Pages

Sunday, May 30, 2021

கலவை - 30/05/2021

பல செய்திகளை அல்லது பல குறுங்கட்டுரைகளை ஒரு தொகுப்பாக 14 வருடங்களுக்கு முன்பு தமிழ் இணையத்தில் பலர் எழுதி கொண்டு இருந்தார்கள். குறிப்பாக பரிசல் (பரிசல்காரன் - அவியல்) , கார்க்கி, கேபிள் சங்கர் ( கொத்து பரோட்டா) மற்றும் பலர் இந்த வடிவில் எழுதி கொண்டு இருந்தார்கள். பெரிதும் வெற்றி பெற்ற வடிவமாக இருந்தது.

அப்பொழுது தமிழ் இணையத்தில் பிரபலமானவர்கள் எல்லாம் இந்த வடிவத்தில் எழுதி கொண்டு இருந்த பலர் இப்பொழுது இந்த வடிவத்தில் எழுதுவது இல்லை. நான் இன்னுமும் எழுதி கொண்டு இருக்கிறேன்.

ஏனென்று தெரியுமா ?

அவர்களுக்கெல்லாம் எழுத உருப்படியான விஷயங்கள் கிடைக்கிறது அல்லது இருக்கிறது. எனக்கு அப்படி எதுவுமில்லை என்பதினால்..... எழுதுகிறேன்.

= = =

2016ல் நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவில் கால் வைத்த பின் கிண்டி குதிரை நொண்டி குதிரை கணக்காய் அடித்து பிடித்து 2017ல் நிலை கண்டு, ,2018ல் இந்தியர்களின் ஏகோபித்த ஆதரவுடன் 10 கோடி சந்தாதாரர்கள் என்ற நிலையை நெட்ஃபிளிக்ஸீக்கு இந்தியாவில் கிடைப்பார்கள் என அந்த குழும தலைவர் ரீட் ஹேஸ்டிங்ஸ் சொன்னார்.

அவர் சொல்லி மூன்று வருடங்களாகி விட்ட நிலையில் நான்கு கோடியே அறுபது லட்சம் சந்தாதாரர்கள் உடன் நெட்ஃபிளிக்ஸ் ஆட்டம் ஆடி கொண்டு இருக்கிறது. 

இது இப்படியாக இருக்க இந்தியாவில் முதன் முறையாக ரிலையன்ஸ் நிறுவனம் ஆரம்பித்த பிக் ஃபிளிக்ஸ் என்கிற OTT வடிவேலுவின் கிணத்தை காணோம் நகைச்சுவையில் வரும் கிணற்றை போல் உள்ளது. 

அங்காளி பங்காளிகளான டிஸ்னி ஹாட்ஸடார் மற்றும் சோனி லிவ் ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் இருக்கிறது. 

போன வருடம் வரைக்கும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தான் முன்னணியில் இருந்தது ; ஸ்டார் குழும நிறுவனங்களின் தொலைக்காட்சி தொடர்களின் காப்புப்பிரதியாக இருந்ததினால் அதன் மதிப்பு ஏற்றதிலேயே இருந்தது.

பின் ஹர்ஷத் மேத்தாவின் கதையான ஸ்கேம் 1992 வந்ததினால் சோனி லிவ் OTTக்கு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகமானது. இந்த தொடர் நெட்ஃபிளிக்ஸில் வந்திருக்க வேண்டியது. 

சந்தையை புரிந்து கொள்ளா அதிகாரம், தவறான முடிவுகள், ஆற்றோடு போகும் மனப்பான்மை,திரை நட்சத்திரங்களுக்கான அவியத்தின் பின்னால் ஓடுதல், சராசரி மாத கட்டணம் அதிகமாக இருத்தல் ஆகியவைகளால் இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் பின் தங்கி இருக்கிறது.

= = = 

நடிப்பின் சிகரம் கேலாக்ஸி ஸ்டார் விமல் நடித்த கன்னிராசி படத்தை பார்த்து உய்யலாலா அடைந்தேன். ஜோடியாக வரலட்சுமி நடித்திருந்தார். 

காலையில் ஒரு பிளேட் பொங்கல் சாப்பிட்டுவிட்டு சூடான டிகிரி காபிக்கு காத்திருக்கும் பாவனையுடன் விமல் அட்டகாசமாய் நடித்திருந்தார். 

பொதுவாய் எம்.ஜி.ஆர். படங்களில் தான் நாயகி நாயகனை தூரத்தி தூரத்தில் காதலிப்பார். விமல் அண்ணனுக்கு சினிமாவில் இரண்டாம் எம்.ஜி.ஆர். என பெயர் வாங்க ஆசை வந்துவிட்டது போல. 

இதனை அடுத்து கந்தாசாமி என்னும் காவியத்தை பார்த்தேன்.... இந்த படம் வெளிவரும் பொழுது சில்லறை எல்லாம் சிதற விட்டு இருக்கேன் என்று நினைக்கும் பொழுது விதி கீரிஸ் டப்பாவை எப்படி உதச்ச என சிரித்தது.

ஷ்ரேயா சரன் அம்மணி மியாவ் மியாவ் பூனை என்னும் பாடலுக்கும் நடனம் ஆடி இருந்தார்.... அதை பார்க்கும் பொழுது மலச்சிக்கலில் அவஸ்தை பட்டு கொண்டு இருந்த நடன இயக்குநரின் வேதனை புரிந்தது. 

= = =

கடவுள் என்னும் கொலைகாரன் என்னும் குறுநாவலை படித்தேன். எழுத்து நடை எல்லாம் நன்றாக இருக்கிறது ... ஆனால் கதை கிண்டி குதிரை கணக்காய் தான் இருக்கிறது (நெட்ஃபிளிக்ஸ் பந்தி).

Two minutes silence.

= = =

ஊரெங்கும் ஒரியல் பாலோ இயக்கி இருக்கும் தி இன்னொசென்ட் இணைய தொடரை பற்றி தான் பேச்சு . பார்க்கவில்லை என சொன்னால் எதிர்கட்சிகாரன் என்ன நினைப்பான் என்கிற தர்ம சங்கட நிலை வந்துவிடும் என்பதினால் பார்க்க தொடங்கினேன். 

சும்மா பரபர என இருக்கிறது காட்சிகளின் நகர்வு.

= = =

வேலை சார்ந்த அழுத்தம் அதிகபடியான நிலை இருப்பதினால், மன தளர்வுக்கு என்ன செய்வது தெரியாமல் இருந்த வேளையில் தங்கதுரையின் தற்கொலை ஜோக்குகள் என்கிற புத்தகம் படிக்க கிடைத்தது. 

கடி ஜோக்கு வகையை சார்ந்த நகைச்சுவை துணுக்கு தான். வாய் விட்டு சிரித்தேன் ஒவ்வொரு நகைச்சுவை துணுக்கிற்கும். 

இந்த புத்தகத்தின் சிறப்பு என்னவென்றால் தமிழ் பேச தெரியும் படிக்க தெரியாதோருக்காக தங்கிலீஷ் வடிவிலும் இருக்கிறது. 

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும். நண்பர்களிடையே இந்த புத்தகத்தில் வரும் ஜோக்குகளை சொல்லி உறவை மேம்படுத்தலாம்.

புத்தகம் தந்த நண்பருக்கு நன்றி.

= = =

Wednesday, May 26, 2021

CORONA SECOND WAVE II கொரோனா இரண்டாம் அலை II இரண்டாம் அலை சாவுக்கு சுய மருத்துவம் தான் காரணமா ? II

இந்த கொரோனாவில் பலர் இறக்க இதுவுன் காரணமாக இருக்கலாமென இரண்டாம் அலை தொடங்கிய நாளில் இருந்து சந்தேகம் வந்துகொண்டே இருந்தது. 

அது இப்பொழுது ஊர்ஜிதமாகிறது.

எனக்கு தெரிந்த நபர், கட்டிட துறையில் டிப்ளோமா பட்டம் பற்று வேலைக்கு சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக உழைப்பால் முன்னேறி பெரிய பதவிக்கு வந்தார்.

அவருக்கு அடிக்கடி உடம்பிற்கு சுகமில்லாமல் போகும் பொழுது மருத்துவரிடம் போகாமல் டோலோ மற்றும் பரசிட்டமோல் மாத்திரைகள் இரண்டையும் பக்கத்தில் இருக்கும் மருந்துகடைக்கு போய் வாங்கி சாப்பிட்டுவிடுவார். முக்கியமாக டோலோ மாத்திரை பரசிட்டமோலையும் கலந்து தான் தயாரிக்க படுகிறது.

இப்படி எவ்வளவு நாள் மருத்துவரிடம் போகாமல் மாத்திரை சாப்பிடுறீங்க சார் என ஒரு முறை கேட்ட பொழுது, டொக்டர் கிட்ட போன அவனும் இதே தான் இதே எழுதி தருவாரு என சொன்னார். 

நான் இந்த கேள்வியை அவரிடம் மார்ச் மாதத்தில் கேட்டேன். வழக்கமாக நான் எல்லோரிடம் சொல்வதை அவரிடம் சொன்னேன், இப்படி சுய மருத்துவம் (self medication) பண்ணிக்காதீங்க நல்ல டொக்டரிடம் போங்கள் என சொல்லி விட்டு, நான் போன வேலை விஷயமாக பேசிவிட்டு வந்தேன்.

அப்பொழுதே அவர் மார்க்கூட்டு சளி (நெஞ்சு சளி) அதிகமாக இருப்பதாகவும் அது இருமலில் வெளி வருவது இல்லை என சொன்னார். 

ஏப்ரல் மாதத்தில் அவரை சந்தித்த பொழுது கொரோனா தடுப்பூசி போடுவதை பற்றி கேட்டார், அப்பொழுது தனக்கு சக்கரை நோய் இருப்பதாக அவர் சொல்லவும் ஒரு நல்ல மருத்துவரை பார்த்து வேண்டிய பரிசோதனைகளை செய்து கொண்டு, அவரை ஆலோசித்து தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் என சொன்னேன்.

நான் சொன்ன மாதிரி செய்தாரா என தெரியவில்லை.

மே மாதம் 13ஆம் தேதி என்னை அழைத்து எனக்கு தந்திருந்த பேட்டி நேரத்தை (Appointment time) ரத்து செய்து தனக்கு காய்ச்சலாக இருப்பதாகவும் கொரோனா பரிசோதனைக்கு போகிறதாக சொன்னார்.

கொஞ்சம் நாள் கழித்து நுரையீரல் பலவீனமாக இருப்பதாகவும் கொரோனா தொற்று இருப்பதாக சொன்னார். 

நலம் விசாரித்து விட்டு, உதவி வேண்டுமென்றால் அழைக்க சொன்னேன்.

அப்படியே நாள் போனது, சரி இந்நேரத்துக்கு குணமாகி இருப்பார் என்று எண்ணி அழைத்தேன், அவர் மூத்த தான் கைபேசியை எடுத்தார், அப்பாவிடம் பேச வேண்டும் என்று சொன்ன பொழுது அப்பா நேற்று இறந்துவிட்டார் என சொன்னான். 

காரணம் கேட்ட பொழுது நுரையீரல் ரொம்ப பலவீனமாகிவிட்டதால் காப்பாற்ற முடியாமல் போனதாம். 

மருத்துவ காப்பீடு இரண்டு லட்சத்திற்கு தான் எடுத்திருக்கிறார். கையிருப்பு பணம் எல்லாம் காலி ஆகி விட்டதாம். ஆயுள் காப்பீடும் அவர் எடுக்கவில்லை. வீட்டு கடன் வாங்கி கட்டி இருக்கிறார். வீட்டு கடன் பாதுகாப்பு காப்பீடும் அவர் எடுக்கவில்லை. அதனால் மீதி கடன் தொகை காட்டினால் தான் அந்த வீடு அவர்களுக்கு என இருக்கும். இல்லாவிட்டால் அதுவும் இல்லை.

பழமைவாத குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர், அவரது மனைவி பெரிதாக படிக்கவில்லை, இரு மகன்கள் மூத்தவன் எட்டாவது , இளையவன் மூன்றாவது.... பணகார பள்ளியில் படிக்கிறார்கள். 

அவர் மட்டுமே குடும்ப வருமானத்திற்கு உழைத்து கொண்டு இருந்தார்.

பெரிய தொகையை தான் சம்பளமாக வாங்கி கொண்டு இருந்தார். இப்பொழுது அது இல்லாத பொழுது கைவசம் சொத்துகள் வைத்து அல்லது விற்று இல்லாவிட்டால் முதலீடு செய்ய வேண்டும். அப்படி செய்தாலுமே மாதம் அவரது சம்பளத்தில் ஐந்தில் ஒரு பங்கு வந்தாலே அதிகம். 

இப்பொழுது அந்த குடும்பம் மாதம் அவரது சம்பளத்திற்கு வாழ பழகி விட்டார்கள். அது இல்லையென்ற பொழுது ....அவர்களது நிலைமை ?

இதை எல்லாம் அவர் தவிர்த்திருந்திருக்கலாம்.... தனக்கு சுகமில்லாத பொழுது / உடம்பு சரியில்லாத பொழுது ஆரம்பித்திலேயே நல்ல மருத்துவரை கண்டு மருத்துவ ஆலோசனை பெற்று ... அதன் படி நடந்திருந்தால் இந்நேரத்திற்கு அவர் உயிரோடு இருந்திருப்பார். தனது உடல் நிலையை பற்றி குடும்பத்தாரிடம் எதுவும் சொல்லவில்லையாம்.

இதனால் நான் சொல்லி கொள்வது என்னவென்றால்....

உடம்பிற்கு எதாவது ஒன்று என்றால் அலட்சியம் செய்யாதீர்கள், தகுந்த மருத்துவரை கண்டு ஆலோசனை பெறுங்கள். குடும்பத்தாரிடம் உடம்பிற்கு எதாவது என்றால் சொல்லுங்கள். 

முக்கியமாக காய்ச்சல் என்பது வெறும் அறிகுறி தான். அடிக்கடி காய்ச்சல் வருகிறது என்றால் மருத்துவரை போய் பாருங்கள். நேரடியாக மருத்துகடைக்கு போய் மருந்து வாங்குவதை விட்டுவிடுங்கள். 

வெளிநாடுகளில் இருப்பது போல மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருத்து கொடுக்க கூடாது என ஒரு சட்டம் வர வேண்டும். 

உங்கள் நண்பரோ சொந்தகாரரோ பெரிய மருத்துவர் இல்லையென்றால் அவரிடம் மருத்துவ ஆலோசனை கேட்காதீர்கள்.

முக்கியமாக கூகிள் தேடுபொறி  சிந்திக்கும் திறன் கொண்ட மருத்துவர் இல்லை. நீங்கள் என்ன தேடுகிறீர்களோ இணையத்தில் உள்ள அது சார்ந்த பக்கங்களை காண்பிக்கும். அவ்வளவே.

Sunday, May 23, 2021

*நீச்சல்* II தொடர்கதை II அத்தியாயம் -1II தெய்வ தன்மைகள் இல்லாத இராமாயண கதை II Real Life Ramayana

அத்தியாயம்– 1

(முழுவதும் கற்பனையான கதை)

4000 ஆண்டுகளுக்கு முன்பு.

வசதி , படை பலம் என்று எவ்வளவோ இருக்க தனது அண்ணன் ஏன் பிடிவாதமாக ஒரு குரங்கு கூட்டத்தை அழைத்து கொண்டு வந்து இந்த கடற்கரையில்  அமர்ந்திருக்கிறார், ஆயிரம் போர் வித்தைகள் கற்றவராக இருந்தாலும் ஒரு பலம் பொருந்திய அரசனை வீழ்த்த எப்படி இவரால் முடியும், நான் துணைக்கு இருந்தாலும் எப்படி எங்கள் இருவரால் முடியும் ?என்று யோசித்தபடி மீண்டும் மீண்டும் தனது கால்களை தொட்டுவிட்டு போகும் அலைகளை பார்த்தபடி அமர்ந்திருந்த இராமனை நோக்கி இலக்குமணன் வந்து, பக்கத்தில் அமர்ந்தான்.

“அண்ணா எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை, அண்ணியாரின் தந்தை சனகரும் உங்களது கொள்கைகளை வெள்ளி தட்டில் பொரித்து, அதனை நிருபாசனத்தில் வைத்து ஆட்சி செய்யும் தம்பி பரதனும் இருக்கையில், நீங்கள் ஏன் ஒற்றை மனிதராய், விலங்கினமா மனித இனமா என தெரியாத ஒரு கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு எல்லா வலமும் மிக்க இலங்கை அரசன் இராவணனை  எதிர்த்து அண்ணியாரை மீட்க போர் புரிய கிளம்பி இந்த தனுஷ்கோடி கடற்கரை வரையில் எந்த தைரியத்தில் வந்து இருக்கிறீர்கள் ?”

வழக்கம் போல இராமன் பலமான சிந்தனைக்கிடையில் வட்ட சிந்தனையாளன் இலக்குமணனை பார்த்து சிரித்தான். வாசிப்பு பழக்கம் இல்லாததால் கோபங்களை கையாள தெரியா பருவத்தில் இருக்கிறான் என தனக்குள் நினைத்தப்படி பேச ஆரம்பித்தான்.

“தம்பி நமது தந்தையின் ஆணையிட்ட படி தென்திசை நாட்டுகளுக்கு  அதிக வருமானத்தை ஈட்டி தரும் கடல்சார் வணிகத்தை நமது வசமாக வேண்டும் .....”
பேசி கொண்டு இருந்த இராமனை இடைமறித்து இலக்குமணன்
“சரி வர்த்தகத்தை வசமாக்க ஏன் இந்த தனி நபர் போர், சனகரின் படை  இல்லையா நமது நாட்டு போர் படைகள் இல்லை.. வாடகைக்கு வரும் கூர்கா போர் படை இல்லையா ?”

“இருக்கிறது இல்லையென சொல்லவில்லை, திராவிட ஆட்சியை பிடிப்பது மட்டும் தான் நமது இலட்சியம் என்றால் அவர்களது உதவியை நாடி இருக்கலாம். ஆனால் அது வணிகர்களது நம்பிக்கையை பெற்று தராது. ஆட்சியை வசமாக்கிவிட்டு போனால் வரி மட்டுமே வரும், இலாபம் வராது. மீண்டும்  யாராவது கலகம் செய்து திராவிட நாட்டை நமது கைகளில் இருந்து மீட்கலாம்... வணிகர்களது நம்பிக்கையை வென்று விட்டால் நமது பரம்பரையில் கடைசி வரைக்கும்  திராவிடம் நம் வசம்.”

இலக்குமணன் தான் எவ்வளவு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக, அதன்  சாட்சியாக இருக்கிறோம் என்பதனை நினைத்து பெருமிதம் பட்டான் .இந்த திட்டம் மட்டும்  வெற்றி பெற்றால் சீன, சுமாத்திரா, சிங்கைநகரம் போன்ற நாடுகளுக்கு போகும் கப்பல்கள் நிற்கும் துறைமுகம் நமது வசம் ஆகும்.... அப்படியானால் என யோசிக்க யோசிக்க இலக்குமணன்  கடந்த சில மாதங்களில் நடந்தவை எல்லாம் கண்கள் முன்னால் காட்சிகளாக விரிந்தது.

= = =

சூர்ப்பனகை  ஆயிரம் வித்தைகள் கற்றவள், எவ்வளவு பெரிய படையாக இருந்தாலும் ஒற்றை ஆளாக சமாளித்து கலப்பை வில்லை கொண்டு வெற்றி பெற்று விடுவாள்.

 இராவணனது ஒரே தங்கை. 
தனக்கும் தனது தங்கைக்கும் இருபத்தைந்து ஆண்டுகள் வித்தியாசம் என்பதால் அவள் கற்க ஆசை பட்டத்தை எல்லாவற்றையும் கற்க தகுந்த ஏற்பாடுகள் செய்தான். ஞானிகள் அறிஞர்கள் இருந்த சபையில் எல்லோரிடமும் விவாதம் செய்வது சூர்ப்பனகைக்கு பிடித்த ஒன்று. பல தரப்பு கொள்கைகளுடன் விவாதம் செய்யும் பொழுது அறிவு தெளிவு ஏற்படும் என்பது அவளெண்ணம். 

அவளது அறிவு தேடலுக்கு தடை போடாமல் தஞ்சை, காஞ்சி ,மிதிலை, நாளந்தா மற்றும்  பல சிறந்த பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி பிடித்த விஷயங்களை சிறந்த ஆசிரியர்கள் மூலம் கற்க வழி செய்தான். 

அப்படி ஒரு தரம் பருவகால ஓய்வு விடுமுறைக்கு வந்த சூர்ப்பனகை எங்கோ பல தேசங்கள் கடந்து அறியப்படாத எகிப்து என்ற நிலப்பரப்பில் இறந்தவர்களது சடலங்களை பதப்படுத்தும் புதைப்பதை வழக்கமாக இருப்பதை பற்றி இராவணனிடம் ஆர்வம் பொங்க சொல்லி கொண்டு இருந்தாள். 

அறிவும் அழகும் ஒருங்கிணைந்தவளை இன்னும் எத்தனை நாட்கள் தான் இப்படி தன்னை அறிவு தேடலில் தன்னையே தொலைத்து கொண்டு இருப்பாள். தனது வளர்ப்பில் ஏதேனும் தவறிருக்குமோ, அம்மை அய்யன் இல்லாத குழந்தையை ஒரு சக்கரவர்த்தியை தயார் செய்வது போல் வளர்த்து விட்டோமோ என கவலையில் மாலை நேரத்து மேகங்களை பார்த்து கொண்டு இருந்தான். 

அந்த கவலையென்னும் தீயில் மேலும் எண்ணெய் ஊற்றுவது போல .....

“அண்ணா வங்காள தேசத்தில் மரக்கலம் கட்டுவதை பற்றி கொஞ்சம் கற்று கொண்டு வந்திருக்கிறேன்... நாளை அயல்நாட்டு வணிகர்களை சந்திக்க கந்தார துறைமுகத்திற்கு போகிறோம் அல்லவா .... அங்கு போர் மற்றும் வணிக மரக்கலம் கட்டுவதை பற்றி அவர்களிடம் பேச வேண்டிய விஷயங்கள் கொஞ்சம் இருக்கிறது.... அதனை பற்றி போகும் வழியில் உங்களுக்கு விவரித்து விடுகிறேன் .....” என சூர்ப்பனகை சொன்னதும் அப்பொழுது தான் இராவணனுக்கு அவள் தனது அன்பு தங்கை மட்டும் அல்ல இந்த இலங்காதிபதி அரசாட்சியில் வணிக அமைச்சர் என்றதும் நினைவும் வந்தது. 

கொஞ்சம் நேரம் போக உளவுத்துறை அதிகாரிகள் தர போகும் பரத நாட்டு பற்றிய அறிக்கைகளை படிக்க காத்து கொண்டு இருந்தான். 

சூர்ப்பனகை மெல்லிய குரலில் ..”அண்ணா ஒரு விஷயம் உங்களிடம் சொல்ல வேண்டும்...”. இது வரையில் இல்லாத தயக்கம் கவனிக்க செய்தான் . முகத்தின் மொழியோ அவள் வாழ்வின் முக்கியமான ஒன்றை சொல்ல  இருக்கிறாள் என்பதை சொல்லியது. மனத்தில் அதுவாக இருக்குமோ என்ற சந்தோஷம் ஏற்பட்டாலும் இராவணன் எதையும் காட்டி கொள்ளாமல் ...

“இராமர் என்று ஒரு இளவரசர்... “
என்று சூர்ப்பனகை சொல்ல ஆரம்பிக்கும் பொழுது உளவுத்துறை அமைச்சர் ஞானமுருகு இலங்காதிலகம் தனது படை தளபதியான அதிமலையனோடு உள்ளே வந்தார். வந்தவர் முகத்திலுள்ள கலக்கத்தை கண்டு எதோ முக்கிய விஷயம் போலிருக்கிறது என யூகித்து,
“அரசே நான் உத்தரவு வாங்கி கொள்கிறேன் என சொல்லி அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

 பொதுவில் அண்ணனுக்கு சக்கரவர்த்திக்குரிய மரியாதை தர வேண்டும் என்பதில் சூர்ப்பனகை கவனமாக இருந்தாள்.

அப்படி வெளியே போகும் பொழுது அதிமலையன் கையில் இருந்த ஏட்டில் அயோத்தி என்று தலைப்பு இருந்ததை பார்த்தாள்.

தொடரும்.....

Wednesday, May 19, 2021

திருக்குறளும் நானும்

திருக்குறளும் நானும்.

இப்படியாக தலைப்பில் எழுதணும் என ஆசை தான், ஆனால் அப்படி எ அப்படி எழுத வேண்டுமென்றால் ஒன்று திருக்குறளை முழுமையாக படித்து இருக்க வேண்டும் அல்லது அதனை பற்றி சிறிதளவு ஆராய்ச்சி ஆவது செய்திருக்க வேண்டும்.

நான் இவை இரண்டும் செய்திருக்கவில்லை.   எனக்கு 13 வயதாக இருக்கும்பொழுது குடும்ப நண்பர் ஒருவர் எனக்கு திருக்குறள் புத்தகத்தை பிறந்தநாள் பரிசாக தந்தார்.

அதுவரை திருக்குறளை ஒரு மனப்பாடப் பகுதியாக பார்த்து வந்த எனக்கு அந்த புத்தகம் பெரிதாக ஈர்க்கவில்லை. 

 இரண்டு வருடங்களுக்குப் பின் எழுத்தாளர் நரசய்யா அவர்கள் பொதிகைத் தொலைக்காட்சியில் ஒரு பேட்டியில் திருக்குறளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.

அது ஒரு சனிக்கிழமை மதியம் என்பதால் பார்க்க வேறு ஒன்றும் இல்லாத காரணத்தால் அந்த நிகழ்ச்சியை வேறு வழியின்றி பார்க்கத் தொடங்கினேன்.

அதில் திருவள்ளுவர் என்பவர் யார் என்பதை கண்டுபிடிக்க திருக்குறள் பாடல்களிலேயே பல துப்பு இருப்பதாய் சொன்னார். ஒரு பதின் வயத்தொற்றவனுக்கு அவர் சொன்ன தகவல்கள் எல்லாம் ஏதோ ஒரு மாயாஜால பெட்டியை திறந்து விட்டது போல் தோன்றியது. 

ஆவல்கள் மிளிரிட குடும்ப நண்பர் தந்த திருக்குறள் புத்தகத்தை படிக்கத் தொடங்கினேன். பெரிதும் ஒன்றும் புரியாததால் புத்தகத்தை மூடி வைத்தேன்.

+2 பள்ளி பரீட்சையில் தோல்வியடைந்து அடுத்து என்ன செய்வது என தெரியாமல் வியாச பாரதம், ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் என படித்து விட்டு அடுத்து என்ன படிப்பது என தெரியாமல் உட்கார்ந்து கொண்டு இருந்தேன்.  அதிகபடியான மன குழப்பத்தில் இருந்த பொழுது தான் மஞ்சள் அட்டையில் பரிசாக வந்த அந்த திருக்குறள் புத்தகம் கண்ணில் பட்டது.எதோ ஒரு வேகத்தில் அதனை எடுத்து படித்தேன்....

ஆள்வினையுடைமை அதிகாரம், குறள் 611 (இப்பொழுது தான் சரியாக சொல்ல தெரிகிறது)

"அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் 
பெருமை முயற்சி தரும்"

குரல் புரியவில்லை பிறவு விளக்கத்தை படித்தேன். சற்று தைரியம் வந்தது.

அந்த அதிகாரத்தின் கடைசி குறள்..

"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் 
தாழாது உஞற்று பவர்."

இதனை படித்து முடித்த பொழுது என்ன செய்ய வேண்டும் புரிந்து இதெல்லாம் தோல்வியே இல்லை புரிந்து, அப்பாவிடம் சொல்லி ஒரு டுடோரியல் செண்டரில் சேர்த்து விட சொன்னேன். 

நான் படித்தது CBSE, அதனால் தமிழக அரசு கல்வி முறையில் என்னால் ஒன்றி படிக்க முடியுமா என அப்பா யோசித்தார். அப்பாவை எப்படியோ பேசி சம்மதிக்க வைத்தேன்.

அந்த நம்பிக்கையை தந்தது இந்த குறள்..

அதிகாரம் தெரிந்து தெளிதல்.

குறள் 505

"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்".

வென்றுவிட முடியும் என நம்பிக்கை தருவது திருக்குறளே.

- நிற்க -

அந்த திருக்குறள் புத்தகம் எனக்கு பரிசாக தந்தவர் கன்னட மொழியை தாய்மொழியாக கொண்டவர். கன்னடர் மூலமாக தான் எனக்கு திருக்குறள் அறிமுகம் ஆனது. அவர் மட்டும் அந்த பரிசை தராமல் இருந்திருந்தால் ஒரு மனப்பாட பகுதியாக மட்டுமே திருக்குறளை அணுகி இருப்பேன்.

நன்றி - லலிதா ஆண்ட்டி அத்தை ( அவரை நான் அப்படி தான் அழைப்பேன்)
Related Posts with Thumbnails