Pages

Monday, December 20, 2021

டி.டீ.எச். II சுஜாதா


2000களின் பிற்பகுதியில் அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்றதாக இருக்கும் என அவசர அவசரமாக திருச்சியில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்தோம். 

பெயர்ந்த பிறகு சந்தித்த முதல் பிரச்சனை கேபிள் டிவி தான். நானும் அண்ணனும் விசாரித்து ஒரு இருட்டான வீட்டொன்றில் போய் பேசி இணைப்பிற்கான பணம் கட்டிவிட்டு வந்தோம். (இப்பொழுது அந்த வீட்டில் ஒரு குடும்பம் குடித்தனம் இருக்கிறார்கள். பக்கத்தில் இருந்த அண்ணாச்சி கடை சூப்பர் மார்கெட்டாக மாறிவிட்டது)

மாதாமாதம் வீட்டிற்கே வந்து பணம் வாங்கி கொண்டு போவார்கள். ஒரு சமயம் வீடு பூட்டி இருக்கிறது என பணம் வசூலிக்காமல் இணைப்பை துண்டித்து விட்டு சென்றுவிட்டார்கள். 

இதே திருச்சியாக இருந்தால் அடுத்த மாசத்தோடு சேர்த்து கொடுங்க, அப்பறமா வாங்கிக்குறேன் என பக்கத்து வீட்டில் சொல்லிவிட்டு போவார்கள். ஆனால் சென்னை வந்த கொஞ்ச காலத்திலேயே இப்படியான அனுபவம். 

அப்பொழுது சன் டி.டீ.எஃச். அறிமுகமாகி விளம்பரங்கள் வந்து கொண்டு இருந்தன. 

அப்பா கேபிள் டிவிக்கு இது மேல் என சொன்னதால் கேபிள் டிவிக்கு பிரியாவிடை தந்துவிட்டோம். 

அதில் என்ன ஒரு சிக்கல் என்றால் அதனை Recharge செய்ய முகவரிடம் இருந்து recharge card வாங்க வேண்டும் என்பது போல் அமைப்பு இருந்தது. ஒரு சமயம் முகவர் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டால் திங்கட்கிழமை வரைக்கும் காத்திருக்க வேண்டும். வாரயிறுதிகளில் பெருங்களத்தூர் மிகவும் அமைதியாக தான் இருக்கும். ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் கட்டிடங்கள் இருந்த காலம் அது. 

சித்ரா டாக்கீஸில் நான்கு இடைவேளைகளுடன் திரையில் கோடுகள் புள்ளிகள் கோலங்கள் தாங்கிய பழைய எம்.ஜி.ஆர். சிவாஜி படம் பார்க்க கூட்டமாய் நின்று கொண்டு இருப்பார்கள். இப்பொழுதும் அங்கு கூட்டமாக இருக்கிறது ஆனால் படம் காண அல்ல. மதுபானத்திற்காக.

நஷ்டம் காரணமாக டாக்கீஸ் சிமெண்ட் கிடங்காக இருந்து பின்னர் சில வருடங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை அங்கு வந்தது. அந்த டாஸ்மாக் கடை சென்னையில் எனக்கு கிடைத்த அதிர்ச்சிகளில் முக்கியமான ஒன்று. திருச்சியிலும் சாராயக்கடை இருக்கும், ஆனால் குடியிருப்பு பகுதிகளில் இருக்காது. எல்லாம் வணிக பகுதியில் தான் இருக்கும். 

இந்த பிரச்சனை காரணமாக டாடா ஸ்கை டி.டீ.எஃச். வாங்கினோம். முக்கிய காரணம் டாடா ஸ்கை முன் கட்டண அட்டைகளை விற்ற முகவர் எல்லா நாட்களிலும் கடை திறந்து வைத்திருப்பார். அப்பறம் இணையத்தில் கட்டணம் செலுத்த ஆரம்பித்தோம்.

அதே போல் இணைய சேவை மற்றும் தொலைபேசி இணைப்பிற்கு BSNL இணைப்பு தான் சென்னை வந்த உடன் வாங்கினோம். ஆனால் என்ன பிரச்சனை என்றால் கட்டணம் செலுத்துவதை தவிர்த்து சின்ன பிரச்சனை என்றாலும் குரோம்பேட்டையிலுள்ள அவர்களது அலுவலகத்திற்கு தான் போக வேண்டும். அப்பா தான் போய் விட்டு வருவார். 

வளர்ந்து வந்து கொண்டு இருந்த பகுதி என்பதால் ( வாடகை வீட்டில் இருந்து  சொந்த வீடு கட்டி வந்த பிறகு பல வருஷங்களுக்கு இது Extension areaவாக தான் இருந்தது) அடிக்கடி கனரக வாகன வருகையால் கம்பி அறுந்து போகும். 

அதை சரி செய்ய ஒரு வாரம் ஆகும்.

அப்பொழுது ஏர்டெல் நிறுவனம் இணைய சேவை மற்றும் தொலைபேசி அழைப்பு, புகாருக்கு உடனடி தீர்வு என சொன்னதால் BSNL சேவையை ரத்து செய்து விட்டு ஏர்டேல் (இணையம் மற்றும் தொலைபேசி) இணைப்பை  வாங்கினோம் .

வைத்திருந்த வரைக்கும் பிரச்சனை என எதுவும் இருந்தது இல்லை. ஏர்டெலுக்கு முன்  சோதனை அடிப்படையில் ACT இணைய சேவை பயன்படுத்தினோம். ஜியோவில் தொலைபேசி இணைப்பு, இணைய சேவை, டி.டீ.எஃச். ஒன்றில் மூன்று சேவைகள் கூடுதலாக இலவச ஓடிடி தளங்களின் சந்தா என விலையும் குறைவாக இருந்ததினால் மாறிவிட்டோம். 

ஏதற்கு சொல்கிறேன் என்றால் இந்த மாற்றங்களை காண 14 வருடங்களானது. 

இதனை பற்றி எல்லாம் சுஜாதா 1998லேயே எழுதி இருக்கிறார்.

ஏனெனில் அவர் வாத்தியார்.

Friday, December 17, 2021

கலவை - 17/12/2021

இந்தியா ஒரு ஜனநாயக நாடு இங்கு எல்லோரும் சமம் என நம்ப படுகிறது.

ஒருவன் விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருக்கும் வேளையில் விமான நிலைய மலசல கூடத்தில் சீறுநீர் அல்லது மலம் கழிக்க கட்டணம் எதுவும் கொடுக்க தேவை இல்லை.

ஆனால் ரயில் நிலையத்திலோ அல்லது பேருந்து நிலையத்திலோ மலசல கூடத்தில் கட்டணம் வசூலிக்க படுகிறது. 

விமான நிலையத்தில் கழிவறை பயன்பாட்டுக்கு கட்டணம் இல்லை என்றால் மற்ற போக்குவரத்து நிலையங்களிலும் இலவசமாக தானே இருக்க வேண்டும். 

அப்படி கட்டணம் வசூலிக்கப்படும் போக்குவரத்து நிலைய கழிவறைகளில் எத்தனை முறை , எந்தெந்த நேரங்களில் அவை சுத்தம் செய்ய படுகிறது என்ற விவரம் கிடைப்பதில்லை. 

கட்டணம் பணமாக தான் வசூலிக்க படுகிறது. அரசு முன்னெடுத்து செல்லும் திட்டமான UPI வழிக்க கட்டணம் செலுத்த வசதி இல்லை.  

கையில் சில்லறை காசு இல்லாதவர்கள் கழிவறை ஒப்பந்ததாரர்களின் வசவு சொற்கள் கேட்க வேண்டி இருக்கு. 

அதுவும் பேருந்து நிலைய கழிவறைகளில் மாற்று திறனாளி ஒருவர் போய் வர வேண்டுமென்றால் தர்ம சங்கடங்களை அனுபவிக்க வேண்டி வரும். 

போருந்து மற்றும் ரயில் நிலையத்தில் பெரும்பாலும் மாற்று திறனாளிகளுக்கான கழிப்பிடம் பூட்டியே இருக்கும். 

இது இப்படி என்றால்

சில இடங்களில் அரசு அமைத்திருக்கும் இலவச கழிவறைகளில் சிலர் மலம் கழித்துவிட்டு அது ஏதோ பிறர் பார்த்து பரவச பட வேண்டிய ஒன்று என நினைத்து நீர் ஊற்றி கழுவாமல் அப்படியே விட்டு விட்டு சென்று விடுகிறார்கள்.

(ஆம் பல சம்பவங்கள் நடந்திருக்கிறது)

# # # #

சிவாஜி கணேசன் நடித்த அருணோதயம் படத்தை கொஞ்ச நாட்களுக்கு முன்பு பார்த்தேன். 

அருமையான படம். 

இதனை மட்டும் கொரிய பட இயக்குநர்கள் பார்த்தால், கொஞ்சம் நகாசு வேலை செய்து அருமையான ஒரு Crime Thriller படம் எடுத்திருப்பார்கள்.

# # # # 

போன வாரம் வைகுண்ட ஏகாதசி சொர்க்க திறப்பு எல்லாம் நடந்திருக்கிறது ஆனால் அதனை பற்றி பிரக்ஞை இல்லாமல் இருந்திருக்கிறேன்.

ஏனென்றால் திருச்சி மாவட்டத்தில் மார்கழி மாதம் வந்தாலே எல்லோருக்கும் ஸ்ரீரங்க சொர்க்க வாசல் சுற்றியே பேசி கொண்டு இருப்பார்கள். பகல் பத்து தரிசனம் இரா பத்து தரிசனம் என திருவிழா போல் இருக்கும் ஸ்ரீரங்கம். 

கல்லூரி காலத்தில் இதில் தன்னார்வலராக பணியாற்றி இருக்கிறேன் என்பதால் வைகுண்ட ஏகாதசி என்றாலே மலரும் நினைவுகள் தான்.

ம்ம்ம்.

# # # #

சிலுக்கு ஸ்மிதா என்றால் யாரென தெரியாத தலைமுறை ஒன்று உருவாகி வளர்ந்திருக்கிறது.

அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

தட் என்ன மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம் மொமண்ட்

# # # #

ஆங்காங்கே பலர் சிலரை உனக்கு இங்க இடமில்ல பாகிஸ்தானுக்கு போ என கூச்சலிட்டு கொண்டு இருக்கிறார்கள்.

இது எங்கிருந்து பழக்கமாகி இருக்கும் அவர்களுக்கு என யோசித்து கொண்டு இருந்தேன்.

இதனை அவர்களுக்கு கற்று கொடுத்ததே விகடன் மற்றும் ஜெயகாந்தன் தான் என நினைக்கிறேன்.

1960கள் வரைக்குமே அவர்கள் படிக்கும் பத்திரிக்கையாக இருந்த விகடனில் ஜெயகாந்தன் "பாரீஸுக்கு போ" என்ற தொடரை எழுதினார். அதனை படித்து வளர்ந்தவர்கள் தான் இன்று "அந்த சிலரை" பாகிஸ்தானுக்கு போ, அரேபியாவுக்கு போ என சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.

அதனால் மொத்த வழக்கையும் ஜெயகாந்தன் & விகடன் மேல் எழுதிடணும்.

# # # # 

Saturday, November 13, 2021

Special Ops 1.5: The Himmat Story


Special Ops முதல் சீசன் பார்த்த எல்லோருக்கும் பிடித்த கதாபாத்திரம் ஹிம்மத் சிங் தான்.

உலகளவில் இந்திய ரா படையினரால் மேற்கொள்ள படும் பல்வேறு நிகழ்வுகளில் மூளையாக இந்தியாவில் உட்கார்ந்து செயல்ப்பட்டு கொண்டு இருப்பார்.

பார்க்கும் எல்லோரையும் வியப்பூட்டும் விதமாக அமைந்திருக்கும் அந்த கதாபாத்திரம். 

அதில் அவரது இளம் பருவத்தை பற்றி அதிகம் காட்டிருக்க மாட்டார்கள்.

Special Ops 1.5 - நான்கு எபிசோட்களை கொண்ட சீசன்.

இதில் ஹிம்மத் சிங்கின் இளம் பருவத்தை பற்றி பேசுகிறது. 

அதுவும் கதை சொல்வது அவராக இல்லாமல் மூன்றாம் நபரது பார்வை மூலமாக திரைகதை அமைத்திருப்பது காட்சிகளை பரபரப்புடன் நகர்த்துகின்றன. 

முக்கியமாக ஹிம்மத் சிங் வாழ்க்கையை பற்றி யாருமே எதிர் பார்க்காத ஒரு ரகசியத்தை இந்த சீசனில் சொல்லி இருக்கிறார்கள். 

சீசன் எத்தனை சுவாரசியமானது என்று கேட்டால்..... முதல் அத்தியாயத்தை பார்ப்போம் நன்றாக இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வாரத்தில் பார்த்து முடிப்போம் என தான் ஆரம்பித்தேன், ஆனால் அடுத்து என்ன அடுத்து என்ன என்று ஹிம்மத் சிங் பற்றி ஒருவர் கதை சொல்லும் போக்கில் போவதால் நாமும் கதை கேட்கும் சிறுவர்களாக மாறிவிடுகிறோம். மொத்தமாக பார்த்து முடித்து விட்டேன். 

முக்கியமாக பாராட்ட பட வேண்டியது திரைகதை மற்றும் படத்தொகுப்பும். 

முதல் சீசனை நீரஜ் பாண்டே சிவம் நாயர் என்பவருடன் இணைந்து இயக்கி இருந்தார். இந்த கிடைக்கிறது.

பாண்டே தனித்து இயக்கி இருக்கிறார். 

நாளை ஞாயிறு தவற விடாமல் பாருங்கள். உங்களுக்காக பிரச்சனைகளெல்லாம் திங்கட்கிழமையில் காத்து கொண்டு இருக்கின்றன. 

ஹாட்ஸ்டாரில் காண கிடைக்கிறது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மளையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் காண கிடைக்கிறது. ஆங்கிலத்தில் வசன உதவி கிடைக்கிறது. இலவசமாக பார்க்க உதவிய முகேஷ் அம்பானி மற்றும் ஜியோ நிறுவனத்திற்கு நன்றி.

Sunday, November 7, 2021

இளைய பிராட்டி குந்தவை II ஒவியர் பத்மவாசன் II பொன்னியின் செல்வன்

பெரும்பாலும் பொன்னியின் செல்வனை தொடராக வாசித்தவர்கள் பெரும்பாலும் பத்மவாசன் ஓவியங்களுடன் தான் வாசித்திருப்பார்கள். (மின் பதிப்பு, மொத்த நாவல் எல்லாம் இப்பொழுது தான் பரவலாக பயன்பாட்டில் இருக்கிறது)

முதலில் மணியம், பின் பத்மவாசன் தற்பொழுது சமீபத்தில் வேதா என்பவரது ஓவியங்களோடு பொன்னியின் செல்வன் தொடராக கல்கி வாரயிதழில் வந்தது. 

நான் என் பெரியம்மா சேகரித்து வைத்திருந்தவையில் இருந்து பத்மவாசன் ஒவியங்களோடு இந்நாவலை படித்தேன். அவர் மணியம் ஓவியங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் தொகுப்பும் ஒன்று வைத்திருக்கிறார் (தற்பொழுது என்னிடமிருக்கிறது). 

மூவர் ஒவியங்களோடும் வாசித்திருக்கிறேன் அதில் எனக்கு பத்மவாசன் ஓவியங்கள் தான் மிகவும் பிடித்த ஒன்று.

கோயில்களை கடவுள் சிறைகள் வரைவதில் சில்பியின் ஒவியங்களை மற்றும் பத்மவாசனின் ஒவியங்களோடு ஒப்பீட்டு பார்த்து ரசித்து லயித்தே இருக்கிறேன். 

அதிலும் இளைய பிராட்டி குந்தவை தனது மன கிடங்கை வல்லவரையன் வந்தியத் தேவனிடன் பகிரும் இரு சிறைகள் அத்தியாயத்தில் பத்மவாசன் அற்செல்வன்   வரைந்திருப்பார். சிறை கம்பிகள் வழியாக குந்தவை தனது கையை வந்தியத்தேவனிடம் தருவார். வாசிக்கையில் மயிர்கூச்சம் ஏற்பட்டது. படித்து 17 வருடங்களாக போகிறது இன்னும் பசுமையாக இருக்கிறது.

பொன்னியின் செல்வன் கதையை முற்றிலும் வேறொரு தளத்திற்கு கொண்டு போகும் பத்மவாசன் ஓவியங்கள். 

கம்பீரம், அழகு, அறிவு ஆகிய குணங்களை கொண்ட குந்தவையை அப்படியே தனது ஒவியங்களின் கொண்டு வந்திருப்பார். நந்தினிக்கும் அவ்வாறே. 

அப்படியான நிலையில் பொன்னியின் செல்வன் நாவலை வாசித்துவிட்டு குந்தவையாக த்ரிஷா நடிக்க போகிறார் என கேள்வி பட்டதிலிருந்து பயமாக இருக்கிறது. பலரது கற்பனையில் உயிருடன் இருக்கும் படைப்பை என்ன என்ன செய்து வைக்க போகிறார்களோ ?

பொன்னியின் செல்வன் II நந்தினி II ஊமை ராணி மந்தாகினி

ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி மற்றும் ஊமை ராணி / மாதரசி மந்தாகினி ஆகிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம்.

நந்தினி தன்னை சுற்றி இருக்கும் எல்லோரையும் தனது எண்ணப்படி யோசிக்க வைப்பார், ஒரு வித உளவியல் ரீதியான விளையாட்டு விளையாடுபவர். எப்பொழுதும் ஒரு மர்ம புன்னகையில் இருப்பார். அதனால் அந்த கதாபாத்திரத்திற்கு நடிப்பு திறன் அதிகமாக தேவை படாது, ஆனால் திறன் இல்லாமலும் அதில் நடிக்க முடியாது.

ஆனால் ஊமை ராணி தனது வாழ் நாள் முழுக்க காடுகளில் தனிமை வாழ்க்கையை வாழ்ந்தவர், பேச முடியாவிட்டாலும் கை அசைவு குறிப்புகளால் கோடிக்கரை பூங்குழலி இடம் மட்டும் பேசுவார். இதில் நடிக்க அதிக நடிப்பு திறன் வேண்டும். ஊமை ராணி ஒரு சிறந்த போராளி, உடல் வலிமை மிக்கவர்.

இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் வெவ்வேறு விதமான நடிப்பை வழங்க வேண்டும். ஐஸ்வர்யா ராய் அப்படியான சவாலான வேடங்களில் நடித்திருக்கிறாரா என தெரியவில்லை.

பொன்னியின் செல்வனை முழுமையாக வாசித்தவர்கள் எல்லோருக்கும் தெரியும் கல்கி தான் முழு கதையையும் சொல்வார். அவரது வார்த்தைகள் மூலமாகவே எல்லா கதாபாத்திரங்களுக்கும் வாசித்தவர்கள் அவர்களது மனதில் கற்பனை உருவம் ஒன்றினை தந்து அவற்றோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

படத்திற்காக நாவலின் திரைவடிவத்தை எழுதி இருப்பவர்கள் மணிரத்னம், ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமாரவேல் ஆகியோர்.

இதில் இளங்கோ குமாரவேல் மட்டும் பொன்னியின் செல்வனின் நாடக வடிவத்தை எழுதிய அனுபவமுண்டு. 

ஜெயமோகன் மற்றும் மணிரத்னம் பற்றி புதிதாக சொல்ல வேண்டியதில்லை. 

இந்த மூவரும் இணைந்து பொன்னியின் செல்வனை ஐ.ஆர்.20 பையன் என எடுத்து வைக்காமல் இருக்க வேண்டும்.

Thursday, November 4, 2021

அண்ணாத்த - மகாநடிகன்

2004ல் சத்யராஜ் நடிச்சு மகாநடிகன்னு ஒரு படம் வந்துச்சு. ஞாயித்து கிழமை அதுவுமா ஊர் சுத்த நண்பர்கள் யாரும் இல்ல, அதனால இந்த படத்துக்கு போகலாமுன்னு கிளம்பியாச்சு.

வெள்ளிகிழம தான் படம் வந்துச்சு, காலேஜ் இரண்டு நாள் லீவ்ங்குறதால படத்த பத்தி யார் கிட்டையும் எதுவும் கேக்க முடியல.

சத்யராஜ் நடிச்சு நடிகன் படம் செம காமெடியா இருக்கும், அதே மாதிரி மகாநடிகன்ன காமெடி இன்னும் இரட்டிப்பா இருக்குமுன்னு கிளம்பிட்டேன்.

காலைலேயே சோனா மீனா போயிட்டு முத ஆளா டிக்கெட் வாங்கிட்டு போயிட்டேன். டிக்கெட் வாங்க ஜாஸ்தியா ஆள் இல்லாதப்பவே உஷார் ஆகிருக்கணும். கூட்டம் நிறைய இருக்குமுன்னு நம்பி 30ரூபா கொடுத்து பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் வாங்கிட்டேன்.

படம் ஆரம்பிச்சதும் பாக்குறேன்... பர்ஸ்ட் கிளாஸ் எண்ணி 20 பேர் தான்.

நான் உட்கார்ந்து இருந்த வரிசை ல நான் மட்டும் தான் இருந்தேன்.  

படம் கதற கதற வைச்சு செஞ்சுருச்சு. முழு படம் முடிஞ்ச பிறவு தான் கதவ திறந்து விடுவான். வேற வழியில்லாம முழு படத்தையும் பார்த்துட்டு வந்தேன்.

மதியம் வீட்டு வந்தும் படம் பார்த்த தலைவலி போகல. 

வழக்கமா காலேஜ் ல ஒரு கூட்டமா தான் படத்துக்கு போவோம். இந்த படத்துக்கு நான் மட்டும் போய் மாட்டிகிட்டேன். 

சரி ஞான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமுன்னு எல்லா நண்பர்களும் போன் பண்ணி மகாநடிகன்னு ஒரு படம் போனேன் செம காமெடி சிரிச்சு சிரிச்சே வயிறு வலி வந்துருச்சுன்ன பார்த்துக்கோன்னு பிட் போட்டு விட்டேன். 

எதிர் பார்த்த மாதிரியே எல்லோரும் கூட்டம் போட்டு ஈவினிங் ஷோக்கு போயிட்டாங்க.

அடுத்த நாள் கிளாஸுக்கு போனப்ப ரவுண்ட் கட்டிட்டாங்க.... ஏண்டா படம் நல்ல இல்லன்ன சொல்லிற வேண்டியது தானே எதுக்கு கோர்த்து விட்டன்னு பஞ்சாயத்து.

அதுக்கு அப்பறம் ஒரு படத்த நான் நல்ல இருக்குன்னு சொன்னாலே இரண்டு வாட்டி யோசிச்சுட்டு தான் கிளம்புவாங்க.

சரி இப்ப என்ன அதுக்கு...?

அண்ணாத்த படம் வந்திருக்கு.... சும்மா நெகடிவ் கமெண்ட்ஸ் எல்லாம் கண்டுக்காத, போய் பாரு செம படமுன்னு உங்க கூட்டாளிங்க உங்களை உசுப்பேத்தி விடுவாங்க .

நம்பி வீக்யெண்ட்க்கு டிக்கெட்ட போட்டுறாதீங்க.

Thursday, October 14, 2021

வினோதய சித்தம் (2021) = முதல் தேதி (1955)

வினோதய சித்தம் : 

*

1955ல் சிவாஜி கணேசன் நடித்து முதல் தேதி என்று ஒரு படம் வந்தது. அப்படத்தில் நாயகன் தான் வேலை செய்யும் வங்கி திவால் ஆகிவிட்டதால் வேறு வேலை கிடைக்காத பயத்தில் காப்பீடு பணம் வருமே என தற்கொலை செய்து கொள்கிறான். எமன் தற்கொலை செய்வது என்பது மன்னிக்க முடியாத குற்றம் என அதனை ஏற்காமல் நாயகனை ஆவி ரூபமாக பூமி அனுப்புகிறார். ஆவி ரூபமாக தனது குடும்பம் படும் கஷ்டங்கள் அடமானங்கள் எல்லாவற்றையும் பார்த்து மனம் திருந்துகிறார். எமனும் மன்னித்து நாயகனுக்கு மீண்டும் வாழ ஒரு வாய்ப்பு தருகிறார்.  சுபம்.

இந்த சாதா மசாலா தோசையை மைசூர் மசாலா ஸ்பெஷல் தோசையாக மாற்றி கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்.

*

காலங்காலமாக எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் ஒரு பேராசை .... இன்னொரு தடவை வாய்ப்பு கிடைத்தால் நான் செய்த தவறுகளை எல்லாம் திருத்தி கொண்டு எல்லோருக்கும் பிடித்தமான பிரதியாக வாழ்வேன். ஆனால் உண்மையில் அப்படிபட்ட வாய்ப்புகள் யாருக்கும் கிடைப்பதில்லை.

இரண்டாம் வாய்ப்பு கிடைத்தாலும் அது  தவறுகள் செய்திருக்கிறான் என்கிற கவனத்துடனே வழங்க படுகிறது. 

ஆனால் நான் திருந்தி கொள்கிறேன் என்று ஒருவன் வருகிறான் என்றால் அவனுக்கு வழங்கபட்ட வாய்ப்பை சர்வ நாசம் பண்ணிவிட்டான் என்று அர்த்தம். 

உலகம் என்பது எல்லோரிடமும் இருந்து தொடங்குகிறது. இதனை புரிந்து கொண்டாலே பாதி 
பிரச்சனைகள் குறைந்து விடும். ஆனால் இதனை ஏற்க முடியாமல் தடுப்பது நாம் நம் மனதிற்குள் வளர்த்து வைத்திருக்கும் ஆசை & பிடிவாதம். இவை இரண்டும் ஒருவனை ஆட்டி படைக்கும் மாபெரும் சக்தி. 

அப்படி சிலரை புரிந்துகொண்டு விட்டோம் என நாம் நம்புவது எப்பொழுதென்றால் அவர்கள் நாம் கொண்டு இருக்கும் பிடிவாத நோய்க்கு அவர்கள் சாமரம் வீசும் பொழுது தான்.

மேற்சொன்ன சித்தார்ந்த விளக்கங்கள் இப்படம் பார்ப்பதினால் வருமா என கேட்டால், அப்படி எதுவும் வராது. இப்படத்தை பார்க்காமல் ஐந்து நிமிடங்கள் உட்கார்ந்து யோசித்தாலே போதுமானது.

படத்தில் காலன் நேரில் வருவதால் பரசுராமன் வாழ்க்கை ஏதாவது மாற்றம் நிகழ்ந்து இருக்கிறதா ? இல்லை. நடக்கின்றவற்றை பரசுராமன் ஏற்று கொள்ளாமல் இருப்பதே முக்கிய காரணம். மேலும் காலன் பரசுராமனுக்கு எதையும் புரிய வைக்கவில்லை, எல்லாவற்றையும் தெரியப்படுத்துகிறார். 

அதனால் நேரம் இருந்தால் படத்தை பாருங்கள். ஆனால் இப்படத்தை வாழ்க்கையை புரிந்துகொள்ள உதவும் என ஜிலேபி சுற்றுகிறவர்களை நம்பி பார்க்க வேண்டாம்.

அப்பா, அம்மா, உடன்பிறப்பு, பொண்டாட்டி என குடும்பத்தில் இருக்கிறவர்களெல்லாம் சொல்லி நீங்கள் திருந்தவில்லை என்றால், சத்தியமாக இந்த படம் பார்த்து திருந்த போவது இல்லை.

Tuesday, October 5, 2021

இராஜராஜ சோழன் II பொன்னியின் செல்வன் II மதுராந்தகம்

பொன்னியின் செல்வன் நாவலுக்கும் அல்லது சோழர்களுக்கும் எனக்குமே ஒரு மறைமுகமான பந்தமொன்று இருக்கிறது. 

சுந்தர சோழருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த உத்தம சோழர் என்று அழைக்க பட்ட  மதுராந்தகன் தனது ஆட்சி காலத்தில் செகற்பட்டு மாவட்டத்தில் (பழைய செகற்பட்டு மாவட்டம் - அதில் காஞ்சிபுரம் ஒரு பகுதியாக இருந்தது)     விவசாயம் செழிக்க மாபெரும் ஏரி ஒன்றினை உருவாக்கினார். பின்னர் அவரது பெயரிலேயே அந்த ஊரும் ஏரியும் அழைக்கபட்டு வருகிறது. இப்பொழுது செங்கற்பட்டு மாவட்டத்திலேயே இருக்கும் பெரிய ஏரி மதுராந்தக ஏரி. 

அப்பொழுது ஏரி உருவாக்கத்தில் ஈடுபட்டு இருந்த சோழர்களுக்கு கருங்குழியில் இருந்து உணவிற்கான அரிசி போய் இருக்கலாம். 

கருங்குழி சோழர்காலத்தில் பெரும் ஊராக இருந்து வந்துள்ளதாம். இதனை மா.கேசவன் எழுதிய "வரலாறுமிக்க கருங்குழி நூலில் காணலாம்.

கருங்குழியில் இரண்டு போர்கள் நடந்திருக்கிறது. குறிப்பு இல்லாத மாலிக் கபூர் தலைமையில் நடந்த மொகலாய படையெடுப்பு மற்றும் வந்தவாசி போரில் கருங்குழி கோட்டையை ஹைதர் அலியும் ஆங்கிலேயர்கள் மாறி மாறி கைபற்றி இருக்கிறார்கள். இதனை பற்றிய விரிவான தகவல்கள் தமிழக அரசின் தொல்லியல் துறை ஆவண ஏட்டில் இருக்கிறது. 

சரி இதில் நான் எப்படி வருகிறேன்...?

என் அப்பா பிறந்து வளர்ந்த ஊர் தான் கருங்குழி. என் தாத்தா அங்கு தான் அலுவலக வேலை, விவசாயம் மற்றும் அரிசி வியாபாரம் செய்து வந்தார். ஒரு வேளை இராஜராஜ சோழருக்கு எங்க குடும்பத்து முன்னோர்கள் சோறு கூட போட்டு இருக்கலாம். 

மதுராந்தகம் வட்டம் கருங்குழி கிராமம் தான் என் பூர்வீகம்.

இப்பொழுது தலைப்புக்கு இந்த விசைபலகை நடனம் பொருந்தி வருகிறதா ???

Monday, October 4, 2021

Couch Potato

Couch Potato - இன்றைய கார்ப்பரேட் உலகில் தவிர்க்க முடியாத ஒன்று கம்ப்யூட்டர் முன்னாடி எந்தவித நடமாட்டமும் இல்லாமல் உட்கார்ந்திருப்பது. 

சரி அது வேலை ஒன்று பண்ண முடியாது, என பலர் சொல்லி கொண்டு அதுக்கு தானே காலை அரை மணி நேரம் இராஜராஜ சோழன் கணக்காய் வீராவேசமாக நடக்கிறோம் என்று சமாதானம் செய்து கொள்கிறார்கள். 

அந்த அரை மணி நேரம் மட்டும் இல்லாமல் அலுவலகத்தில்  ஒவ்வொரு அரை மணி நேரமும் கொஞ்ச நிமிடங்கள் நடக்க வேண்டும். 

நீடித்த தொலைபேசி அழைப்புகளை நடத்தவாறு பேசுவது நலம்.

முக்கியமாக எந்நேரமும் போனில் வெப் சீரிஸ் பார்த்து கொண்டு இருப்பது உடல் நலத்திற்கு நல்லது இல்லை.  முக்கியமாக இதயத்திற்கு. 

மனிதர்களுடன் பழகுவது அவசியம் தான், உரையாடலும் மனத்திற்கு நல்லது தான், ஆனால் அந்த பழகுவது என்பதினை நிஜ உலகில் இல்லாமல் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றில் மேற்கொள்கிறார்கள். 

உலக சுகாதார மையத்தின் சமீபத்திய அறிக்கையின் படி உலகில் மனிதர்களின் இறப்பு எண்ணிக்கை அடுக்கேற்றம் முறையில் தான் கணக்கிட்டு பார்க்க வேண்டும்.

இது உடல் சார்ந்து மட்டுமல்லாமல் உள்ள சார்ந்த மன அழுத்தம் போன்றவற்றை கொண்டு வரும். 

அதே போல் உட்கார்ந்தே இருப்பதை விட நிற்பது உடலுக்கு நன்மை தரும் விஷயம்.

சொல்ல வருவது ஒன்றே ஒன்று தான் வேலை என்பதற்காக உட்கார்ந்தே இருப்பது நல்லது இல்லை.

எடுக்க வேண்டிய நகல் பிரதியை நீங்களே போய் நகல் பிரதியெடுப்பு இயந்திரத்தில் எடுக்கலாம். 

அலுவலகத்தில் இன்னொருவரை கைபேசியில் அழைத்து பேசுவதை விட நேரில் சென்று பேசலாம்.

இந்த முறை தான் எடுக்கப்பட வேண்டிய முடிவு இல்லை என்று இல்லை இது ஒரு ஆரம்பம் தான்.  

குறிப்பு - கடந்த நான்கு வருடங்களாக சமூக ஊடக பயன்பாட்டை முற்றிலும் குறைத்து கொண்டு விட்டேன். யூ டியூப் மட்டும் தான் தொடர்கிறது. அதனையும் குறைக்கும் முயற்சியில் இருக்கிறேன். தொலைகாட்சி தொடர்களை பார்ப்பதை விட்டு 20 வருடங்கள் ஆக போகிறது. வெப் சீரிஸ் வெளி வந்து விட்டது என்பதற்காக பார்த்தே தீர்வது என இருப்பது இல்லை, பொறுமையாக இரண்டு வருடம் எடுத்து கொண்டு கூட பார்ப்பேன்.

Saturday, October 2, 2021

பொன்னியின் செல்வன் II எம்.ஜி.ஆர். II மணிரத்தினம்

பொன்னியின் செல்வன் திரைப்படமாக வர போகிறது, எல்லோரும் கொண்டாடிய நாவலை எப்படி திரையில் வர போகிறதென்ற ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும் அதே சமயத்தில் பொன்னியின் செல்வன் நாவலின் முடிவுரையில் கல்கி அவர்கள் சட்டென தொடரை முடித்து பின்னாளில் இக்கதையை மேற்கொண்டு எழுத வருகிறவர்களுக்கு பல்வேறு குறிப்புகளை தந்திருப்பார்.

நாவல் மணிமேகலையின் மரணத்தோடு நிறுத்தபட்டு இருக்கும். 

குறிப்பு -  29 அக்டோபர் 1950ல் தொடங்கி 16 மே மாதம் 1954ல் நாவல் தொடர் முடிந்திருக்கிறது. நாவல் முடிந்த ஏழாவது மாதத்தில் 5டிசம்பர் 1954 கல்கி அவர்கள் மரணம் அடைந்தார். 

பொன்னியின் செல்வன் நாவலின் முக்கிய சம்பவமாக இருப்பது வீரபாண்டியனின் கொலை தான். வீரபாண்டியன் தப்பித்திருந்தால்  சரித்திரம் வேறு மாதிரி மாறி இருக்கும். 

மதுரையின் மீதான சோழர்களின் படையெடுப்பை வேறொரு கோணத்தில் பேசுவது தான் அரு.ராமநாதன் எழுதிய வீரபாண்டியனின் மனைவி.  

வரலாற்றின் படி வீரபாண்டியனின் மகனான சுந்தரபாண்டியன் தான் சோழர்கள் கைப்பற்றிய மதுரையை மீட்டார்.

பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க எம்.ஜி.ஆர். பல முயற்சி எடுத்தார், ஒரு தரம் படத்திற்கான புகைப்படங்கள் எடுக்கும் வரையில் போய் நின்று இருக்கிறது.

முயற்சி தோல்வியடைந்தாலும் அவருக்கு இந்த பாண்டிய - சோழ வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வம் இருந்த படியால், பொன்னியின் செல்வன் பேசிய வரலாற்றில் அடுத்த கட்டமான  பாண்டியர் மதுரையை மீட்டத்தை அடிப்படையாக கொண்டு அகிலனால் எழுத பட்ட கயல்விழி என்ற நாவலை அடிப்படையாக கொண்டு மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்னும் படத்தை எடுத்தார்.

சோகமென்னவென்றால் அப்படத்தின் தரமான் பிரதி தற்பொழுது காண கிடைப்பதில்லை.

இப்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எப்படி கொண்டு போய் எப்படி முடிப்பார்கள் ?

எப்படியும் முதல் பாகம் ஆதித்த கரிகாலன் மரணத்தோடு முடியும். அப்பொழுது தான் விறுவிறுப்பாக அடுத்த இரண்டாம் பாகத்திற்கான வரவேற்பு களத்தை உண்டாக்க முடியும். இதே போன்ற யுத்தியை தான் பாகுபலியிலும் கையாண்டார்கள்.

பொன்னியின் செல்வன் முடிந்த கையோடு பாண்டியர்களின் எழுச்சியை திரைப்படமாக எடுத்தால் நன்றாக இருக்கும்.

பணம், திறன் எல்லாம் இருந்தாலுமே கல்கியின் வார்த்தைகளுக்கு உயிர் தருவது கடினமான காரியம். 

பொன்னியின் செல்வன் நாவலின் சிறப்பே ஒவ்வொரு முறையும் அதனை படிக்கும் பொழுது வாசிக்கும் நபரை அந்த கதையின் ஒரு அங்கமாக மாற்றிவிடும் வல்லமை கல்கியின் எழுத்துக்களுக்குண்டு. அவை தற்போதைய திரைகதை ஆசிரியர்களுக்கு இருக்கிறதா ???

தெரியவில்லை. காத்திருந்து பார்ப்போம்.

Tuesday, June 22, 2021

மதன் கௌரி II MADAN GOWRI II KOKRU II YOUTUBE


நேற்று பிரபல யூ ட்யூப் காணொளியாளர் மதன் கௌரி  தனது செய்தி செயலி பற்றி தனது காணொளியில் அறிமுக படுத்தி இருந்தார். உரலி - https://youtu.be/CkIOuAGF3Hc 

 அவரது காணொளிகளை தொடர்ந்து கண்டு வருபவன் என்பதால் ஒரு ஆவலில் பதிவிறக்கம் செய்து பயன் படுத்தி பார்த்துவிட்டேன். 

செயலியின் பெயர் KOKRU.தமிழில் எழுதினால் கொக்ரு என்று இருக்கலாம்.

செயலியின் முதல் ஏமாற்றம் எனது கைபேசி எண்ணை வைத்து பதிவு செய்ய முடியாதது. கூகிள் கணக்கையோ அல்லது ஃபேஸ்புக் கணக்கையோ வைத்து தான் பதிவு செய்ய முடிகிறது. இதனை பற்றி அந்த செயலியில் இருக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பக்கத்தில் போய் பார்த்தால் நமது தகவல்களை பற்றிய குறிப்பில் "இது உங்கள் சொத்து..." என எழுதி விட்டு நம்மை படிக்க வைப்பது போலுள்ளது. 

நமது மொழி & விருப்பம் சார்ந்து செய்திகளை நமக்கு காட்ட படுகிறது. அந்த செய்திகள் எல்லாம் தொடர்ச்சியாக செல்லாமல், ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்புவது போல் உள்ளது. 

DARK BACK GROUND - எனக்கு பிடிக்காத ஒன்று. இதனை மாற்றி கொள்ள வாய்ப்பில்லை. மற்ற செயலிகளின் தேவை பட்டால் பின்னணி நிறத்தை மாற்றி கொள்ள முடியும்.

DailyHunt என்கிற செய்தி செயலி போன்றே உள்ளது,

இந்த செயலி நான் கவர்ந்த விஷயம் புகழ்பெற்ற Reuters நிறுவனத்தின் செய்திகளை பார்க்க முடிகிறது. இந்நிறுவனம் செய்தி உலகின் தாத்தா மாதிரி. கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். 

இந்த செயலியின் வருமானம் என்பது  எந்த இணையதளத்தின் (தினதந்தி, தினமலர், இந்து தமிழ் திசை .....) செய்தியை படிக்க படுகிறதோ, அந்நிறுவனங்களில் இருக்கு தரகு பணம் இந்த செயலி நிறுவனத்திற்கு கிடைக்கும். 

பயன் படுத்த ரொம்ப எளிதாக இருக்கிறது. செயலியை பயன் படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக விளம்பரங்கள் வர வாய்புள்ளது.

இவர்களது நிபந்தனைகளை படிக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

"The right to access – You have the right to request Our Company for copies of your personal data. We may charge you a small fee for this service."

நமது தனிப்பட்ட தகவல்களை இவர்கள் எந்த பணமும் கொடுக்காமல் எடுத்து கொள்வார்களாம், ஆனால் அதனை திரும்ப கேட்டால் பணம் கட்ட வேண்டுமாம். நல்ல நியாயம். 

இது போல பலது உள்ளன. எல்லாவற்றையும் படியுங்கள். 

மற்ற செயலிகள் உள்ளது போலவே இதிலும் உள்ளது. மேலும் இந்த செயலி நமது கைபேசிக்கு என்ன செய்யும் என்பதை அவர்களே சொல்லி இருக்கிறார்கள். கடைசி திரைச்சொட்டில் காணுக.

மேலும் இந்த செயலியை பயன் படுத்துவதின் மூலம் உங்கள் தகவல்கள் திருடு போக வாய்ப்பு இருக்கிறதே என புரட்சி சிந்தனை வேண்டாம். ஃபேஸ்புக் மற்றும் கூகிளை பயன் கொண்டு இருந்தாலே உங்க தகவல்கள் எதுவும் பாதுகாப்பாக இல்லை என கொள்க.

குறிப்பு - என் தகவல்களை வைத்து அப்படி என்ன செய்து விடுவார்களென்று தெரியவில்லை. ஏய் கம்பெனிகாரா என் டிடெயில்ஸ் எல்லாம் கால் காசுக்கு கூட வராது. நம்பி ஏமாந்து போயிறாதே.


Sunday, June 20, 2021

கலவை - 20/06/2021

Mantra - Sounds of Silence என்கிற ஆவண படத்தை பார்த்து கொண்டு இருக்கிறேன். அதில் மந்திரம் மட்டும் தான் மனதின் அமைதிக்கு அழைத்து செல்லும் என்பது போல் ஒரு வெளிநாட்டு அம்மணி பேசி கொண்டு இருக்கிறார். 

சிறு வயதிலிருந்த என் அப்பா "மந்திரம் ஆவது நீறு..." பாடுவதை கேட்டு தான் வளர்ந்திருக்கிறேன். அந்த பாடலை அவரது குரலில் கேட்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. 

அதே போல் என் அண்ணனின் மகள் சிறு வயதில் காயத்ரி மந்திரம் அழகாக பாடுவாள். அதுவும் எனக்கு பிடித்த ஒன்று. 

மேல் சொன்ன இரண்டிலும் பாடலை விட அந்த பாடலை பாடியவர்கள் மீது இருக்கும் அன்பே அந்த பாடலை பிடிக்க செய்தது. அடிக்கடி அவர்கள் பாடி கேட்ட பொழுது அது ஒன்றும்  அமைதியை தந்தது இல்லை. 

சமீப காலமாக The Beatles குழுவினரது Here Comes The Sun பாடல் தான் என்னை தினமும் தூக்கத்திலிருந்து எழுப்பபி மன அமைதியை தருகிறது. 

அதனை தொடர்ந்து Jay & The Americans குழுவினரது Come A Bit Closer பாடல், Carl Douglas பாடிய Kung Fu Fighting, John Denver பாடிய Take Me Home, Country Road ஆகிய பாடல்களை எல்லாம் ஒரு தரம் கேட்டுவிடுவேன். 

அப்படி ஒரு சுற்று போய் வருவதற்கு "கிரீஸ் டப்பா எப்படி உதச்ச...." என்ற நாள் பொழுது சந்திக்க மனம் தயார் ஆகிவிடும். 

கிளப் ஹவுஸை இன்று சுற்றி கொண்டு இருக்கும் பொழுது ஒரு குழுவில் அதிகாலையில் உங்களை உற்சாகமூட்டும் பாடல் எது என்று பேசி கொண்டு இருந்தார்கள். 

வழக்கம் போல் எதிர்ப்பார்த்த படி பாடல்களை சொல்லி கொண்டு இருந்தனர். 

நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சியின் போது எப்பொழுதும் எதாவது விவாதம், பேருரை அல்லது ஒலி புத்தகம் தான் கேட்பேன். ஆனால் எல்லாவற்றுக்கும் முன்பாக RedBone குழுவினர் பாடிய Come And Get Your Love பாடலை கேட்க தவறவிட மாட்டேன். 

அதனால் இது எல்லாம் எனக்கு மன அமைதியை தரும் பாடல்கள். 

எந்த ஒரு விஷயம் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறதோ அதுவே மன அமைதியை தரும். அவை மந்திரங்களாக இருக்க வேண்டும் என்று இல்லை.

- - -

சமீப காலமாக இந்திய சந்தையில் Sectoral Fund & Thematic Fund (துறை சார்ந்த & அடிப்படையிலான நிதி) ஆகிய பரஸ்பர நிதி (Mutual Fund) திட்டங்கள் அதிக லாபகத்தை ஈட்டி தந்திருக்கிறது. ஆனால் இதில் சங்கிலி தொடர் சந்தை அபாயமும் இருப்பதால், கவனத்துடன் முதலீடு செய்யவும். 

சில நிபுணர்கள் என்ன சொல்கிறார்களென்றால் நீங்கள் பலதரப்பட்ட நிதி திட்டத்தில் (Diversified Fund) முதலீடு செய்திருந்தால், அதன் நிதி மேலாளரே தேவையான நேரத்தில் லாபம் தரும் துறையில் முதலீடு செய்வார்களாம், இதற்கென்று தனி திட்டம் பக்கம் போக வேண்டுமாம். 

தற்பொழுதுள்ள சூழ்நிலையில் துறை சார்ந்த நிதி திட்டங்களில் முதலீடு செய்வது நல்லதென்றே தோன்றுகிறது.

- - -

பல நாட்கள் கழித்து சாண்டில்யன் அவர்களெழுதிய ஜல தீபம் நாவலை வாசித்து கொண்டு இருக்கிறேன். சாண்டில்யன் நாவல்களென்றே இருக்கும் தனி உலகத்தில் உலாவுகிறேன். அதொரு தனி சுகம்.

- - -

Crypto Currency சம்பந்தமாக என்ன மாதிரியான சட்டங்கள் வரும், அதற்கான வரி விதிப்பு எப்படி இருக்கும் என்று முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக அறிக்கை சொல்கிறது. 

இதனை வழக்கத்தில் இருக்கும் Demat Account கணக்கின் கீழ் கொண்டு வருவார்கள் என்றே நினைக்கிறேன். 

சந்தையில் இதில் முதலீடு செய்வோர்களின் எண்ணிக்கை, அது தரும் லாபம் என இரண்டும் அதிகம் இருப்பதால் , பெரும் நிறுவனங்கள் இதனை விட மாட்டார்கள்.

- - -

YouTube ல் ராடன் நிறுவனத்தார் இலவசமாக ரொம்ப காலம் முன்பு வந்த சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரின் அனைத்து பாகங்கள், அதன் அத்தியாயங்கள் பதிவேற்றி இலவசமாக பார்க்க கொடுத்திருக்கிறார்கள். 

அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று. அதுவும் பட்டாபி என்ற கதாப்பாத்திரத்திற்காக பார்த்து கொண்டு இருக்கிறேன். 

டிக்டாக் பிரபலம் சுரேஷ் பாபு அவர்கள் தனது காணொளிகளை தனது SURESH Babu 250 என்கிற சேனலில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

அதில் அவர் சொல்லும் சுட்டி கதைகள், மன நலம் பாதிக்கப்பட்ட அவரது தம்பியுடனான அவரது உரையாடல் பார்க்க பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது.

- - - 

லோகி இணைய தொடரின் அடுத்த அத்தியாயம் வந்துவிட்டது. இதில் லோகி தன்னுடைய மேம்படுத்தப்பட்ட மற்றொரு லோகியை டைம் வெரியன்ஸ் அத்தாரிட்டின் அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு பரபர என துரத்தி கொண்டு செல்கிறார். ஆனால் கடைசியில் உச்சகட்ட திருப்பத்தை வைத்து பார்ப்போரின் ஆவலை அதிக படுத்தி இருக்கிறார்கள். 

ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.

- - -

Sunday, June 13, 2021

கலவை – 13/06/2021

தகவல் பரிமாற்றத்துக்கு பல விஞ்ஞான வளர்ச்சிகள் வந்துவிட்ட நிலையில் ஒரு காலத்தில் அதற்கென இருந்த ஒன்றை பற்றி பலரும் இன்றளவில் மறந்துவிட்டனர்.

அது இன்லேண்ட் லேட்டர்.
இன்று நாம் தொலைபேசி / கைபேசி, ஈமெயில் ஆகியவற்றில் பல விஷயங்களை பரிமாறி கொண்டாலும் ஒரு இன்லேண்ட் லெட்டரில் நலம் விசாரித்தலுக்கு ஈடாகாது. இடம் குறைவாக இருந்தாலும் சுருக்கி எழுத்தின் அளவை குறைத்து , எழுத எழுத எதோ ஒன்றை மறந்துவிட்டோமே, சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோமா என பதைபதைப்புடன் எழுதிய ஒரு தலைமுறை இப்பொழுது அதனை தங்களது ஞாபக அடக்கில் எங்கு இருக்கிறது என தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அதுவும் கல்யாணம் ஆகி வேறு ஊருக்கோ வேறு மாநிலத்திற்கோ வந்து விட்ட பெண்கள் எல்லோரும் தங்களது அம்மாவிற்கு எழுதிய கடிதங்களில் “மணி பதினொன்னு ஆகிருச்சு... அடுப்பு ல இப்ப தான் சாம்பார் வைச்சுட்டு வந்தேன், கொஞ்சம் இருமா யாரோ கூப்பிடுறாங்க ....” என எழுதிவிட்டு கொஞ்ச நேரம் கழித்து வந்து ...” பக்கத்து வீட்டு அக்கா தான் கூப்பிட்டாங்க கொஞ்சம் தயிர் வேணுமுன்னு கேட்டாங்க.... “ என தினசரி வாழ்வை கடிதங்களில் பதிவு செய்தவர்கள் பல. 

இன்னும் சில வீடுகளில் அந்த கடிதங்களை பாதுகாப்பாய் வைத்திருப்பார்கள், அந்த நாளைய வாழ்க்கையை அந்த கடிதம் படிக்கும் பொழுதெல்லாம் மீண்டும் வாழ்ந்து விட்டு வருவார்கள்...

 அந்த கொஞ்ச நிமிடங்களுக்கு கல்யாணமாகி புதிதாய் வேறு ஊருக்கு வந்த பெண்ணாய் மாறி இருப்பார்கள். என்றோ இறந்துவிட்ட தங்களது  அம்மாவை உயிருடன் அழைத்து வந்து பேசி கொண்டு இருப்பார்கள். 

அவர்களே இப்பொழுது பேர குழந்தைகள் பார்த்துவிட்ட பாட்டிகளாக இருந்தாலும், ஒவ்வொரு கடிதத்தை படிக்கும் பொழுது தங்களது அம்மா உடன் பேசுவதாக உணர்வார்கள்.

அந்த உணர்வை இப்பொழுதுள்ள விஞ்ஞான முன்னேற்றங்களால் தர முடியாது.

தபால்காரரை எதிர் நோக்கி காத்துகொண்டு இருந்த பரவச நிமிடங்களும் மனிதர்களுக்கு இனி கிடைக்குமா என்பது சந்தேகமே. 

= = =

தொகுப்பு வார்த்தையாளர் அரச தலை அணிகலக்காரன் அரசன்வேடிக்கைகடவுள் ClubHouse என்கிற செயலிக்கு சொல்லகம் என்று தமிழில் பெயர் வைத்துள்ளார். அவ்வாறு செய்வது ஒருவனை உபயோகிக்கும் பொருளுக்கு அவனது வசதிக்கேற்ப அவனது மொழியிலேயே பெயர் வைத்து பயன்படுத்தி கொள்வது உலக நடப்பில் இருப்பது தானே. 

இதனை அவர் தனது வடிவ பனுவல் பக்கத்தில் எழுதிய பிறகு ஏன் அதனை அத்தனை சண்டை என புரியவில்லை. 

மேலும் இதனை முன் வைத்து அவர் ஒரு வார்த்தைகளின் அச்சு பிரதி ஒன்றை எழுதிட வேண்டும். 

ஆயிரம் இருந்தாலும் அரச தலை அணிகலக்காரன் அரசன்வேடிக்கைகடவுள் அவர்கள் சொல்வதிலும் ஒரு அர்த்தம் இருக்க தான் செய்கிறது.

= = =

The Family Man என்கிற இணைய தொடரின் Season 2 நேற்று காற்றுசொல் (Airtel – நன்றி இராஜ தலை அணிகலக்காரன் அரசன்வேடிக்கைகடவுள்) நிறுவனத்தின் உதவியால் பார்த்தேன்.

பரபரப்பான களத்தில் கதை நகர்கிறது. கதையின் சிறப்பு செல்லம் சார் தான். 
முதல் பாகத்தில் ஸ்ரீகாந்த் திவாரியின் குடும்ப வாழ்க்கையை பற்றி பேசிவிட்டதால், இதில் சம்பவங்களை மைய படுத்திய காட்சிகள் நகர்கிறது. 

மூன்றாம் பாகத்தில் ஸ்ரீகாந்த்  திவாரி எந்த பிரச்சனையை சமாளிக்க போகிறார் என்பதை சொல்லி எதிர் பார்ப்பை அதிக படுத்தியுள்ளனர்.

வழக்கம் போல விமர்சனம் செய்கிறேன் என்கிற பெயரில் சமந்தாவின் குடும்பத்தை தரைகுறைவாக பேச சிலருக்கு யார் உரிமை கொடுத்தது என்று தெரியவில்லை. சமந்தா என்று இல்லை அதில் நடித்த நடிகர்களின் குடும்பத்தை தரைகுறைவாக பலர் பேசி கொண்டு இருக்கிறார்கள். 

அவர்கள் அப்படி தரைகுறைவாக விமர்சனம் செய்வது எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.” நான் விமர்சனம் செய்கிற பெயரில் இன்னொரு குடும்பத்து பெண்களை அசிங்கமாக பேசி / எழுதி இருக்கிறேன் “ என சொல்லி அவரது அம்மா , மனைவியிடம் அதனை காட்டுவார்களா ? 

= = =

The Heritage Of Kashmir என்ற ஆவண படத்தை பார்த்தேன். காஷ்மீரில் இருக்கும் பழங்கால கோயில் பற்றியது அது. கோயிலின் சிறப்புகளை மட்டும் சொல்லாமல் அதனை சார்ந்த வரலாற்றையும் சேர்த்து சொன்னது தான் முக்கிய அம்சம். 

அவந்திவர்மன் ஆட்சி, 840கிலோ தங்கதால் செய்யப்பட்ட விஷ்ணு சிலை என பல விஷயங்களை பேசுகிறது.

= = =

மார்வெலின் லோகி இணைய தொடரின் முதல் பாகம் கடந்த ஒன்பதாம் தேதி வெளிவந்திருக்கிறது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் ஒரு இடத்தில் லோகி டெஸெராக்ட்டை திருடி கொண்டு மறையும் இடத்தில் இருந்து இந்த கதை ஆரம்பிக்கிறது.
அப்படி மறைந்து தப்பித்து போன இடத்தில் டைம் வேரியன்ஸ் அதாரிட்டி என்ற அமைப்பிடம் சிக்கி கொள்கிறார்...

அங்கு தானோஸ் எதற்காக சண்டை போட்டாரோ அந்த இன்பினிட்டி ஜெம்ஸை Paper Weightஆக டைம் வேரியன்ஸ் அதாரிட்டில் பயன்படுத்துகிறார்கள். 
அவர்கள் லோகியிடம் சொல்லும் வேலையில் பரபரப்பு தொடங்குகிறது....

முதல் அத்தியாயம் முடிகிறது.

= = =

சமூக இணையதளங்களின் மீதான வலுவான சட்டங்கள் வர போகிறது. 
இந்த நிலையில் சில நிறுவனங்கள் தங்களது பயன்பாட்டாளர்களின் தகவல் பாதுகாப்பு பற்றி கவலை படுகிறார்கள். 

கூகிளில் ஒன்றை பற்றி தேடிவிட்டு ஃபேஸ்புக்கிற்கு வந்தால் அந்த பொருளின் விளம்பரம் தான் நம்மை வரவேற்கும்.

மண்டை மேல இருக்குற கொண்டைய மறைக்க தெரியல பாரேன் இவங்களுக்கு. 

= = =

Thursday, June 10, 2021

THE FAMILY MAN II SAMANTHA II CLICK BAIT

தட் யோகியன் வரான் சொம்பை தூக்கி உள்ள வை மொமண்ட்

சமந்தா, ஃபேமிலி மேன் இணைய தொடர் ஈழ விடுதலை போராளிகளை அவமான படுத்துகிறது என்பது ஏற்று வேண்டிய ஒன்று என்றாலும் அதை சொல்ல இவர்கள் ஏன் கவர்ச்சிகரமான படத்தை பயன் படுத்த வேண்டும் ?

Click Bait - இணையம் பிரபலமான காலத்திலிருந்து இந்த வார்த்தை பிரயோகம் பிரபலமாகி கொண்டு இருக்கிறது. இணையத்தில் பார்த்த உடன் அதில் என்ன இருக்கிறது என்று பார்க்க தூண்டுவது தான் கிளிக் பைட் .

இவர்கள் முன் வைக்கும் கருத்து மக்களை சென்றடைய கூட ஒரு கவர்ச்சி படத்தை பயன் படுத்துகிறார்களே.... 

அப்பொழுது இவர்களது கருத்து என்ன தரத்திலிருக்கும் என்று யோசிக்க வைக்கிறது.

Tuesday, June 8, 2021

CLUBHOUSE II கிளப் ஹவுஸ்

இத பத்தி தெரிஞ்சதும் உடனே டவுன்லோடு போட்டுட்டு .... ஒரு ரூம் ல போய் அமைதியா உட்கார்ந்தேன்.

பஞ்சவர்ண கிளி ஒரு காலத்துல வர்ணமே இல்லாம இருந்துச்சுன்னு பேசிட்டு இருந்தாங்க. 

சரி பரிணாம வளர்ச்சி அது இதுன்னு அறிவா பேசுறாங்கன்னு உட்கார்ந்து கேக்க ஆரம்பிச்சா ...

ஒருத்தர் ஒரு நடிகர் இந்த மாதிரி சொல்லிருக்காருன்னு பேசிட்டு இருந்தவர் சொன்னாரு..

உடனே ஒரு பொண்ணு இருங்க நான் போய் ரிசெர்ச் பண்ணிட்டு வரேன்னு சொன்னாங்க...

சரி பெரிய படிப்ஸ் போல இருக்கீன்னு நினைச்சேன்... புஸ்தகத்துல தேடி பார்பாங்க போலன்னு நினைச்சேன்.

கொஞ்ச நேரம் கழிச்சு கூகிள் ல தேடி பார்த்தேன் அப்படி எதுவும் இல்லையேன்னு அந்த அம்மணி வந்து சொன்னாங்க.

மிருதங்க சக்ரவர்த்தி சிவாஜி கணேசன் நிலைமைக்கு போயிடுவோமோன்னு பயந்து அந்த ரூம் ல இருந்து இன்னொரு ரூம்க்கு போனேன்...

அரசியல் பேசுற குரூப் போல ... சரி வாழ்வியல், கோட்பாடு, கொள்கை முரண்னு கம்பு சுத்துவாங்கன்னு நினைச்சா அப்படி இருக்க கூடாதுன்னு நினைக்குறேன்... இடம் எல்லோருக்கும் கொடுக்கணுமுன்னு இட ஒதுக்கீடு பத்தி பேசிட்டு இருந்தாங்க. மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கைய வடை வடையா சுட்டுட்டு இருந்தாங்க. இட ஒதுக்கீடு பிரச்சனைய சரி செய்ய அழி ரப்பர் போதுமுங்குற மாதிரி பேசிட்டு இருந்தாங்க.

இத தவிர்த்து உடற்பயிற்சி பத்தி ஒரு குரூப் ல பேசிட்டு இருந்தாங்க. அது நமக்கு தேவை இல்லாத ஆணின்னு நெய் ரவா தோசை சாப்பிடுறத பத்தி எதாச்சு குரூப் இருக்காங்க தேடி பார்த்தேன்... அப்படி எதுவும் இல்ல.

எல்லாம் live conversation என்பதால் எல்லோரும் தங்களை பெரிய அறிவாளியா காட்டிக்க ரொம்ப கஷ்ட படுறாங்க.... கூகிளும் கையுமா சுத்துறாங்க.

கூகிள் ல இல்லாட்டி அது எதுவும் உண்மை இல்லைன்னு நினைக்குற குரூப் சுத்துற இடம் கிளப்ஹவுஸ்.

செம எண்டர்டெயின்மெண்ட் கிடைக்கும் கிளப்ஹவுஸ் ல.

Don't miss it.

2004ல அறிவாளிதனம் என்பது சமூக இணைய தளத்தில் விஞ்ஞான வளர்ச்சி வளர வளர கூடவே வளருமுன்னு சொல்லிட்டு வெறுப்பு ல யாகூ மெசஞ்சர விட்டு வெளிய வந்தேன்.... இப்ப அதே விஞ்ஞானம் கிரிஸ் டப்பாவ எப்படி உதச்சன்னு கேக்குது.

Sunday, June 6, 2021

நீச்சல் II தொடர்கதை II அத்தியாயம் - 2 II தெய்வ தன்மைகள் இல்லாத ராமாயண கதை II Real Life Ramayanam

நீச்சல் II தொடர்கதை II 

அத்தியாயம் – 2

உளவு என்பது சக்கரவர்த்தியின் நேரடி கண்காணிப்பில் வருவதால், அது தொடர்ப்பான எந்த சந்திப்பிலும் அனுமதியின்றி யாரும் கலந்துகொள்ள கூடாது என்பது யாரும் மீற கூடாது சட்டம். ஆதலால் சூர்ப்பனகை ஞானமுருகு இலங்காதிலகம் மற்றும் அதிமலையனது அமைதியை புரிந்து கொண்டு இராவணன் சொல்லும் முன் தானே வெளியில் வந்துவிடுவது நல்லது என வெளியில் வரும் பொழுது தான் அதிமலையனது கையில் இருந்த ஏட்டில் இருந்த பெயரை கண்டுடன் ஸ்தம்பித்து நின்று விட்டாள். 

அப்படி அவள் நிற்கவும், அதிமலையன் ஏதோ விவரங்களை சொல்லி கொண்டபடியே ஏட்டை இராவணனது கையில் கொடுக்கும் பொழுது தான் அந்த யாரும் எதிர் பார்க்காத ஒன்று நிகழ்ந்தது.
இராவணனது அரண்மனை சிகிரியா நகரத்தின் மையத்தில் அமைந்திருந்தது.

 பொது மக்கள் வாழும் குடியிருப்பு பகுதி,  கோட்டை சுவர், கோட்டை சுவரில் இருந்து அரண்மனை வரைக்கும் காலி இடம். ஒரு பதின் பருவ ஆண் அரண்மனைக்கு போக வேகமாக ஓட ஆரம்பித்தால், அவன் அரண்மனை கோட்டை சுவரை சுற்றியுள்ள அகழி பகுதியை அடைய இருபது நிமிடங்களாகும். இந்த காலி இடத்தினை திருவிழா,வெளிநாட்டு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கான மாத சந்தை, போர் பயிற்சி ஆகியவை நடந்த பயன் படுத்த பட்டது. மேலும் நகர குடியிருப்பு பகுதிக்கு சென்று வர  ஒரு வழி தான். நகரத்தை சுற்றி அடர்ந்த காடு.

இரவாணன் உளவு துறை சம்பந்தமான ரகசிய கூட்ட சந்திப்பை எல்லாம் தென் பகுதியில் இருந்த ஆலோசனை கூட்ட மாளிகையில் வைத்து கொள்வான். இந்த ஆலோசனை மாளிகை அரண்மனை கோட்டையின் தெற்கு வாசலை ஒட்டி இருந்தது. உளவாளிகள் எப்பொழுதும் காட்டின் வழியாக  வந்து தென் பகுதியில் இருந்த ரகசிய வாயில் வழியாக வந்து போவார்கள். இந்த வழியில் வந்து போகிறவர்களது பாதுகாப்பிற்காக பலவகையான மரங்கள் மற்றும் பூச்செடிகள் கொண்ட அடர்ந்த தோட்டம் அமைக்க பட்டு இருந்தது.
உள்நாட்டு பதவி பூசல்கள், அயல் நாட்டு அபாயங்கள் என இலங்காபுரியை சுற்றி ஆபத்து நிறைந்திருந்தது. இவைகளை சமாளிக்க இராவணன் மற்றும் ஞானமுருகு இருவரும் சேர்ந்து ஒர் வலிமையான உளவுப்படையை உருவாக்கி இருந்தார்கள்.

அடிமையாய் விற்கப்பட்டு புரட்சி நிகழ்த்தி போர் புரிந்து உலகளவில் மக்கள் வாழ விரும்பும் நாடாக இலங்கையை ஆக்கிய நாள் வரையில் இருவரும் அவர்களது சுவாசமாக இலங்கை இருந்தது.
மக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்காகவும் உளவு அமைப்புகள் பல வற்றை இராவணன் ஏற்படுத்தி இருந்தான். அதனை இருவரும் தங்களது நேரடி கண்காணிப்பில் வைத்திருந்தனர். அப்படி ஒரு அமைப்பு தந்த குறிப்பை பற்றி பேசும் பொழுது தான்அந்த பயங்கரமான நிகழ்வு நடந்தது. 
மறைவில் நின்ற சூர்பனகை தான் அதனை கவனித்தாள். காற்றை கிழித்தபடி அந்த அம்பு இராவணனை நோக்கி வந்தது. 

“அண்ணா ..... “ என சூர்பனகை சத்தம் போடவும் சுதாரித்த இராவணன் சட்டென்று குனிந்தான் , அவ்வாறே மற்ற இருவரும் குனிந்தனர்.
அம்பு வந்த திசையை நோக்கிய சூர்பனகைக்கு சாளரத்தின்  வழியாக தெரிந்த மர கிளையில் இருந்து யாரோ குதித்து ஓடியது போல் தெரிந்தது. 

அறையில் இருந்த அவசரகால மணியை அடித்தான். இரவின்  ஆழ்ந்த அமைதினூடே அந்த ஒசை கோட்டை வாயிற்காவலர்களுக்கு கேட்டது.  அப்படி மணி கேட்ட உடன் என்ன செய்ய வேண்டும் என முன்பே படை தளபதியால் சொல்ல பட்டு இருந்ததால் கோட்டை கதவுகளை மூடினார்கள்.மூடிய  உடன் பத்து பேர் கொண்ட சிறுபடை வேல்கம்புகளுடன் தயாராக இருந்தனர். அப்படி தயாரான உடன் தலைமை காவலாளி இரட்டை தீப்பந்தங்களை பற்ற வைத்து இரு கைகளில் பிடித்தபடி அரை வட்ட முறையில் காற்றில் சுழற்றினான். அவ்வாறு சுழற்றினால் தயார் நிலையில் இருக்கிறோம் என்று பொருள். 

கோட்டையின் தலைமை காவலாளி ஔதடனுக்கு இன்று நடப்பது எல்லாம் வித்தியாசமாக இருந்தது.

 வழக்கத்திற்கு மாறாக அமைச்சர் ஞானமுருகு இரவில் சக்கரவர்த்தியை சந்திக்க வந்தது.

 உடன் ஒரு ஆளை அழைத்து வந்தது, அந்த ஆளும் அமைச்சர் உடன் வராமல், அமைச்சர் வந்து சில நிமிடங்கள் காத்திருந்த பிறகு வந்தான். 

அவன் வந்த உடன் அமைச்சரின் உத்தரவு கிடைக்காமல் உடனே எதோ பேச ஆரம்பித்து கையில் இருந்த ஏட்டினை காட்டியது. 

அப்படி காட்டிய ஏட்டை பார்த்த உடன் அமைச்சரின் முகத்தில் கலவரம் படர்ந்தது என எல்லாம் புதிதாக இருந்தது. 

அவர்கள் ஆலோசனை மாளிகைக்கு போனதை தனது அறையில் இருந்து பார்த்ததை எல்லாம் ஒரு முறை நினைத்து பார்த்தார். 

அவர்கள் போன கொஞ்ச நேரத்தில் மணி ஓசை கேட்டது, எந்த ஆபத்தும் வந்துவிட கூடாது என திருக்கோணமலையில் கோயில் கொண்டு இருந்து திருக்கோணேஸ்வரரை வேண்டி கொண்டார். 

சாளரத்தின் வழியாக பார்த்தபடி சூர்பனகை அதிரும் குரலில் ”இளவேந்தா ...... “ என அழைத்தாள்.

அந்த குரலின் சத்தம் அடங்கும் முன்னரே ஒரு உருவம் வந்தது. அந்த உருவம் வந்ததை கூட திரும்பி பார்க்காமல் சாளரத்தின் வழியாக தெரிந்த தோட்டத்தை பார்த்தபடி  “தேய்பிறை வியூகம்... வில் அம்பு படை ...பத்து ரோஜா அம்பறாத்தூணி ....” என்றாள்.

அப்படி சொன்னவள் பின்னால் இருந்த மூவருக்கு என்ன ஆனது என்ற நினைப்பு இல்லை. யார் அவன் என்ற கேள்வி தான் அவள் மனதில்  ஓடி கொண்டு இருந்தது. 

அடுத்த சில நொடிகளில் மாளிகையின் இரண்டாம் அடுக்கில் இருந்த திறந்தவெளி மேல்தளத்தில் இளவேந்தன் நின்று கொண்டு இருந்தான். 

அவன் முன்பு ஐந்து வில்லாளி வீரர்கள் கொண்ட இரண்டு படை இருந்தனர். 

ஒரு படையில் இருந்த ஐந்து வீரர்கள் தேய்பிறை வியூகத்தின் படி அம்புகளை பூட்டி வரிசையாக நின்றார்கள். தேய்பிறை நிலவு வரிசைபடி முதலில் நின்றவன் ஐந்து அம்புகள், இரண்டாமானவன் நான்கு அம்புகள்..... என கடைசி ஆள் ஒற்றை வில் உடன் இருந்தான். எக்கணமும் பூட்டிய அம்புகளை எய்து விட தயாராக இருந்தார்கள்.

சாளரத்தின் வழியாக பார்த்த சூர்பனகைக்கு யாரோ ஓடுவது புரிந்தாலும், அவன் எங்கே இருக்கிறான் தெரியவில்லை.வில் அம்பு படை மட்டும் போதுமா என யோசித்து கொண்டு இருந்தவள், அறையில் இருந்த விளக்கை எடுத்து வட்டமாக இருமுறை சுற்றி அடுத்த தகவல் குறிப்பை ஔதடனுக்கு தெரிய படுத்தினாள். 

போர் நாய் படைக்கான குறிப்பு அது ஔதடனுக்கு தெரியும். அவர் இருந்த தென் பகுதி கோட்டை வாயிலில் தான் போர் நாய்கள் கட்டி வைக்க பட்டு இருக்கிறது. மொத்தம் இருபது நாய்கள். அவைகளை கழற்றி விட தயாராக வைத்திருக்கும் படி அதன் ரோமானிய பயிற்சியாளருக்கு உத்தரவிட்டார்.

காதுகளை கண்களையும் முழு கவனத்துடன் வைத்தபடி சாளரத்தின் வழி தெரிந்த இருளை பார்த்தபடி நின்று இருந்தாள் சூர்பனகை. மற்ற மூவரை எதுவும் பேச வேண்டாம், அரியணையில் அமர்ந்திருக்கும் படி சொல்லிருந்தாள். 

இருளில் அந்த உருவம் மூச்சு இறைத்தபடி என்ன செய்வது என யோசித்து கொண்டு இருந்தாள். சூர்பனகை அங்கு இருக்கிறாள் என்று தெரிந்ததும் தான் எவ்வளவு பெரிய தவறை செய்திருக்கிறோம் என தன்னை தாணே நொந்து கொண்டான். அவள் வைகை நதி அருகே இருக்கும் பாண்டிய மாளிகையில் தனது தோழி இளவரசி மீனாட்சி உடன் இருப்பதாக தானே தகவல் கிடைந்ததென யோசித்து கொண்டு இருக்கும் பொழுதே  போர் நாய் படையில் இருந்த நாய்கள் குரைப்பது கேட்டது. 

அப்பொழுது  மாளிகையில் இருந்து சங்கோசை கேட்டது. மாட்டி கொண்டாலும் “அந்த” பெயரை சொல்லிவிட கூடாது என்று தீர்மானித்த நொடி. அவன் காலில் ஒரு அம்பு வேகமாக வந்து பாய்ந்தது. 

வலியில் சத்தம் போட முடியாமல் வந்த வழியில் திரும்ப பாதுகாப்பாய் போய் விட முடியுமா என பார்க்க தொடங்கிய நொடி ....

அந்த பயங்கரம் நிகழந்தது...

தொடரும் ....

Sunday, May 30, 2021

கலவை - 30/05/2021

பல செய்திகளை அல்லது பல குறுங்கட்டுரைகளை ஒரு தொகுப்பாக 14 வருடங்களுக்கு முன்பு தமிழ் இணையத்தில் பலர் எழுதி கொண்டு இருந்தார்கள். குறிப்பாக பரிசல் (பரிசல்காரன் - அவியல்) , கார்க்கி, கேபிள் சங்கர் ( கொத்து பரோட்டா) மற்றும் பலர் இந்த வடிவில் எழுதி கொண்டு இருந்தார்கள். பெரிதும் வெற்றி பெற்ற வடிவமாக இருந்தது.

அப்பொழுது தமிழ் இணையத்தில் பிரபலமானவர்கள் எல்லாம் இந்த வடிவத்தில் எழுதி கொண்டு இருந்த பலர் இப்பொழுது இந்த வடிவத்தில் எழுதுவது இல்லை. நான் இன்னுமும் எழுதி கொண்டு இருக்கிறேன்.

ஏனென்று தெரியுமா ?

அவர்களுக்கெல்லாம் எழுத உருப்படியான விஷயங்கள் கிடைக்கிறது அல்லது இருக்கிறது. எனக்கு அப்படி எதுவுமில்லை என்பதினால்..... எழுதுகிறேன்.

= = =

2016ல் நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவில் கால் வைத்த பின் கிண்டி குதிரை நொண்டி குதிரை கணக்காய் அடித்து பிடித்து 2017ல் நிலை கண்டு, ,2018ல் இந்தியர்களின் ஏகோபித்த ஆதரவுடன் 10 கோடி சந்தாதாரர்கள் என்ற நிலையை நெட்ஃபிளிக்ஸீக்கு இந்தியாவில் கிடைப்பார்கள் என அந்த குழும தலைவர் ரீட் ஹேஸ்டிங்ஸ் சொன்னார்.

அவர் சொல்லி மூன்று வருடங்களாகி விட்ட நிலையில் நான்கு கோடியே அறுபது லட்சம் சந்தாதாரர்கள் உடன் நெட்ஃபிளிக்ஸ் ஆட்டம் ஆடி கொண்டு இருக்கிறது. 

இது இப்படியாக இருக்க இந்தியாவில் முதன் முறையாக ரிலையன்ஸ் நிறுவனம் ஆரம்பித்த பிக் ஃபிளிக்ஸ் என்கிற OTT வடிவேலுவின் கிணத்தை காணோம் நகைச்சுவையில் வரும் கிணற்றை போல் உள்ளது. 

அங்காளி பங்காளிகளான டிஸ்னி ஹாட்ஸடார் மற்றும் சோனி லிவ் ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் இருக்கிறது. 

போன வருடம் வரைக்கும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தான் முன்னணியில் இருந்தது ; ஸ்டார் குழும நிறுவனங்களின் தொலைக்காட்சி தொடர்களின் காப்புப்பிரதியாக இருந்ததினால் அதன் மதிப்பு ஏற்றதிலேயே இருந்தது.

பின் ஹர்ஷத் மேத்தாவின் கதையான ஸ்கேம் 1992 வந்ததினால் சோனி லிவ் OTTக்கு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகமானது. இந்த தொடர் நெட்ஃபிளிக்ஸில் வந்திருக்க வேண்டியது. 

சந்தையை புரிந்து கொள்ளா அதிகாரம், தவறான முடிவுகள், ஆற்றோடு போகும் மனப்பான்மை,திரை நட்சத்திரங்களுக்கான அவியத்தின் பின்னால் ஓடுதல், சராசரி மாத கட்டணம் அதிகமாக இருத்தல் ஆகியவைகளால் இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் பின் தங்கி இருக்கிறது.

= = = 

நடிப்பின் சிகரம் கேலாக்ஸி ஸ்டார் விமல் நடித்த கன்னிராசி படத்தை பார்த்து உய்யலாலா அடைந்தேன். ஜோடியாக வரலட்சுமி நடித்திருந்தார். 

காலையில் ஒரு பிளேட் பொங்கல் சாப்பிட்டுவிட்டு சூடான டிகிரி காபிக்கு காத்திருக்கும் பாவனையுடன் விமல் அட்டகாசமாய் நடித்திருந்தார். 

பொதுவாய் எம்.ஜி.ஆர். படங்களில் தான் நாயகி நாயகனை தூரத்தி தூரத்தில் காதலிப்பார். விமல் அண்ணனுக்கு சினிமாவில் இரண்டாம் எம்.ஜி.ஆர். என பெயர் வாங்க ஆசை வந்துவிட்டது போல. 

இதனை அடுத்து கந்தாசாமி என்னும் காவியத்தை பார்த்தேன்.... இந்த படம் வெளிவரும் பொழுது சில்லறை எல்லாம் சிதற விட்டு இருக்கேன் என்று நினைக்கும் பொழுது விதி கீரிஸ் டப்பாவை எப்படி உதச்ச என சிரித்தது.

ஷ்ரேயா சரன் அம்மணி மியாவ் மியாவ் பூனை என்னும் பாடலுக்கும் நடனம் ஆடி இருந்தார்.... அதை பார்க்கும் பொழுது மலச்சிக்கலில் அவஸ்தை பட்டு கொண்டு இருந்த நடன இயக்குநரின் வேதனை புரிந்தது. 

= = =

கடவுள் என்னும் கொலைகாரன் என்னும் குறுநாவலை படித்தேன். எழுத்து நடை எல்லாம் நன்றாக இருக்கிறது ... ஆனால் கதை கிண்டி குதிரை கணக்காய் தான் இருக்கிறது (நெட்ஃபிளிக்ஸ் பந்தி).

Two minutes silence.

= = =

ஊரெங்கும் ஒரியல் பாலோ இயக்கி இருக்கும் தி இன்னொசென்ட் இணைய தொடரை பற்றி தான் பேச்சு . பார்க்கவில்லை என சொன்னால் எதிர்கட்சிகாரன் என்ன நினைப்பான் என்கிற தர்ம சங்கட நிலை வந்துவிடும் என்பதினால் பார்க்க தொடங்கினேன். 

சும்மா பரபர என இருக்கிறது காட்சிகளின் நகர்வு.

= = =

வேலை சார்ந்த அழுத்தம் அதிகபடியான நிலை இருப்பதினால், மன தளர்வுக்கு என்ன செய்வது தெரியாமல் இருந்த வேளையில் தங்கதுரையின் தற்கொலை ஜோக்குகள் என்கிற புத்தகம் படிக்க கிடைத்தது. 

கடி ஜோக்கு வகையை சார்ந்த நகைச்சுவை துணுக்கு தான். வாய் விட்டு சிரித்தேன் ஒவ்வொரு நகைச்சுவை துணுக்கிற்கும். 

இந்த புத்தகத்தின் சிறப்பு என்னவென்றால் தமிழ் பேச தெரியும் படிக்க தெரியாதோருக்காக தங்கிலீஷ் வடிவிலும் இருக்கிறது. 

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும். நண்பர்களிடையே இந்த புத்தகத்தில் வரும் ஜோக்குகளை சொல்லி உறவை மேம்படுத்தலாம்.

புத்தகம் தந்த நண்பருக்கு நன்றி.

= = =

Wednesday, May 26, 2021

CORONA SECOND WAVE II கொரோனா இரண்டாம் அலை II இரண்டாம் அலை சாவுக்கு சுய மருத்துவம் தான் காரணமா ? II

இந்த கொரோனாவில் பலர் இறக்க இதுவுன் காரணமாக இருக்கலாமென இரண்டாம் அலை தொடங்கிய நாளில் இருந்து சந்தேகம் வந்துகொண்டே இருந்தது. 

அது இப்பொழுது ஊர்ஜிதமாகிறது.

எனக்கு தெரிந்த நபர், கட்டிட துறையில் டிப்ளோமா பட்டம் பற்று வேலைக்கு சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக உழைப்பால் முன்னேறி பெரிய பதவிக்கு வந்தார்.

அவருக்கு அடிக்கடி உடம்பிற்கு சுகமில்லாமல் போகும் பொழுது மருத்துவரிடம் போகாமல் டோலோ மற்றும் பரசிட்டமோல் மாத்திரைகள் இரண்டையும் பக்கத்தில் இருக்கும் மருந்துகடைக்கு போய் வாங்கி சாப்பிட்டுவிடுவார். முக்கியமாக டோலோ மாத்திரை பரசிட்டமோலையும் கலந்து தான் தயாரிக்க படுகிறது.

இப்படி எவ்வளவு நாள் மருத்துவரிடம் போகாமல் மாத்திரை சாப்பிடுறீங்க சார் என ஒரு முறை கேட்ட பொழுது, டொக்டர் கிட்ட போன அவனும் இதே தான் இதே எழுதி தருவாரு என சொன்னார். 

நான் இந்த கேள்வியை அவரிடம் மார்ச் மாதத்தில் கேட்டேன். வழக்கமாக நான் எல்லோரிடம் சொல்வதை அவரிடம் சொன்னேன், இப்படி சுய மருத்துவம் (self medication) பண்ணிக்காதீங்க நல்ல டொக்டரிடம் போங்கள் என சொல்லி விட்டு, நான் போன வேலை விஷயமாக பேசிவிட்டு வந்தேன்.

அப்பொழுதே அவர் மார்க்கூட்டு சளி (நெஞ்சு சளி) அதிகமாக இருப்பதாகவும் அது இருமலில் வெளி வருவது இல்லை என சொன்னார். 

ஏப்ரல் மாதத்தில் அவரை சந்தித்த பொழுது கொரோனா தடுப்பூசி போடுவதை பற்றி கேட்டார், அப்பொழுது தனக்கு சக்கரை நோய் இருப்பதாக அவர் சொல்லவும் ஒரு நல்ல மருத்துவரை பார்த்து வேண்டிய பரிசோதனைகளை செய்து கொண்டு, அவரை ஆலோசித்து தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் என சொன்னேன்.

நான் சொன்ன மாதிரி செய்தாரா என தெரியவில்லை.

மே மாதம் 13ஆம் தேதி என்னை அழைத்து எனக்கு தந்திருந்த பேட்டி நேரத்தை (Appointment time) ரத்து செய்து தனக்கு காய்ச்சலாக இருப்பதாகவும் கொரோனா பரிசோதனைக்கு போகிறதாக சொன்னார்.

கொஞ்சம் நாள் கழித்து நுரையீரல் பலவீனமாக இருப்பதாகவும் கொரோனா தொற்று இருப்பதாக சொன்னார். 

நலம் விசாரித்து விட்டு, உதவி வேண்டுமென்றால் அழைக்க சொன்னேன்.

அப்படியே நாள் போனது, சரி இந்நேரத்துக்கு குணமாகி இருப்பார் என்று எண்ணி அழைத்தேன், அவர் மூத்த தான் கைபேசியை எடுத்தார், அப்பாவிடம் பேச வேண்டும் என்று சொன்ன பொழுது அப்பா நேற்று இறந்துவிட்டார் என சொன்னான். 

காரணம் கேட்ட பொழுது நுரையீரல் ரொம்ப பலவீனமாகிவிட்டதால் காப்பாற்ற முடியாமல் போனதாம். 

மருத்துவ காப்பீடு இரண்டு லட்சத்திற்கு தான் எடுத்திருக்கிறார். கையிருப்பு பணம் எல்லாம் காலி ஆகி விட்டதாம். ஆயுள் காப்பீடும் அவர் எடுக்கவில்லை. வீட்டு கடன் வாங்கி கட்டி இருக்கிறார். வீட்டு கடன் பாதுகாப்பு காப்பீடும் அவர் எடுக்கவில்லை. அதனால் மீதி கடன் தொகை காட்டினால் தான் அந்த வீடு அவர்களுக்கு என இருக்கும். இல்லாவிட்டால் அதுவும் இல்லை.

பழமைவாத குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர், அவரது மனைவி பெரிதாக படிக்கவில்லை, இரு மகன்கள் மூத்தவன் எட்டாவது , இளையவன் மூன்றாவது.... பணகார பள்ளியில் படிக்கிறார்கள். 

அவர் மட்டுமே குடும்ப வருமானத்திற்கு உழைத்து கொண்டு இருந்தார்.

பெரிய தொகையை தான் சம்பளமாக வாங்கி கொண்டு இருந்தார். இப்பொழுது அது இல்லாத பொழுது கைவசம் சொத்துகள் வைத்து அல்லது விற்று இல்லாவிட்டால் முதலீடு செய்ய வேண்டும். அப்படி செய்தாலுமே மாதம் அவரது சம்பளத்தில் ஐந்தில் ஒரு பங்கு வந்தாலே அதிகம். 

இப்பொழுது அந்த குடும்பம் மாதம் அவரது சம்பளத்திற்கு வாழ பழகி விட்டார்கள். அது இல்லையென்ற பொழுது ....அவர்களது நிலைமை ?

இதை எல்லாம் அவர் தவிர்த்திருந்திருக்கலாம்.... தனக்கு சுகமில்லாத பொழுது / உடம்பு சரியில்லாத பொழுது ஆரம்பித்திலேயே நல்ல மருத்துவரை கண்டு மருத்துவ ஆலோசனை பெற்று ... அதன் படி நடந்திருந்தால் இந்நேரத்திற்கு அவர் உயிரோடு இருந்திருப்பார். தனது உடல் நிலையை பற்றி குடும்பத்தாரிடம் எதுவும் சொல்லவில்லையாம்.

இதனால் நான் சொல்லி கொள்வது என்னவென்றால்....

உடம்பிற்கு எதாவது ஒன்று என்றால் அலட்சியம் செய்யாதீர்கள், தகுந்த மருத்துவரை கண்டு ஆலோசனை பெறுங்கள். குடும்பத்தாரிடம் உடம்பிற்கு எதாவது என்றால் சொல்லுங்கள். 

முக்கியமாக காய்ச்சல் என்பது வெறும் அறிகுறி தான். அடிக்கடி காய்ச்சல் வருகிறது என்றால் மருத்துவரை போய் பாருங்கள். நேரடியாக மருத்துகடைக்கு போய் மருந்து வாங்குவதை விட்டுவிடுங்கள். 

வெளிநாடுகளில் இருப்பது போல மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருத்து கொடுக்க கூடாது என ஒரு சட்டம் வர வேண்டும். 

உங்கள் நண்பரோ சொந்தகாரரோ பெரிய மருத்துவர் இல்லையென்றால் அவரிடம் மருத்துவ ஆலோசனை கேட்காதீர்கள்.

முக்கியமாக கூகிள் தேடுபொறி  சிந்திக்கும் திறன் கொண்ட மருத்துவர் இல்லை. நீங்கள் என்ன தேடுகிறீர்களோ இணையத்தில் உள்ள அது சார்ந்த பக்கங்களை காண்பிக்கும். அவ்வளவே.

Sunday, May 23, 2021

*நீச்சல்* II தொடர்கதை II அத்தியாயம் -1II தெய்வ தன்மைகள் இல்லாத இராமாயண கதை II Real Life Ramayana

அத்தியாயம்– 1

(முழுவதும் கற்பனையான கதை)

4000 ஆண்டுகளுக்கு முன்பு.

வசதி , படை பலம் என்று எவ்வளவோ இருக்க தனது அண்ணன் ஏன் பிடிவாதமாக ஒரு குரங்கு கூட்டத்தை அழைத்து கொண்டு வந்து இந்த கடற்கரையில்  அமர்ந்திருக்கிறார், ஆயிரம் போர் வித்தைகள் கற்றவராக இருந்தாலும் ஒரு பலம் பொருந்திய அரசனை வீழ்த்த எப்படி இவரால் முடியும், நான் துணைக்கு இருந்தாலும் எப்படி எங்கள் இருவரால் முடியும் ?என்று யோசித்தபடி மீண்டும் மீண்டும் தனது கால்களை தொட்டுவிட்டு போகும் அலைகளை பார்த்தபடி அமர்ந்திருந்த இராமனை நோக்கி இலக்குமணன் வந்து, பக்கத்தில் அமர்ந்தான்.

“அண்ணா எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை, அண்ணியாரின் தந்தை சனகரும் உங்களது கொள்கைகளை வெள்ளி தட்டில் பொரித்து, அதனை நிருபாசனத்தில் வைத்து ஆட்சி செய்யும் தம்பி பரதனும் இருக்கையில், நீங்கள் ஏன் ஒற்றை மனிதராய், விலங்கினமா மனித இனமா என தெரியாத ஒரு கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு எல்லா வலமும் மிக்க இலங்கை அரசன் இராவணனை  எதிர்த்து அண்ணியாரை மீட்க போர் புரிய கிளம்பி இந்த தனுஷ்கோடி கடற்கரை வரையில் எந்த தைரியத்தில் வந்து இருக்கிறீர்கள் ?”

வழக்கம் போல இராமன் பலமான சிந்தனைக்கிடையில் வட்ட சிந்தனையாளன் இலக்குமணனை பார்த்து சிரித்தான். வாசிப்பு பழக்கம் இல்லாததால் கோபங்களை கையாள தெரியா பருவத்தில் இருக்கிறான் என தனக்குள் நினைத்தப்படி பேச ஆரம்பித்தான்.

“தம்பி நமது தந்தையின் ஆணையிட்ட படி தென்திசை நாட்டுகளுக்கு  அதிக வருமானத்தை ஈட்டி தரும் கடல்சார் வணிகத்தை நமது வசமாக வேண்டும் .....”
பேசி கொண்டு இருந்த இராமனை இடைமறித்து இலக்குமணன்
“சரி வர்த்தகத்தை வசமாக்க ஏன் இந்த தனி நபர் போர், சனகரின் படை  இல்லையா நமது நாட்டு போர் படைகள் இல்லை.. வாடகைக்கு வரும் கூர்கா போர் படை இல்லையா ?”

“இருக்கிறது இல்லையென சொல்லவில்லை, திராவிட ஆட்சியை பிடிப்பது மட்டும் தான் நமது இலட்சியம் என்றால் அவர்களது உதவியை நாடி இருக்கலாம். ஆனால் அது வணிகர்களது நம்பிக்கையை பெற்று தராது. ஆட்சியை வசமாக்கிவிட்டு போனால் வரி மட்டுமே வரும், இலாபம் வராது. மீண்டும்  யாராவது கலகம் செய்து திராவிட நாட்டை நமது கைகளில் இருந்து மீட்கலாம்... வணிகர்களது நம்பிக்கையை வென்று விட்டால் நமது பரம்பரையில் கடைசி வரைக்கும்  திராவிடம் நம் வசம்.”

இலக்குமணன் தான் எவ்வளவு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக, அதன்  சாட்சியாக இருக்கிறோம் என்பதனை நினைத்து பெருமிதம் பட்டான் .இந்த திட்டம் மட்டும்  வெற்றி பெற்றால் சீன, சுமாத்திரா, சிங்கைநகரம் போன்ற நாடுகளுக்கு போகும் கப்பல்கள் நிற்கும் துறைமுகம் நமது வசம் ஆகும்.... அப்படியானால் என யோசிக்க யோசிக்க இலக்குமணன்  கடந்த சில மாதங்களில் நடந்தவை எல்லாம் கண்கள் முன்னால் காட்சிகளாக விரிந்தது.

= = =

சூர்ப்பனகை  ஆயிரம் வித்தைகள் கற்றவள், எவ்வளவு பெரிய படையாக இருந்தாலும் ஒற்றை ஆளாக சமாளித்து கலப்பை வில்லை கொண்டு வெற்றி பெற்று விடுவாள்.

 இராவணனது ஒரே தங்கை. 
தனக்கும் தனது தங்கைக்கும் இருபத்தைந்து ஆண்டுகள் வித்தியாசம் என்பதால் அவள் கற்க ஆசை பட்டத்தை எல்லாவற்றையும் கற்க தகுந்த ஏற்பாடுகள் செய்தான். ஞானிகள் அறிஞர்கள் இருந்த சபையில் எல்லோரிடமும் விவாதம் செய்வது சூர்ப்பனகைக்கு பிடித்த ஒன்று. பல தரப்பு கொள்கைகளுடன் விவாதம் செய்யும் பொழுது அறிவு தெளிவு ஏற்படும் என்பது அவளெண்ணம். 

அவளது அறிவு தேடலுக்கு தடை போடாமல் தஞ்சை, காஞ்சி ,மிதிலை, நாளந்தா மற்றும்  பல சிறந்த பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி பிடித்த விஷயங்களை சிறந்த ஆசிரியர்கள் மூலம் கற்க வழி செய்தான். 

அப்படி ஒரு தரம் பருவகால ஓய்வு விடுமுறைக்கு வந்த சூர்ப்பனகை எங்கோ பல தேசங்கள் கடந்து அறியப்படாத எகிப்து என்ற நிலப்பரப்பில் இறந்தவர்களது சடலங்களை பதப்படுத்தும் புதைப்பதை வழக்கமாக இருப்பதை பற்றி இராவணனிடம் ஆர்வம் பொங்க சொல்லி கொண்டு இருந்தாள். 

அறிவும் அழகும் ஒருங்கிணைந்தவளை இன்னும் எத்தனை நாட்கள் தான் இப்படி தன்னை அறிவு தேடலில் தன்னையே தொலைத்து கொண்டு இருப்பாள். தனது வளர்ப்பில் ஏதேனும் தவறிருக்குமோ, அம்மை அய்யன் இல்லாத குழந்தையை ஒரு சக்கரவர்த்தியை தயார் செய்வது போல் வளர்த்து விட்டோமோ என கவலையில் மாலை நேரத்து மேகங்களை பார்த்து கொண்டு இருந்தான். 

அந்த கவலையென்னும் தீயில் மேலும் எண்ணெய் ஊற்றுவது போல .....

“அண்ணா வங்காள தேசத்தில் மரக்கலம் கட்டுவதை பற்றி கொஞ்சம் கற்று கொண்டு வந்திருக்கிறேன்... நாளை அயல்நாட்டு வணிகர்களை சந்திக்க கந்தார துறைமுகத்திற்கு போகிறோம் அல்லவா .... அங்கு போர் மற்றும் வணிக மரக்கலம் கட்டுவதை பற்றி அவர்களிடம் பேச வேண்டிய விஷயங்கள் கொஞ்சம் இருக்கிறது.... அதனை பற்றி போகும் வழியில் உங்களுக்கு விவரித்து விடுகிறேன் .....” என சூர்ப்பனகை சொன்னதும் அப்பொழுது தான் இராவணனுக்கு அவள் தனது அன்பு தங்கை மட்டும் அல்ல இந்த இலங்காதிபதி அரசாட்சியில் வணிக அமைச்சர் என்றதும் நினைவும் வந்தது. 

கொஞ்சம் நேரம் போக உளவுத்துறை அதிகாரிகள் தர போகும் பரத நாட்டு பற்றிய அறிக்கைகளை படிக்க காத்து கொண்டு இருந்தான். 

சூர்ப்பனகை மெல்லிய குரலில் ..”அண்ணா ஒரு விஷயம் உங்களிடம் சொல்ல வேண்டும்...”. இது வரையில் இல்லாத தயக்கம் கவனிக்க செய்தான் . முகத்தின் மொழியோ அவள் வாழ்வின் முக்கியமான ஒன்றை சொல்ல  இருக்கிறாள் என்பதை சொல்லியது. மனத்தில் அதுவாக இருக்குமோ என்ற சந்தோஷம் ஏற்பட்டாலும் இராவணன் எதையும் காட்டி கொள்ளாமல் ...

“இராமர் என்று ஒரு இளவரசர்... “
என்று சூர்ப்பனகை சொல்ல ஆரம்பிக்கும் பொழுது உளவுத்துறை அமைச்சர் ஞானமுருகு இலங்காதிலகம் தனது படை தளபதியான அதிமலையனோடு உள்ளே வந்தார். வந்தவர் முகத்திலுள்ள கலக்கத்தை கண்டு எதோ முக்கிய விஷயம் போலிருக்கிறது என யூகித்து,
“அரசே நான் உத்தரவு வாங்கி கொள்கிறேன் என சொல்லி அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

 பொதுவில் அண்ணனுக்கு சக்கரவர்த்திக்குரிய மரியாதை தர வேண்டும் என்பதில் சூர்ப்பனகை கவனமாக இருந்தாள்.

அப்படி வெளியே போகும் பொழுது அதிமலையன் கையில் இருந்த ஏட்டில் அயோத்தி என்று தலைப்பு இருந்ததை பார்த்தாள்.

தொடரும்.....

Wednesday, May 19, 2021

திருக்குறளும் நானும்

திருக்குறளும் நானும்.

இப்படியாக தலைப்பில் எழுதணும் என ஆசை தான், ஆனால் அப்படி எ அப்படி எழுத வேண்டுமென்றால் ஒன்று திருக்குறளை முழுமையாக படித்து இருக்க வேண்டும் அல்லது அதனை பற்றி சிறிதளவு ஆராய்ச்சி ஆவது செய்திருக்க வேண்டும்.

நான் இவை இரண்டும் செய்திருக்கவில்லை.   எனக்கு 13 வயதாக இருக்கும்பொழுது குடும்ப நண்பர் ஒருவர் எனக்கு திருக்குறள் புத்தகத்தை பிறந்தநாள் பரிசாக தந்தார்.

அதுவரை திருக்குறளை ஒரு மனப்பாடப் பகுதியாக பார்த்து வந்த எனக்கு அந்த புத்தகம் பெரிதாக ஈர்க்கவில்லை. 

 இரண்டு வருடங்களுக்குப் பின் எழுத்தாளர் நரசய்யா அவர்கள் பொதிகைத் தொலைக்காட்சியில் ஒரு பேட்டியில் திருக்குறளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.

அது ஒரு சனிக்கிழமை மதியம் என்பதால் பார்க்க வேறு ஒன்றும் இல்லாத காரணத்தால் அந்த நிகழ்ச்சியை வேறு வழியின்றி பார்க்கத் தொடங்கினேன்.

அதில் திருவள்ளுவர் என்பவர் யார் என்பதை கண்டுபிடிக்க திருக்குறள் பாடல்களிலேயே பல துப்பு இருப்பதாய் சொன்னார். ஒரு பதின் வயத்தொற்றவனுக்கு அவர் சொன்ன தகவல்கள் எல்லாம் ஏதோ ஒரு மாயாஜால பெட்டியை திறந்து விட்டது போல் தோன்றியது. 

ஆவல்கள் மிளிரிட குடும்ப நண்பர் தந்த திருக்குறள் புத்தகத்தை படிக்கத் தொடங்கினேன். பெரிதும் ஒன்றும் புரியாததால் புத்தகத்தை மூடி வைத்தேன்.

+2 பள்ளி பரீட்சையில் தோல்வியடைந்து அடுத்து என்ன செய்வது என தெரியாமல் வியாச பாரதம், ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் என படித்து விட்டு அடுத்து என்ன படிப்பது என தெரியாமல் உட்கார்ந்து கொண்டு இருந்தேன்.  அதிகபடியான மன குழப்பத்தில் இருந்த பொழுது தான் மஞ்சள் அட்டையில் பரிசாக வந்த அந்த திருக்குறள் புத்தகம் கண்ணில் பட்டது.எதோ ஒரு வேகத்தில் அதனை எடுத்து படித்தேன்....

ஆள்வினையுடைமை அதிகாரம், குறள் 611 (இப்பொழுது தான் சரியாக சொல்ல தெரிகிறது)

"அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் 
பெருமை முயற்சி தரும்"

குரல் புரியவில்லை பிறவு விளக்கத்தை படித்தேன். சற்று தைரியம் வந்தது.

அந்த அதிகாரத்தின் கடைசி குறள்..

"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் 
தாழாது உஞற்று பவர்."

இதனை படித்து முடித்த பொழுது என்ன செய்ய வேண்டும் புரிந்து இதெல்லாம் தோல்வியே இல்லை புரிந்து, அப்பாவிடம் சொல்லி ஒரு டுடோரியல் செண்டரில் சேர்த்து விட சொன்னேன். 

நான் படித்தது CBSE, அதனால் தமிழக அரசு கல்வி முறையில் என்னால் ஒன்றி படிக்க முடியுமா என அப்பா யோசித்தார். அப்பாவை எப்படியோ பேசி சம்மதிக்க வைத்தேன்.

அந்த நம்பிக்கையை தந்தது இந்த குறள்..

அதிகாரம் தெரிந்து தெளிதல்.

குறள் 505

"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்".

வென்றுவிட முடியும் என நம்பிக்கை தருவது திருக்குறளே.

- நிற்க -

அந்த திருக்குறள் புத்தகம் எனக்கு பரிசாக தந்தவர் கன்னட மொழியை தாய்மொழியாக கொண்டவர். கன்னடர் மூலமாக தான் எனக்கு திருக்குறள் அறிமுகம் ஆனது. அவர் மட்டும் அந்த பரிசை தராமல் இருந்திருந்தால் ஒரு மனப்பாட பகுதியாக மட்டுமே திருக்குறளை அணுகி இருப்பேன்.

நன்றி - லலிதா ஆண்ட்டி அத்தை ( அவரை நான் அப்படி தான் அழைப்பேன்)
Related Posts with Thumbnails