Pages

Sunday, April 28, 2013

McDonald (மேக் டொனல்ட்) உணவில் தலைமுடி - ஒரு எச்சரிக்கை


கொஞ்ச நாள் முன்னாடி நியூஸ்பேப்பர்ல McDonald காரன் McFlurry with Oreo ன்னுட்டு விளம்பரம் குடுத்து இருந்தான். சரின்னு எப்படி இருக்குமுன்னு பார்க்க வளசரவாக்கம் கடைல குறைஞ்ச அளவுக்கு  51 ரூவாய் மொய் எழுதிட்டு கொஞ்ச நேரம் காத்திருத பிறவு ..... பச மாதிரி ஒன்னை தந்தான். 

சாப்பிட்ட சப்புன்னு இருந்துச்சு...அட கொடுமையேன்னு வேற வழி இல்லாம காலி பண்ண ஆரம்பிச்ச பிறவு பார்க்குறேன்...அதுல ஒரு தலமுடி. 

கவுன்ட்டர் ல இருந்த அம்மணி கிட்ட என்னமா இதுன்னு கேட்க, அதுக்கு அவங்க "சாரி சார்"ன்னு சொல்லிட்டு வேற அதைய கொண்டு போயிட்டு, வேற ஒன்னை கொண்டு வந்து தந்தாங்க. 

எனக்கு என்னவோ அந்த முடிய மட்டும் எடுத்துட்டு, மேலும் இரண்டு மூணு பிஸ்கட் போட்டு கிளறி கொண்டு வந்திருப்பாங்களோங்குற சந்தேகத்துலேயே அந்த பசைய முழுங்கி வைச்சேன். 

எதுக்கும் இருக்கட்டுமேன்னுட்டு இன்வாய்ஸோட இருந்த பில்லை எடுத்து சோப்பு ல வைச்சுகிட்டேன். கொஞ்சம் யோசிச்ச பிறவு தான் தோனுச்சு, அவங்க முத வாட்டி குடுத்ததை உள்ளறக்க எடுத்துகிட்டு போன பிறவு ஒன்னும் பண்ண முடியாதுன்னு. பல யோசனைல நான் இருந்ததால எனக்கு ஒன்னும் தோனல.

பல இடத்துல இந்த மாதிரி ஆகிருக்குறதால எனக்கு ஒன்னும் இது புதுசு இல்ல. ஆனா சுத்தம் தரம்ன்னு பெருமை பீத்திக்குற மேக்டொனல்ட் ல இப்புடி நடந்து இருக்குறது தான் எனக்கு ஆச்சரியமா இருக்கு. 

சரி எப்புடி எதுவா இருந்தாலும் நான் அங்கனையே கம்ப்ளைன்ட் தந்திருக்கலாம் தான், ஆனா எனக்கு தெரிஞ்சு இந்த பெரிய பெரிய கொம்பனில தீர்வை கண்டுபிடிக்காமல், அவங்களுக்கு தெரிஞ்ச ஒரே தீர்வான அங்கன வேலை ல இருக்குற ஆளை வேலை விட்டு தூக்குறது இல்ல ஆப்பு வைக்குறதுன்னு தான் செய்வாங்க. 

இன்னொன்னு முக்கியமா அங்க ஸ்டாக் எல்லாம் பார்பாங்க, அதனால பழசையே கிளறி எனக்கு தந்திருக்கலாமுன்னு தான் தோணுது. தலமுடி தானேன்னு விட்டுட்டாலும், இங்கன்ன அது பிரச்சன இல்ல, சாப்பாட்டு பொருள்ல தலைமுடி விழுற அளவுக்கு அலட்சியமா இருக்காங்களேன்னு தான். இன்னைக்கு தலைமுடி விழுறதுக்கு வாய்ப்பு இருக்குன்ன, நாளைக்கு என்னவெல்லாம் விழ வாய்ப்பு இருக்கோ. அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம். 

அதனால நாளபின்ன அந்த பக்கம் போன கொஞ்சம் உஷாரா இருந்துகோங்க. 

இந்த பதிவ டைப் அடிக்கும் போது எதுக்கும் இருக்கட்டுமேன்னு இன்வாய்ஸ் நம்பரை போடலாமுன்னு நினைச்சேன், பிறவு அதனால ஒரு ஆணியும் புடுங்க முடியாதுன்னு தோனுச்சு அதனால விட்டுட்டேன். ஆனா அந்த பில்லுல சர்வீஸ் டக்ஸ் ன்னு போட்டு கொஞ்சமா சில்லறை காசு போட்டிருக்கான். தலமுடிய போட்டது எல்லாம் ஒரு சர்வீஸான்னு கேக்க தோணுது.  

Thursday, April 25, 2013

*கலவை* - } ஐஸ்கிரீம் த்ரிஷா {


தாம்பரத்தில் இருந்து கிஷ்கிந்தா தீம் பார்க் / செம்பரபாக்கம் ஏரி வழியில் நடுவீரப்பட்டு என்ற கிராமத்துக்கு அடுத்து வரதராஜபுரம் என்ற ஊரில் எருமையூர் போகும் வழியில் குன்றின் மேல் ஒரு கிறிஸ்துவ தேவாலயம் ஓன்று இருக்கிறது. 

அருமையான இடம். அழகாய் இருக்கிறது. மாலையில் நானும் நண்பனும் அங்கு போனோம். இட அழகில் அப்படியே வியந்து போய் நின்றோம். 

அதையும் தாண்டி சிறிது தூரம் போனால் காட்டு பகுதி வருகிறது. அங்கு நாங்கள் போன நேரத்தில் இருட்டி விட்டதால், காட்டின் அடர்தன்மை அதிகமானது போல் உணர்ந்தோம். காட்டினுள் போக ஒரு இடத்தில சிமெண்ட் ரோடு இருக்கிறது, அதற்க்கு முன்பாக ஒற்றையடி பாதை இருக்கிறது. இரவு நேரத்தில் குளுமையான காற்று வீசுகிறது. 

இருட்டில் இன்னும் சுத்தி பார்க்கலாம் என்று தான் நினைத்தோம். ஆனால் சோமங்களத்தில்  ஒரு வேலை இருந்தபடியால் சீக்கிரம் கிளம்பிவிட்டோம். 

இந்த இடத்திற்கு போய் வருவது பெரிய அனுபவமாக இருக்காது என்றாலும், குன்றின் மேல் அமைந்து இருக்கும் அந்த தேவாலயத்தின் அழகை அனுபவிக்க கட்டாயம் ஒரு தடவை போகலாம். 

= = = = =
 "OMG : OH MY GOD" என்ற ஹிந்தி படத்தை பார்த்தேன். அருமையாய் இருந்தது. கடவுளை பற்றிய சில யதார்த்த புரிதல்களை உங்களது வீட்டு குழந்தைகளுக்கு தரும் இந்த படம். கட்டாயம் அவர்களை பார்க்க வையுங்கள். ஹிந்தி தெரியாதவர்கள் சப் டைட்டிலுடன் அவர்களுடனிருந்து பார்த்து, விளக்கி சொல்லுங்கள்.

இதை பற்றி தமிழில் இணையத்தில் யாரவது எழுதிருக்கிறார்களா என்று தேடிய பொழுது அதிஷா எழுதிய இந்த கட்டுரை கிடைத்தது.

முக்கியமா படத்தின் கடைசியில் ஒரு வசனம் வரும்.... படம் பார்க்கும் போது எனக்கு ரொம்பவும் பிடித்து போனது. ஆச்சரியம். அதிஷா அந்த வசனத்தை குறிப்பிட்டு எழுதி உள்ளார்.

"படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் போலி சாமியாரான மிதுன் சக்ரவர்த்தி ஒரு வசனம் சொல்லுவார்.. ‘‘இவங்களையெல்லாம் திருத்திடலாம்னு நினைக்கறீயா? இவங்க அத்தனைபேரும் அன்பாலதான் கடவுள் நம்பிக்கையோட இருக்காங்கனு நினைக்கிறீயா.. அப்படி இருந்தா திருத்திடலாம்தான்.. ஆனா அவ்வளவுபேரும் பயத்தாலதான் நம்பிக்கையோட இருக்காங்க.. இவங்கள மாத்துறது அவ்வளவு சுலபமில்ல தம்பி’’ என்று சொல்லிவிட்டு போய்விடுவார்!

அது எவ்வளவு உண்மை. பெரியார் தன் வாழ்நாளெல்லாம் போராடியது இதற்காகவும்தான். திராவிட இயக்கங்கள் ஐம்பதாண்டு காலமாக முயற்சிப்பதும் இதற்காகத்தான். ஆனால் ரிசல்ட் என்னவோ சொற்ப சொற்பம்தான்! சொல்லப்போனால் ஒரு சாரர் பெரியாரையே, கடவுளாக்கி நாத்திகத்தையே மதமாக்கி, அவரையும் ப்ராடக்டாக்கி காசுபார்க்கிற, பதவிபார்க்கிற கதைகளும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை!"

வாரயிறுதியில் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்.

= = = = =
காலைல  அப்பா உட்கார்ந்து தமிழ் நியூஸ்பேப்பர் படிச்சுகிட்டு இருந்தாரு, நான் அவர் பக்கத்துல கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து இங்கிலீஷ் நியூஸ்பேப்பர் படிச்சுகிட்டு இருந்தேன். 

என்னடா இதுன்னு ரொம்ப சலிப்பா அப்பா கிட்ட "வர வர பேப்பர்ல வர எல்லா நியூஸும் ஏற்கனவே படிச்ச மாதிரியே இருக்குப்பா"ன்னு சொன்னேன். 

அதுக்கு அவர் "டேய் நல்ல பாருடா, நேத்து நியூஸ்பேப்பர இருக்க போவுது"ன்னு சொன்னாரு. 

பார்த்தா அது நேத்து நியூஸ்பேப்பரே தான். அடுக்குல எடுத்து வைக்காம, அப்படியே போட்டு வைச்சு இருந்திருக்கேன். 

= = = = =
கத்துகிட்ட பாடம்....தோழிக்கு நைட்டு அவ வீட்டுக்கு போயிட்ட பிறவு போன் ல கூப்பிட கூடாதுன்னு.

 
இன்னைக்கு அவ ஆபீஸ்ல ஏதோ பிரச்சனை போலிருக்கு...அதை என்கிட்டே சொல்லுற பேர்வழின்னுட்டு அந்த பிரச்சனையோட history, geography, civics, botany , maths ....... etc etc ன்னு ஒரு மணி நேரத்துக்கு பேசிட்டா. ஒரு மணி நேரத்துக்கும் நான் வெறும் "ம்ம்ம்....ம்ம்ம்"ன்னு இருந்தேன். இடைல வேற இரண்டு வாட்டி தூங்கிட்டேன்.

எப்பா, எப்படி தான் இந்த பொண்ணுங்க ஒன்னும் இல்லாத விஷயத்தை  எல்லாம் இப்படி நீட்டி மடக்கி ..... பேசுறாங்களோ. ம்ம்ம் முடியல.  

= = = = =
} DIWALE DULHANIA LE JAYENGE {

1990களில் வந்த முக்கிய ஹிந்தி படங்கள் எல்லாம் பார்த்திருந்தாலும், இந்த படத்தை மட்டும் பார்க்கவில்லை. பிறவு இந்த படத்தின் தழுவல் என்று சொல்ல பட்ட "உன்னை தேடி" படத்தை பார்த்த பிறவு, ஹிந்தி படமும் இந்த மாதிரி மொக்கையாக தானிருக்கும் போல என்று விட்டுவிட்டேன். 

இருந்தாலும் உன்னை தேடி பட பாடல்கள் எல்லாம் பிடித்து இருந்தன. 

காலங்கள் போக போக, இந்த படத்தை பார்க்க ஆர்வம் எதுவும் இல்லாமல் போனது. 

கொஞ்ச நாள் முன்பு, நண்பனொருவன் இந்த படத்தை ரொம்ப சிலாகித்து  பேசியதை அடுத்து, அப்படி என்னதானிருக்கிறதென்று பார்போம் என்று பட டிவிடியை வாங்கி, அறையில் வைத்த பிறவு மறந்துவிட்டேன்.

இன்று விடுமுறை தானே ஏதோ / எதாவது ஒரு படத்தை பார்ப்போமேமென்ற மனநிலையில் எந்த வித தீர்மானங்களில்லாமல் படத்தை பார்க்க ஆரம்பித்தேன். 

படம் ஆரம்பித்து சில காட்சிகள் போன பின்பு, கொஞ்சம் சலிப்பாக.... படத்தை நிறுத்தி விடுவோமோ என்று யோசித்தேன். சரி ஆனதாச்சு...முழுமையாக பார்த்துவிடுவோமே என்று உட்கார்ந்தேன். 

படத்தில் ஈடுபாடு எப்பொழுதெனக்கு வந்ததென்று தெரியவில்லை. படம் முடியும் போது ராஜ் மற்றும் சிம்ரன் ஆகியோரது காதலின் ஒரு பகுதியாக மாறிவிட்டேன். 

படம் முடிந்த பிறவு, "துஜே தேக்கா தொ ஜனா சனம்" என்ற பாடலை மட்டும் மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டிருந்தேன். எனது மெல்லிய உணர்வுகளை வீணை ஆக்கி, பல உணர்வின்ப நிலைகளை உருவாக்கியது. அப்படியே என்னுடைய பதின்ம வயதில் ஒரு முறை வாழ்ந்து பார்த்துவிட்டு வந்தது போலிருக்கிறது. 

படம் சிறப்பான ஒன்றா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது.  

= = = = =
சமீபத்தில் சென்னையில் சந்தைக்கு அறிமுக படுத்தபட்ட MAGNUM ICE CREAM யை வாங்கி சாப்பிடலாம் என்று கடைக்கு போய் அதன் விலையை பார்த்ததில் முதல் அதிர்ச்சி.... ரூ.75. அதுவும் இந்தியாவில் ஒரு BAR ICE CREAM வகையறாவுக்கு இத்தனை விலை வைத்து சந்தையில் அகல கால் வைத்திருக்கிறார்களே என்று தோன்றியது.

சரி ஒரு வேளை தரம் சார்ந்து விலையை வைத்திருப்பார்களென்று எண்ணி, பணம் தந்து அந்த ஐஸ்கிரீமில் சாக்லேட்  வகையை வாங்கி சாப்பிட்டேன். ஐஸ்கிரீமின் பார் அளவும் கொஞ்சம் பெரியதாகவே இருந்தது. 

அட்டை குறிப்பில் மூல பொருள்களின் கலவை அளவில் .20% சாக்லேட் என்று போட்டிருந்தது. ஆனால் சாப்பிட்ட போது சாக்லேட் அளவு அதிகமாக இருக்கும் என்று மனதில் தோன்றியது. 

இன்று சந்தையில் ரூ.75 தந்தால் SUNDAE என்று சொல்ல படும் சிறப்பு வகை ஐஸ்கிரீமே கிடைக்கும் ..... அதைவிட்டுவிட்டு ரூ.75 க்கு மக்கள் பார் ஐஸ்கிரீம் சாப்பிடுவார்கள் என்று எந்த தைரியத்தில் அந்த நிறுவனம் களம் இறங்கி இருக்கிறது என்று புரியவில்லை. 

என்னை பொறுத்த வரைக்கும் பார் ஐஸ்கிரீமுக்கு அதிகபட்சமாக ரூ.30ம், கோன் வகை ஐஸ்கிரீமுக்கு ரூ. 40 ம் தரலாம். அதுக்கு அடுத்ததாக விலைக்கு சிறப்பு வகை ஐஸ்கிரீமுக்கு போவது தான் புத்திசாலி தனம். 

இதை தாய்லாந்தில் தயாரிப்பதும், அதை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பதும் ஒரே கம்பெனி தான். 

தயாரிப்பது  - UNILEVER HOLDINGS COMPANY THAILAND 
இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பது - HINDUSTAN UNILEVER COMPANY.

என் சந்தேகம் எல்லாம் ஒரு சாப்பாட்டு பொருளை தாய்லாந்தில் தயாரித்து, இந்தியாவிற்கு கொண்டு வந்து, கடைநிலை சேவை மையத்தில் நுகர்வோருக்கு விற்பனை செய்ய ஆகும் காலமும் அந்த உணவு பொருளின் ஆயுட்காலமும் நேர் கோட்டில் வருமா ???

இந்த பொருட்களின் தரத்தை யார் பரிசோதனை செய்வார்கள் ??? இதை சாப்பிட்டு எதாவது ஆகிவிட்டால் ..... யார் பொறுப்பு ???தாய்லாந்த்காரனா இல்லை இந்தியகாரனா ????

இந்த கம்பெனி ஐஸ்கிரீம் பற்றி கொஞ்சம் தேடி பார்த்ததில், இது அதிகமான கலோரியை உண்டாக்குமாம். அதிலும் கொழுப்பு சத்துக்கள் அதிகம் உள்ளது என்று சொல்கிறது நான் பார்த்த இணையதளம். 

இதை பற்றி யாருக்காவது விவரம் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். 

(
இதே விலையை வைத்து இவர்கள் சந்தையில் இருந்தால், தோற்று தான் போவர்கள் என்று நினைக்கிறேன்) 

= = = = =
2007 ல எங்க ஓட்டல் ல கொஞ்ச நாள் குப்பை கொட்டலாம்ன்னு PARK SHERATON கொம்பனிகாரங்க தந்த லெட்டரோடு, வாழ்க்கையிலேயே முத முறைய நம்பளையும் மதிச்சு ஒருத்தன் அப்பாயின்மென்ட் லெட்டர் தந்திருக்கானேங்குற சந்தோஷத்துல டிடிகே ரோடு வழியா நடந்து, கலைஞர் வீட்டுக்கா போய் சத்யம் தியேட்டர்ல சூப்பர்ஸ்டார் ரஜினி நடிச்ச சிவாஜி படத்தை பார்த்தேன். 

ஏன்னு தெரியல. இன்னைக்கு அதே ரோடு வழியா நடக்கணும்ன்னு ஆசை வந்து, நடந்தேன். நெகிழ்ச்சியா இருந்துச்சு. 

பிறவு அந்த ரோட்டுல நோக்கியா ஷோரூம் தாண்டி, ரேஷன் கடை முன்னாடி வயசான ஜோடி பப்பாளி வெட்டி வித்துகிட்டு இருப்பாங்க. அவங்க கிட்ட தான்...தினமும் மதியம் சாப்பிட்ட பிறவு கொஞ்சம் நேரம் கழிச்சு நடந்து போய்,பப்பாளி பீஸ் வாங்கி  சாப்பிட்டுட்டு வருவேன். இன்னைக்கு அவங்களை தேடினேன். காணோம். சோகமா இருந்துச்சு. 

எனக்கு இப்ப இருக்குற நம்பிக்கை எல்லாம் அவங்க கிட்ட இருந்து தான் வந்துச்சு. வாழ்க்கை ல அவங்களை ஒரு வாட்டி திரும்ப பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு :(((((( 

= = = = =


Wednesday, April 17, 2013

**சாப்பிடும் கடலையில் ஆணி - ஒரு எச்சரிக்கை**


நேத்து சாயங்காலம் ஓசில நுங்கம்பாக்கம் ரயில் ஸ்டேஷன்ல இறக்கி விடுறேன்னு ஒரு ஆடு தானா வந்து மாட்டினதால, சரின்னு பீச் ஸ்டேஷனுக்கு போன பஸ் காசு ஆகும், இவரோட போன அது மிச்சம் ஆகுமேன்னுட்டு, நானும் அவரோட பைக்ல போய் லயோலா காலேஜ் பக்கமா இருக்குற ஸ்டேஷனுக்கு போற வழில இறங்கிட்டு, அவருக்கு டாடா காட்டின பிறவு ஸ்டேஷன் நோக்கி போக ஆரம்பிச்சுட்டேன். 

அந்த குறுக்கு சந்துல போகும் போது தள்ளு வண்டி கடைல கடலை விக்குறதை பார்த்த பிறவு நான் எப்புடி ஒரு இலக்கியவாதியோ அதே மாதிரி காந்தியவாதிங்குறது ஞாபகம் வந்து அந்த கடைல ஒரு அஞ்சு ரூவாய்க்கு அவிச்ச கடலையும் ஒரு அஞ்சு ரூவாய்க்கு வறுத்த கடலையும் வாங்கினேன். 

பிறவு தொடர்ந்த நடைல வறுத்த கடலை பொட்டலத்தை ஜோப்ல வைச்சிகிட்டு அவிச்ச கடலை பொட்டலத்தை பிரிச்சி, கடலைய ஒரு கை எடுத்து வாய்ல போடுறேன்....டிச்சப்ப ஏதோ வாய்ல குத்துச்சு, என்னனு பார்த்தா ...சின்னத ஒரு ஆணி.

நல்ல வேளை முழுங்கி இருந்தா என்ன ஆகிருக்கும்ன்னு யோசனை வந்தப்ப் திடுக்குன்னு ஆகிருச்சு. சரின்னு போய் கேட்கலாம்ன்னு பார்த்தா பதட்டத்துல ஆணிய தூக்கி போட்டிருந்தேன். அதோட போய் பேசினாலே சரியா பதில் சொல்ல மாட்டாங்க, ஆணி இல்லாம போன முஞ்சி குடுத்து கூட பேச மாட்டாங்க, 

ஆணி எதுல இருந்து வந்திருக்கும் யோசிச்சு பார்த்தா, பல வாய்ப்புகள் மனசுல தோனுச்சு. 

அதனால நட்புகளே...... உங்கூட்டு குழந்தைகளுக்கு சாப்பிட தள்ளு வண்டி / அல்லது ரோட்டோர கடைல இருந்து கடலை வாங்கி தரும் போது, கவனமா பார்த்து செக் பண்ணின பிறவு குழந்தைங்க கையாண்ட குடுங்க.           

Monday, April 1, 2013

ஸோஜோ - ஜப்பானிய பேய்


நேற்று பழங்கால ஜப்பானிய பேய் நம்பிக்கைகளை பற்றி படித்து  கொண்டிருந்தேன். அதில் ஸோஜோ என்ற சாப்பாட்டிற்காக அலையும் பேயை பற்றி படித்தேன், ஆச்சரியம் ஸோஜோ போலவே குணம் கொண்ட ஒற்றை கண்ணன் பேயை பற்றி  அப்பாவும் அம்மாவும்  சொல்லி சொல்லி தான் சிறு வயதில் என்னை சாப்பிட வைப்பார்கள்.

அதாவது ஒற்றை கண்ணன் பேய் தினமும் நடு இரவில் வந்து நான் சாப்பிட்டேனே இல்லையா என்று அம்மா அப்பாவிடம் கேட்பானாம். "மேவி சாப்பிட்டாச்சு" என்று அப்பா சொல்லுவாராம். பல சமயம் அப்படியே திரும்பி போய் விடுவானாம், சில சமயம் சந்தேகம் கொண்டு என் வயிற்றை தொட்டு பார்த்து நான் சாப்பிட்டேனா இல்லையா என்று பார்ப்பானாம்.

இதை எல்லாம் நான் அப்பொழுது ரொம்ப உண்மை என்றே நம்பிக்கொண்டு இரவு பயபக்தியுடன் சாப்பிட்டு, காலையில் எழுந்து  அப்பாவிடமோ அம்மாவிடமோ முந்தைய இரவில் ஒற்றை கண்ணனின் வருகையை பற்றி விசாரித்து கொண்டிருப்பேன். பதில் சொல்வது அம்மாவாக இருந்தால் வந்தான் போனான் என்று தான் இருக்கும். இதே அப்பாவாக இருந்தால் அவர் ஒற்றை கண்ணனுடன் நடந்த வாக்குவாதம், அவனை நம்ப வைக்க தூங்கி கொண்டிருந்த எனக்கு, அரை தூக்கத்தில் எழுப்பி சாப்பிட வைத்தது என்று சொல்வார். 

பிறகு காலங்கள் மாற, அப்பா உயர் பதவிக்கு போக, நான் வளர... ஒரு நல்ல நாளில் இருந்து ஒற்றை கண்ணன் எங்கள் வீட்டிற்கு வருவதை நிறுத்தி கொண்டான். என்னை பற்றி கவலை படாத அவனை பற்றியும் நான் கவலை படவில்லை. 

வளர்ந்த பிறகு ஒற்றை கண்ணன் என்பது அம்மா அப்பா என்னுள் வளர்த்த நம்பிக்கை தான் என்று தெரிந்தாலும், அந்த நம்பிக்கையை மீண்டும் வளர்த்து அந்த பொய்மையில் தொலைந்து போக விரும்பினேன். என்னோடு வளர்ந்த சில மனங்களின்  இயல்பு பிடிக்காததால். 

இரவு அலுவலக வேஷங்களில் இருந்து மீண்டு வந்த நேரத்தில் ஒற்றை கண்ணன் பற்றிய நினைவுகள் மங்கி, ஸோஜோ எப்படி இருப்பான், அவனுக்கும் ஒற்றை கண்ணனுக்கும் எதாவது ஒற்றுமை இருக்குமோ என்று எல்லாம் யோசித்த பொழுது இரவு மணி இரண்டு... அதை சரியான நேரத்தில் சாப்பிட்டு தூங்கியவர்கள் அதிகாலை என்றும் சொல்லுவார்கள். ஸோஜோ பற்றிய  குறிப்புகள் தேடலில் இறங்கினேன். 

ஸோஜோ வெண் உடல் கொண்டவன், சிகப்பு நிற தலைமுடி கொண்டவன் என்றும் தெரிந்து கொண்டேன். இணையத்தில் பார்க்க கிடைத்த 15ம் நூற்றாண்டு மற்றும் 16ம் நூற்றாண்டு ஓவியங்கள் மூலம் ஸோஜோவின் கால்கள் வாத்துக்கள் போல் இருக்கும் என்று தெரிந்து கொண்டேன். ஸோஜோ பழங்கால நம்பிக்கை என்ற அளவில் மட்டும் இல்லாமல்  மேடை நாடகம் வரையிலும் பரவி இருக்கிறானாம். 

தேடகளின் நடுவில் குளித்து விட்டு வந்த பொழுது கொஞ்சம் பசித்தது. ஜன்னல் வழியே இரவு வானத்தை பார்த்த பொழுது ..ஒற்றை கண்ணன் எங்கோ அதில் இருந்து கொண்டு என்னை கவனிப்பதாய் உணர்ந்தேன் 

பேய் கதைகள் என்பது ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரங்களில் ஒரு பகுதி. அது அந்த காலத்திய சமூகத்தை படம் பிடித்து காட்டும். பேய் கதைகள் இப்பொழுது நமது நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டு வருகிறது. கலாச்சார பிடிப்புகளில் இருந்து நாம் நழுவி கொண்டே இருக்கிறோம். 


Related Posts with Thumbnails