Pages

Sunday, April 24, 2022

கலவை - 24/04/2022 - இராவணன் பத்து தலைநகரங்கள்

புதிதாக வாசிக்கிறவர்களுக்கு சொல்லி விடுகிறேன், இப்பகுதி பல துணுக்கு செய்திகள் கொண்ட பகுதி.

- - -

இராவணன்...

இந்திய புராணங்களின் உண்மை தன்மையை அறிந்துகொள்ள வேண்டுமென விருப்பம். அப்படி அறிந்துகொள்ள முயற்சிக்கும் பொழுது தான் இது இப்படியாக இருக்கலாமோ என தோன்றியது. 

இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவை தவிர்த்து ராமாயணம் என்னும் கதை உலகெங்கும் மொத்தம் 12 நாடுகளில் கதையாகவும் புராணமாகவும் வழக்கத்தில் இருக்கிறது. மொத்தம் 14 நாடுகளிலும் சேர்த்து 300 வடிவங்களில் ராமாயணம் சொல்ல பட்டும் எழுத பட்டும் வருகிறது. 

அந்த 12 நாடுகள் - பர்மா, கம்போடியா, சீனாவின் திபெத்து, லாவோஸ், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ, நேபால், தாய்லாந்து, மலேசியா, மங்கோலியா, வியட்நாம். 

மேல் சொன்ன நாடுகளில் இந்து சமயம் வழக்கத்தில் இருந்த மாதிரி தெரியவில்லை. 

அதே போல் இந்தியாவில் பல மொழிகளில் பத்தாம் நூற்றாண்டிற்கு பின்னரே எழுத பட்டு இருக்கிறது. 

10ஆம் நூற்றாண்டில் தான் இராமானுஜரின் தலைமையில் வைணவ சமயம் பெரும் எழுச்சியை கண்டது. அவர் நாடெங்கும் வலம் வந்து பலரை வைணவ சமயத்தில் இணைத்தார். 

இப்படி பல தகவல்களை அறிந்து கொள்ளும் பொழுது இராவணனுக்கு பத்து தலை இருந்து இருக்காது ; அதற்கு பதிலாக பத்து தலை நகரங்கள் கொண்டு ஆட்சி செய்து இருக்க வேண்டும். அத்தனை பெரியதாக இருந்திருக்க வேண்டும் இராவணனின் ராஜ்ஜியம்.

இராமாயணத்தில் தண்டகாரண்யம் பகுதியில் இருந்தே இராவணன் ஆளுமையில் இருந்ததாக வரும்.

கடவுள் தன்மைகளை புராணத்தில் இருந்து விலக்கி வைத்து அணுகும்போது தான் அதன் உண்மை ஒருவாறு புரிந்துகொள்ள முடியும்.

- - -

பொன்னியின் செல்வன் நாவலை முடிந்த பின் அதே கதை வரிசையில் படிக்க வேண்டிய பல நாவல்கள் இருக்கிறது. 

அதில் முக்கியமானது அரு.ராமநாதன் எழுதிய வீரபாண்டியன் மனைவி. அதன் சிறப்பு மிகவும் மிகை படுத்த படாமல் கதை நகரும். இக்கதையில் வரும் ஜனநாதன் கச்சிராயன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இளநிலை பட்டப்படிப்பு முடித்த உடன் அப்பா எனக்கு வீரபாண்டியன் மனைவி நாவலை திருச்சி ஹிக்கின்பாதம்ஸ் கடையில் வைத்து வாங்கி கொடுத்தார். 

21 வருடங்களுக்கு முன்பு இலக்கிய சிந்தனை ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக அ.கி. வேங்கட சுப்ரமணியன் "அரு. ராமநாதன் எழுத்துக்களும் எண்ணங்களும்" என்ற பெயரில் எழுதியும் தொகுத்தும் ஒரு புத்தகம் கொண்டு வந்தார். அதனை வானதி பதிப்பகம் தான் பதிப்பித்து வெளியிட்டார்கள். இப்புத்தகத்தை தான் தற்பொழுது வாசித்து கொண்டு இருக்கிறேன்.

- - - 

பொன்னியின் செல்வன் நாவலை மிகவும் விரும்பி படித்தவர்கள் எல்லாம் சங்கதாரா நாவலை படிக்கும் பொழுது பெரும் அதிர்ச்சியடைவார்கள். 

இது இப்படி எல்லாம் இருக்காதே, உண்மைக்கு புறம்பாக எழுதி இருக்கிறார் என சிலம்பாட்டம் ஆடுவார்கள். எதோ நேரில் பார்த்தது போல் பொங்கல் வைப்பார்கள். அவர்களது பின்னூட்டங்களை / பதிவுகளை படிக்கும் பொழுது சிரிப்பாக தான் இருக்கும். 

சங்கதாரா நாவலின் முன்னுரையிலேயே போதிய விளக்கங்களை ஆசிரியர் தந்து இருப்பார். அதனை கூட புரிந்து கொள்ளாமல் பேசுவார்கள். 

பொன்னியின் செல்வன் பிரியர்கள் அதே கதையோட்டத்தில் வேறு நாவல் படிக்க ஆரம்பிக்கும் முன் முதலில் செய்ய வேண்டியது.... பொன்னியின் செல்வனை விட்டு வெளியே வருவது தான்.

- - -

வெங்கட் பிரபு இயக்கத்தில் வந்த மன்மத லீலை படத்தை பார்த்தேன். இது வரையில் அவரது இயக்கத்தில் வந்த படங்கள் எதோ ஒரு வகையில் பிடித்து இருந்தது. 

ஆனால் இந்த படம் எந்த ரகத்திலும் கவரவில்லை. நல்ல தயிர் சாதத்திற்கு ஜிலேபி தொட்டுகிட்டு சாப்பிட்டது போல் ஒரு படம்.

- - -

இணைய பயன்பாட்டில் எனக்கு இது 25வது வருடம். சமூக தளங்களின் பயன்படுத்த ஆரம்பித்து 20 வருடங்கள் ஆகுகிறது.

பதிவுகள் எழுத ஆரம்பித்து 16 வருடங்கள். முதலில் ஆங்கிலத்தில் தான் எழுத ஆரம்பித்தேன் பின்னர் தான் தமிழில் எழுத ஆரம்பித்தேன். 

கைபேசி இணைய பயன்பாட்டில் 17 வருடங்கள். 

பல புனைபெயர்கள். 

இணையத்தில் கற்றது தான் நிறைய.

நன்றி.

- - -

No comments:

Related Posts with Thumbnails