Pages

Showing posts with label திரைப்பட அனுபவம். Show all posts
Showing posts with label திரைப்பட அனுபவம். Show all posts

Wednesday, September 27, 2017

ஏதுமற்ற காலத்தில் சினிமா

ரொம்ப நாள்ன்னு எல்லாம் சொல்ல முடியாது .... ரொம்ப வருஷம் கழிச்சு பிரின்ஸ் மகேஷ்பாபு & முருகதாஸோட ஸ்பைடர் படத்துக்கு FDFS போறேன். கடைசியா இப்புடி முத நாள் முத ஷோ போய் ஏறக்குறைய பத்து வருஷமாகி இருக்கும்.

அது ஒரு பித்து நிலை. இத்தனைக்கும் இப்ப புக் பண்ணி இருக்குற மாதிரி ஆன்லைன் ல எல்லாம் புக் பண்ண மாட்டேன். அப்படி பண்ணவும் வசதி இல்லங்குறது வேற விஷயம்.

அப்ப தங்கிட்டு இருந்த பெருங்களத்தூர் ரூம் ல இருந்து கிளம்பி நேர தியேட்டர் போயிடுவேன். அங்க போய் அடிச்சுபிடிச்சு டிக்கெட் வாங்கி எல்லாம் படம் பார்ப்பேன். முக்காவாசி தாம்பரத்துல இருக்குற நேஷனல், வித்யா தியேட்டர் ல பாப்பேன். இதுல நேஷனல் தியேட்டர் ல அப்ப படம் பாக்குறதுங்குறது இட்லி குண்டா ல இருந்துட்டு வர மாதிரி இருக்கும். எதாச்சு பாட்டு வந்தா வெளில போய் காத்து வாங்கிட்டு வருவேன்.

இப்ப தான் எம்ஆர் தியேட்டர் ல ஏசி எல்லாம் போட்டு டக்கரா இருக்கு. அப்ப எல்லாம் அங்கன படம் பாக்குறதுங்குறது கக்கத்துல கொள்ளி கட்டைய வைச்சுகிட்டு ஒம குண்டத்துல உட்கார்ந்து படம் பாக்குற மாதிரி தான்.

குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் அப்பவே சூப்பரா தான் இருக்கும். ஆனா அங்க போற அளவுக்கு பஸ் டிக்கெட் வாங்க அப்ப எல்லாம் காசு இருக்காது.

இதுல இன்னொரு கூத்து என்னன்ன தாம்பாரத்துல படம் பாத்துட்டு, திரும்பி பஸ் ல வர காசு இருக்காது ... அதனால ரயில் தண்டவாளம் வழியா நடந்து வருவேன். டைம் வீணாகுமேங்குற கவலை எல்லாம் இல்ல. ஏன்ன அவ்வளவு வெட்டியா இருந்தேன். சிம்பிளா வெட்டி ஆபீஸர்.

இப்புடி தான் லீந்னு ஒரு படம்... அந்த படத்துல நடிச்சவங்களே படத்த முழுசா பாத்து இருப்பாங்களானு தெரியாது. அப்புடி ஒரு மச மொக்கையான படம். படம் தான் அப்புடின்ன தியேட்டர் ஸ்கிரீனும் செம மொக்கையா இருக்கும். எதோ புட்பால வைச்சு படமுன்னு போயிட்டேன். படத்தோட ஹீரோ சிபிராஜ்ன்னு படம் முடிஞ்சு வெளில வந்து போஸ்டர பாத்து தான் தெரிஞ்சு கிட்டேன்.

இதவிட காவிய சோகம் என்னன்ன படத்த பத்தி பேசுறதுக்கு ஒரு ஆள் கிடைக்க மாட்டாங்க. அப்புடியே கிடைச்சாலும் படம் நல்லா இருக்கான்னு கேட்டுட்டு ...சரி மச்சான் ஞாயித்து கிழம என் ஃபிகரோட போறேன்னு சொல்லி கடுப்படிப்பாங்க.

வேலை கிடைக்கலையேன்னு சோகம் இருந்தாலும் ஃபிகர் கூட இல்லையேன்னு அழுகாச்சி + கடுப்புஸ் + சோகமா இருக்கும். அப்ப எல்லாம் ஜிலேபி, லட்டு வகையறா ஃபிகர்ஸ் எல்லாம் கனவுல கூட பாக்க முடியாத அளவுக்கு பஞ்சத்துல இருந்தேன். இண்டர்வியூன்ன மட்டும் தான் சிட்டிக்குள்ள போவேன். அதுவும் காசு மிச்சம் பண்ண ஒரே நாள் ல மூணு நாலு இண்டர்வியூ போவேன். தனி தனியா போனா காசு அதிகமாகுமே என்குற கவலை தான்.

அதனால இந்த மாதிரி ஜிலேபி, லட்டு ஃபிகர்ஸ எல்லாம் சினிமாவுல மட்டும் தான் பாக்க முடியும். அந்த மாதிரி லட்டு ஜிலேபிய எல்லாம் இந்த மாதிரி மட்டமான ஸ்கிரீன் ல பாக்குறப்ப தும்ப பூவுல தூக்கு மாட்டிட்டு தொங்கிறலாம் போல இருக்கும்.

ம்ம்ம்ம்ம்

அது எல்லாம் ஒரு காலம்.

Wednesday, January 20, 2016

A.V.M. - அன்பே வா {Anbe vaa} - 50years - M.G.R. {எம்.ஜி.ஆர்.}

எம்.ஜி.ஆர். நடித்த அன்பே வா படம் வெளிவந்து இந்த பொங்கலோடு ஐம்பது வருடங்கள் ஆகிறது. இந்த படத்திற்கு பல சிறப்பு அம்சங்கள் உள்ளது. திரையரங்கில் நான் பார்த்த முதலும் கடைசியுமான தலைவர் படம். 

எங்கள் பகுதியில் இருந்த மத்திய அரசு தொழிற்சாலையின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர ஊழியர்களுக்கான மனமகிழ் மன்றத்தின் திறந்த வெளி திரையரங்கில் அதிகம் ஞாபகம் இல்லாத ஒரு சனிகிழமை அன்று பார்த்தேன். 

ஜெ.பி.யாக தலைவர் திரையில் தோன்றும் முதல் காட்சியில் ரசிக்க ஆரம்பித்து, ஆனந்தத்தின் உச்சியில் அவர் பாடும் புதிய வானம் புதிய பூமி பாடலில் அவரின் ரசிகனாகிவிட்டேன். 

என்னதான் புதிய வானம் புதிய பூமி பாடல் எனக்கு பிடித்து இருந்தாலும் நான் அதிகம் முணுமுணுப்பது கல்லூரி மாணவர்கள் பாடும் ஒன்ஸா பாப்பா மெத்தமாமா என்னடி அம்மா எங்கள் லிட்டில் டூரிஸ்ட் என்ற பாடல் தான். 

அதுவரை நாயக பிம்பத்திலேயே நடித்து வந்த தலைவர் முதல்முறையாக நகைச்சுவை வேடம் ஏற்றிருப்பார். சின்ன பாப்பூ, ராமைய்யா, புண்ணியகோடி ஆகியோரது நகைச்சுவை மறக்க முடியாத ஒன்று. 

திரையில் படம் பார்த்து கொண்டு இருந்த பொழுது, இடைவேளையில் ஒரு பெரியவர் இந்த படம் வெளி வந்த பொழுது படத்திற்கு இரண்டு இடைவேளை இருந்தாக சொன்னார். உண்மை தான். அன்று பெரும்பாலும் டூரிங் டாக்கீஸில் இரண்டாம் வெளியீடாக அன்பே வா போட்டபட்ட பொழுது படத்தின் நீளம் காரணமாக சூடான ப்ராஜெக்ட்டரை இரண்டு தடவை நிறுத்தி ரீல் சுற்றி, மாற்றி வைத்து படதை ஓட்டினார்கள். 


இடைவேளை போடுவதில் இந்த படத்தில் புதுமை செய்து 
இருந்தார்கள். அது கல்லூரி மாணவர்களுக்கு எம்.ஜி.ஆர். 
சவால் விடுவதற்கு கையை நீட்டி காட்டுவார், அப்பொழுது அவரது 
கையிலிருந்து ஒன்றின் கீழ் ஒன்றாக இயக்குநர் பற்றிய குறிப்பும் 
மற்றும் இடைவேளை பற்றிய குறிப்பும் வரும். 
இது டிவிடியில் காண கிடைக்காத ஒன்று

படத்தில் சேகர் எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது, என் முதல் மனைவி விமானம் என்று சொல்வார்.... அவரது விமானத்தின் மீதான காதலை பின்னாட்களில் சாண்டில்யன் எழுதிய கடல் புறா நாவலில் அகூதா மற்றும் அமீர் ஆகியோரின் கடல் மீதான காதலில் கண்டேன். அந்த நாவலில் ஒரு வரி வரும் (சரியாக ஞாபகம் இல்லை) ஒருவன் கடலில் பயணித்து விட்டால், கடல் அவனை விடாது.. அவனை கடல் அழைத்து கொண்டே இருக்கும். அந்த வரியை போல அன்பே வா படத்தை ஒருதரம் பார்த்துவிட்டதால் அந்த படத்தை மீண்டும் மீண்டும் இந்நாள் வரையில் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். 

அதிகாலை பனியின் பொழுது புதிய வானம் புதிய பூமி பாடல், குளித்து விட்டு வரும் பொழுது லவ் பேர்ட்ஸ் பாடல், நண்பர்களுடன் இருக்கும் பொழுது ஒன்ஸா பாப்பா மெத்தமாமா பாடல் என்று இந்த படத்தை ஞாபகபடுத்தும் விஷயங்கள் தினசரி வாழ்க்கையில் கிடைத்து கொண்டே இருக்கிறது. 

எல்லாவற்றுக்கும் மேலே தான் யார் என்று தெரியாமல் கலாட்டா பண்ணும் கல்லூரி மாணவர்களை பார்த்து தலைவர் சிரிக்கும் அந்த சிரிப்புக்காகவே படத்தை எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம். 

Wednesday, March 18, 2015

பேருந்து சக்கர நாற்காலியும் : காக்கி சட்டை திரைபடமும்



சில வருடங்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகள் பேருந்து பயணத்தில் ஏறி இறங்கும் வசதிக்காக அரசு சில பேருந்துகளில் சக்கர நாற்காலியும் அதை ஏற்ற இயந்திரபொறி வசதியையும் அமைத்து கொடுத்தது. 

இந்த இயந்திர பொறியை பேருந்தின் ஓட்டுனரால் மட்டும் இயக்க முடியும். 

இதன் அறிமுக விழாவின் பொழுது அருமையாக இயங்கிய இயந்திரம், அதன் பின் இயங்கி இருக்குமா என்பது சந்தேகமே...

இந்த மாதிரியான வசதி கொண்டு பேருந்துகள் முக்கிய வழிதடங்களில் இயக்க படுவதே இல்லை. 

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக திட்டங்கள் போடும் அரசு அதை எவ்விதத்தில் செயல் படுத்துகிறது என்பது கேள்வியே. 

உபயோகிக்கும் சதவிகிதம் குறைவு என்பதற்காக இதை பராமரிப்பு இல்லாமல் வைத்து கொள்வது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை. 

பேருந்தில் இதன் அருகே சென்று பார்த்த பொழுது இயந்திரம் இயங்கும் நிலையில் இல்லை என்பது தெரிந்தது. 

ஊடகங்கள் ஏன் இதனை கண்டு கொள்வதில்லை என்றும் புரியவில்லை. ஒருவேளை செய்தியின் வியாபார தன்மை குறைவு என்பதாலா ??? திட்ட அறிமுகத்தின் போது பாராட்டி பேசியது இதே ஊடகங்கள் தான். 

= = = = =

இப்பொழுது தான் வீட்டம்மணியும் நானும் காக்கி சட்டை படம் பார்த்துவிட்டு வந்தோம். 

படம் நல்ல படமா இல்லையா என்ற கேள்வி என்னுள் படம் ஆரம்பித்த முதலே மனதிற்குள் கடல் அலையாய் வந்து கொண்டு இருந்தது. அப்பொழுது பக்கத்தில் அமர்ந்து இருந்த சகியின் முகத்தை திரும்பி பார்த்தேன். அவர் படத்தில் வரும் இமாம் அண்ணாச்சியின் நகைச்சுவையில் சிரித்து கொண்டு இருந்தார். படம் முடிந்த பின் தனக்கு மிகவும் பிடித்து இருப்பதாக சொன்னார். அவருக்கு பிடித்து விட்டால் அது நல்ல படம் தான். 

சமையல் தெரியாதவன் சமைத்த சமையல் மாதிரி இருக்கிறது படம். 

உலகளவில் உடலுறுப்பு வியாபாரம் செய்யும் ஒருவனை காவல் துறையில் கடைநிலை ஊழியன் ஒருவன் பிடிப்பது தான் படத்தின் மைய கரு. நன்றாக திரைக்கதை அமைக்க தெரிந்த யாருக்காவது இந்த கதை கரு கிடைத்து இருந்தால் புகுந்து விளையாடி இருப்பார்கள். பாவம் இயக்குநர். படத்தில் எந்த வகையிலாவது சுவாரசியத்தை கூட்டி விடலாம் என்று பிரபு, இமாம், விஜய் ராஸ் எல்லாம் நடிக்க வைத்து சற்றும் சுவாரசியமில்லாத படத்தை தந்து இருக்கிறார். 

இடைவேளையின் பொழுது தப்பித்து கொள்ள ஒரு வாய்ப்பை இயக்குனர் தருகிறார். ஆனால் சுஜாதா நாவல்களில் வருவது போல் விதி விதி என்ற வஸ்து எங்கோகொரு ஓரத்தில் நின்று சிரித்திருக்கும் போல. வாங்கி வைத்த நொறுக்குத்தீனிகளெல்லாம் விற்க்க வேண்டுமே திரையரங்கு ஊழியர்கள் கதவுகளை பூட்டி வைத்து விட்டனர். சரி யேசுநாதர் தட்டுகள் திறக்கப்படும் என்று சொல்லி இருக்காரே என்று தட்டிய பொழுது திறக்கவே இல்லை. ஆனால் என்னை ஒரு கரம் தட்டியது. பார்த்தால் வீட்டம்மணி "வந்து உட்காரு பக்கி ..." என்று பதிபக்தியுடன் அழைத்தார்.

இரண்டாம் பாதியில் காலத்தின் கால்களில் அடிபட்டு, காலம் நொண்டி கொண்டு கடந்து கொண்டு இருக்கிறதோ என்று சந்தேகம் கொள்ளும்படி படம் இழுவை. 

விஷால் நடித்து வந்த மலைக்கோட்டை படத்தில் வந்த ஆஷிஷ் வித்யார்த்தி ஊர்வசி ஜோடியின் புகழ்பெற்ற ஃபிளாஷ்பேக் காமெடியை இன்னும் எத்தனை படத்தில் காபி அடிப்பார்களோ தெரியவில்லை. 

பப்படமான இப்படத்தை நல்லதொரு எண்டர்டெயினர் என்று சொன்ன நல்லுள்ளத்தை தேடி கொண்டு இருக்கிறேன்.

இம்மாதிரி படம் தயாரித்து வெளியீடும் தேவதூதர்களுக்கு ஒரு வேண்டுகோள். படத்தின் நுழைவுச்சீட்டு உடன் இலவச இணைப்பாக இஞ்சி மரப்பா தந்தால் நலம். ஏற்கனவே அயல்நாட்டு உணவு வகைகளை சாப்பிட்டு கெட்டு போய் இருக்கும் சினிமா ரசிகனின் ஜீரண சக்தியை மேம்படுத்தி இது போன்ற கதைகள் ஜீரணிக்க உதவும்.

                                                 
                                                     
Related Posts with Thumbnails