுத்தி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட வேளையில் அவர்கள் நிறுவனத்தின் வாடகை கட்டணம் எப்படி நிர்ணயிக்கிறார்கள் என்று புரியாத ஒன்று. ஏனென்றால் நேரத்திற்கு தகுந்தவாறு கட்டணம் மாறி கொண்டே இருக்கும். போகும் தூரம் ஒன்றே என்றாலும்.

இதில் வேறு கூடுதலாய் ஐம்பது ரூபாய் கொடுத்தால் தான் ஓட்டுனர்கள் வருவார்கள். இல்லாவிட்டால் ஏதோ இலவசமாக வர சொன்னது போல் பேசுவார்கள்.

சரி ஒரு மாதிரியான முயற்சி பண்ணி பார்ப்போம் என....

போகிற தூரம் சார்ந்து தான் OLA, UBERல் எல்லாம் கட்டணம் நிர்ணயிக்க படும் என்று சொல்ல படுகிறது.

ஆனால் கிளம்பும் இடமும் போய் சேர்கிற இடமும் ஒரே இடமாக வைத்து பார்த்தேன்.

நியாயமாக பார்த்தால் கட்டணம் எதுவும் வந்திருக்க கூடாது. ஆனால் வந்திருக்கிறது. 

புறப்படும் இடம் - மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன் வாசல்
சேருமிடம் -மைலாப்பூர் கபாலீஸ்வரர் முன் வாசல்

இது இப்படியாக இருக்க...

ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு போக எதன் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க படுகிறது தெரியவில்லை. 

இன்னொன்றும் புரிகிறது இதுவரையில் அதிகமாக தான் வாடகை கட்டணத்தை தான் இந்த வாடகை மகிழுந்து நிறுவனத்தார் வசூலித்துள்ளனர்.

இவர்களுக்கென கட்டண அட்டவணை என்று எதுவும் இல்லை. 

ஏன் இல்லை என்பதும் தெரியவில்லை.

#olataxi 
#ubertaxi

Sunday, July 24, 2022

டிபி கூப்பர் - 1


D.P.Cooper. 

இதுவரையில் தீர்வு காண முடியாத பல வழக்குகள் உலகம் முழுக்க இருந்து கொண்டு தான் இருக்கிறது. அவற்றில் எல்லாம் இது இப்படியாக நடந்திருக்கும் என ஊகிக்க முடியும்.

ஆனால் ஒரு வழக்கில் யார் குற்றவாளி, அவர் எப்படி தப்பித்தார் என்பது புரியாத புதிராக இருந்து வருகிறது என்றால் அது டிபி கூப்பர் விமான கடத்தல் வழக்கு தான். அந்த விமான கடத்தல் நடந்து 50 வருடங்களாகி விட்டது, இன்னும் அந்த வழக்கிற்கு டிபி கூப்பருக்கு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. வழக்கை பற்றி பல்வேறு ஆவண படங்கள், மின்னூல்கள், கலந்துரையாடல்கள் வந்துவிட்டது.

இந்த வழக்கை பற்றி முன்பே கேள்வி பட்டு இருந்தாலும், அது இத்தனை பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டு இருக்கும் என தெரியவில்லை நெட்ஃபிலிக்ஸில் D.B. Cooper : Where Are You ? என்னும் தொடரை பார்க்கும் வரையில்.

இந்த வழக்கை பற்றி பல திரைப்படங்களில் குறிப்பிட்டு இருப்பார்கள், சமீபத்தில் லோகி  தொடரில் நான் தான் டிபி கூப்பர் என லோகி சொல்வது போல் இருக்கும். 

கொஞ்சம் பெரிய விமான கடத்தல் நிகழ்வை சுருக்கமாக - ஒரு விமானத்தில் பயணி ஒருவர் விமான பணிப்பெண் இடம் ஒரு துண்டு சீட்டு கொடுகிறார், படித்த பயத்தில் விமானியிடம் விஷயத்தை சொல்கிறார். 

மேலும் மிரட்டுவதற்காக பெட்டியில் குண்டு வைத்து இருப்பதை காட்டுகிறார்.

பேச்சு வார்த்தை - கோரிக்கை - நான்கு பாராசூட் - இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள்.

கை மாறியது.

உத்தரவு - குறைந்த உயரத்தில் விமானத்தை ஓட்ட.

டிபி கூப்பருக்கு தெரியாமல் - பின் தொடர்தல்.

விமானத்தின் பின் தளத்தில் இருக்கும் வழியின் மூலம் படிகளில் இறங்கி மழையும் குளிருமாய் இருந்த அந்த இரவில் 10,000 அடி உயரத்தில் இருந்து குத்தித்து உலகத்தின் பார்வையில் இருந்து காணாமல் போகிறார் டி.பி.கூப்பர்.

விரிவாக படிக்க ( https://www.thedbcooperforum.com/ , https://en.m.wikipedia.org/wiki/D._B._Cooper , 
https://www.britannica.com/biography/D-B-Cooper ,
null 
https://www.vikatan.com/news/international/66245-fbi-is-giving-up-solving-mystery-of-db-cooper )

அமெரிக்க தனியார் துப்பறிவாளர்கள் இவர் தான் டிபி கூப்பர், இல்லை அவர் தான் டிபி கூப்பர் என பலரை கை காட்டி கொண்டு  இருக்கிறார்கள். அப்படி அவர்கள் சொல்வது உண்மையென்று ஆகிவிட்டால் அதிலிருந்து கிடைக்க கூடிய வணிக ரீதியிலான வருவாய் முக்கிய காரணம். அமெரிக்காவில் அதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதே விஷயம் இந்தியாவில் நடந்திருந்தால் அதே வணிக வாய்ப்பு இருக்குமென தெரியவில்லை. 

உங்களுக்கு வலையொளி (Podcast) கேட்கும் பழக்கம் இருந்தால் இந்த வழக்கை பற்றி அமெரிக்கர்கள் ஆர்வமாக பேசுவதை கேட்லாம்.

இந்த வழக்கின் சிறப்பம்சம் என்னவென்றால் தேடுதலில் ஒருவர் குற்றவாளி என சொல்ல ஆயிரம் ஆதாரங்கள் கிடைத்தால், அவர் டிபி கூப்பர் இல்லையென சொல்ல இரண்டாயிரம் ஆதாரங்கள் கிடைக்கும்.

உண்மையில் டிபி கூப்பர் என்பது ஒரு நபரா அல்லது உள்கூட்டத்தின் ஒரு ஏமாற்று வேலையா ?

ஏன் கனடாவில் தீவிர விசாரணை மேற்கொள்ளவில்லை ? ஏன் கனடாவில் விசாரிக்க வேண்டும் ?

1980ல் கொலம்பியா ஆற்றங்கரையில் டாலர் நோட்டுகளின் பின்னணி என்னவாக இருக்கும் ?

பண பரிமாற்றத்தின் / பரிவர்த்தனையின் மூலம் ஏன் கண்டுபிடிக்க முயலவில்லை ?

அரசியல் நோக்கம் கொண்டதா இந்த டிபி கூப்பர் விமான கடத்தல் ? அல்லது அந்த கடத்தலே ஒரு நாடகமா ?

தொடரும்....

Sunday, July 10, 2022

பொன்னியின் செல்வனும் நானும் - 1


பொன்னியின் செல்வன் பற்றி பேசுவதற்கு முன்னால் ஒன்றை சொல்லி ஆக வேண்டும், வார்த்தைகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட ஒரு கதையை அப்படியே திரையில் கொண்டு வர முடியாது. ஏனென்றால் வார்த்தைகளின் மூலம் உருவாக்க படும் கற்பனைகளுக்கு எல்லை என்பது இல்லை. ஆனால் ஒரு படமாக எடுக்கப்பட்டு விட்டால் அந்த கற்பனைக்கு ஒரு உருவம் வந்துவிடும். எல்லை உருவாகி விடும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் என்றதும்  "வானம் பொழிகிறது, பூமி விளைகிறது..." என்று பேசியபடி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவிற்கு வரும். உண்மையில் வீரபாண்டிய கட்டபொம்மன் அப்படி தான் பேசி இருப்பாரா என தெரியாது. ஆனால் சில பல சரித்திர குறிப்புகளை படித்தால் முற்றிலும் வேறுபட்ட உருவமே நமக்கு கிடைக்கும்.

பலருக்கு பொன்னியின் செல்வன் வழியாக இராஜராஜ சோழனும் அவர் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயில் தெரிந்திருக்கும். சிலருக்கு கோயில் வழியாக இராஜராஜனையும் பின்னர் நாவலையும் அறிந்திருப்பார்கள்.

ஆனால் .....

2001ல் அழகம் பெருமாள் இயக்கத்தில் டும் டும் டும் என்ற திரைப்படம் வந்தது. அதில் தேசிங்கு ராஜா என்னும் பாடல் தஞ்சை பெருவுடையார் கோயிலில் எடுக்க பட்டு இருந்தது. அக்கோயில் நாங்கள் குடியிருந்த பகுதியில் இருந்து 50 நிமிட பயணத்தில் இருக்கிறதென்று தெரிந்த பின், ஒரு நாளில் ஜோதிகா நடனம் ஆடிய கோயிலை பார்க்க போகிறோம் என்ற ஆர்வத்தில் சொந்தகார அண்ணனுடன் சென்று பார்த்தேன். 

இவ்வளவு பெரிய கோயிலை யார் கட்டினாங்க என கேட்ட பொழுது இராஜராஜ சோழன் என சொன்னார்.

எங்கள் பகுதியில் நூலகத்தில் இருந்து தினந்தோறும் வார பத்திரிக்கைகள் வரும். அதில் கல்கியும் அடங்கும். அதில் எதோ ஒரு ராஜா காலத்து கதை ஒன்று வரும் (அது பொன்னியின் செல்வன் என்று அப்பொழுது தெரியாது), அதனை அம்மா ஆர்வமுடன் வாசிப்பார். என் பெரியம்மாவும் அந்த கதையை பற்றி மிகவும் சிலாகித்து சொல்வார். 

அதில் வரும் படங்கள் பார்ப்பத்தோடு மட்டும் நிறுத்தி கொள்வேன், அது ரொம்ப தமிழாக இருக்கவும் படிப்பதற்கெல்லாம் முயற்சி செய்ததில்லை. 

இப்படி பொன்னியின் செல்வன் பலர் பாராட்டி சொல்லியும் வாசிக்க சொல்லியும் .... "நீ என்ன சொல்லுறது நான் என்ன கேக்குறது" என்று அந்த வயதிற்குள்ள மனப்பான்மையுடன் இருந்ததினால் வாசிக்கவில்லை.

நண்பர்கள், சினிமா, பாட்டு என வாழ்க்கை சுழன்று கொண்டே இருந்தது.

மேற்படிப்பிற்கான நுழைவு தேர்வுக்கு படித்து / முயன்று  கொண்டு இருந்த ஒரு வருடத்தில் முக்கால்வாசி நேரமும் வீட்டிலேயே தான் இருப்பேன். அப்படியான நேரத்தில் பெங்களூருவில் இருந்த பெரியப்பா வீட்டிற்கு போயிருந்தேன். பெரியம்மாவிடம் வீட்டிலேயே இருக்க ரொம்ப போர் அடிக்குது என சொல்லவும் ... சும்மா இருக்குற நேரத்துல் இதைய படி என பத்மவாசனின் ஓவியங்கள் கொண்டு   தொடராக வந்த பத்திரிக்கை பக்கங்களை பிணைத்த பொன்னியின் செல்வன் நாவலின் ஐந்து பாகங்கள் (ஆறு புத்தகங்கள்) கொடுத்தார்.

வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்த பிறகு முதல் சில பக்கங்களை வாசித்து முடிக்க 10 நாட்களானது.

அதன் பிறகு கதையோடு ஒன்றி பைத்தியம் பிடித்தது போல் வாசிக்க ஆரம்பித்தேன். இரண்டு வாரத்தில் மொத்த நாவலையும் படித்து முடித்தேன். 

கல்கியின் வார்த்தைகள் ஏற்படுத்திய மாயாஜாலம் ஒரு பக்கம் என்றால் அதனை வேறொரு தளத்தில் கொண்டு போனது பத்மவாசனின் ஓவியங்கள். 

துப்பறியும் கதைகள், காதல் கதைகள் ஆகியவற்றை வாசித்து கொண்டு இருந்தவனுக்கு பொன்னியின் செல்வன் வாசித்தது எப்படி இருந்ததென்றால் தெரு பசங்களுடன் பொழுதுபோக்கிற்காக குடியிருப்பு தெருவில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தவனை 20-20 கிரிக்கெட் போட்டியில் விளையாட விட்டது போல் இருந்தது.

பிறவு பெரியம்மாவிடம் பத்மவாசன் ஓவியங்கள் கொண்ட தொகுப்பை கொடுத்துவிட்டு மணியம் ஓவியங்கள் இருந்த தொகுப்பை வாங்கி மீண்டும் மணியம் ஓவியங்கள் வழியாக வாசித்தேன்.

அதகளத்தின் உச்சம் அந்த அனுபவம்.

பின்னர் வேதா ஓவியங்களோடு கல்கியில் தொடராக பொன்னியின் செல்வன் வர ஆரம்பித்தது. முதல் இரண்டு வாரங்கள் தான் வாசித்தேன், ஆனால் வேதாவின் ஓவியங்கள் மூலம் கதையோடு ஒன்ற முடியவில்லை.

பின்னர் பாம்பே கண்ணன் மற்றும் குழுவினர் கொண்டு வந்த பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம் / ஒலி நாடகம் வடிவத்தை கிட்டத்தட்ட 64 மணி நேரம் செலவளித்து கேட்டு முடித்தேன். அதுவுமே மறக்க முடியாத மற்றொரு அனுபவம்.

அதே போல இன்னொரு புதிய அனுபவமாக இருக்க போகிறது மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம்.

தொடரும்....

Related Posts with Thumbnails