Pages

Showing posts with label தொடர்கதை. Show all posts
Showing posts with label தொடர்கதை. Show all posts

Sunday, June 6, 2021

நீச்சல் II தொடர்கதை II அத்தியாயம் - 2 II தெய்வ தன்மைகள் இல்லாத ராமாயண கதை II Real Life Ramayanam

நீச்சல் II தொடர்கதை II 

அத்தியாயம் – 2

உளவு என்பது சக்கரவர்த்தியின் நேரடி கண்காணிப்பில் வருவதால், அது தொடர்ப்பான எந்த சந்திப்பிலும் அனுமதியின்றி யாரும் கலந்துகொள்ள கூடாது என்பது யாரும் மீற கூடாது சட்டம். ஆதலால் சூர்ப்பனகை ஞானமுருகு இலங்காதிலகம் மற்றும் அதிமலையனது அமைதியை புரிந்து கொண்டு இராவணன் சொல்லும் முன் தானே வெளியில் வந்துவிடுவது நல்லது என வெளியில் வரும் பொழுது தான் அதிமலையனது கையில் இருந்த ஏட்டில் இருந்த பெயரை கண்டுடன் ஸ்தம்பித்து நின்று விட்டாள். 

அப்படி அவள் நிற்கவும், அதிமலையன் ஏதோ விவரங்களை சொல்லி கொண்டபடியே ஏட்டை இராவணனது கையில் கொடுக்கும் பொழுது தான் அந்த யாரும் எதிர் பார்க்காத ஒன்று நிகழ்ந்தது.
இராவணனது அரண்மனை சிகிரியா நகரத்தின் மையத்தில் அமைந்திருந்தது.

 பொது மக்கள் வாழும் குடியிருப்பு பகுதி,  கோட்டை சுவர், கோட்டை சுவரில் இருந்து அரண்மனை வரைக்கும் காலி இடம். ஒரு பதின் பருவ ஆண் அரண்மனைக்கு போக வேகமாக ஓட ஆரம்பித்தால், அவன் அரண்மனை கோட்டை சுவரை சுற்றியுள்ள அகழி பகுதியை அடைய இருபது நிமிடங்களாகும். இந்த காலி இடத்தினை திருவிழா,வெளிநாட்டு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கான மாத சந்தை, போர் பயிற்சி ஆகியவை நடந்த பயன் படுத்த பட்டது. மேலும் நகர குடியிருப்பு பகுதிக்கு சென்று வர  ஒரு வழி தான். நகரத்தை சுற்றி அடர்ந்த காடு.

இரவாணன் உளவு துறை சம்பந்தமான ரகசிய கூட்ட சந்திப்பை எல்லாம் தென் பகுதியில் இருந்த ஆலோசனை கூட்ட மாளிகையில் வைத்து கொள்வான். இந்த ஆலோசனை மாளிகை அரண்மனை கோட்டையின் தெற்கு வாசலை ஒட்டி இருந்தது. உளவாளிகள் எப்பொழுதும் காட்டின் வழியாக  வந்து தென் பகுதியில் இருந்த ரகசிய வாயில் வழியாக வந்து போவார்கள். இந்த வழியில் வந்து போகிறவர்களது பாதுகாப்பிற்காக பலவகையான மரங்கள் மற்றும் பூச்செடிகள் கொண்ட அடர்ந்த தோட்டம் அமைக்க பட்டு இருந்தது.
உள்நாட்டு பதவி பூசல்கள், அயல் நாட்டு அபாயங்கள் என இலங்காபுரியை சுற்றி ஆபத்து நிறைந்திருந்தது. இவைகளை சமாளிக்க இராவணன் மற்றும் ஞானமுருகு இருவரும் சேர்ந்து ஒர் வலிமையான உளவுப்படையை உருவாக்கி இருந்தார்கள்.

அடிமையாய் விற்கப்பட்டு புரட்சி நிகழ்த்தி போர் புரிந்து உலகளவில் மக்கள் வாழ விரும்பும் நாடாக இலங்கையை ஆக்கிய நாள் வரையில் இருவரும் அவர்களது சுவாசமாக இலங்கை இருந்தது.
மக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்காகவும் உளவு அமைப்புகள் பல வற்றை இராவணன் ஏற்படுத்தி இருந்தான். அதனை இருவரும் தங்களது நேரடி கண்காணிப்பில் வைத்திருந்தனர். அப்படி ஒரு அமைப்பு தந்த குறிப்பை பற்றி பேசும் பொழுது தான்அந்த பயங்கரமான நிகழ்வு நடந்தது. 
மறைவில் நின்ற சூர்பனகை தான் அதனை கவனித்தாள். காற்றை கிழித்தபடி அந்த அம்பு இராவணனை நோக்கி வந்தது. 

“அண்ணா ..... “ என சூர்பனகை சத்தம் போடவும் சுதாரித்த இராவணன் சட்டென்று குனிந்தான் , அவ்வாறே மற்ற இருவரும் குனிந்தனர்.
அம்பு வந்த திசையை நோக்கிய சூர்பனகைக்கு சாளரத்தின்  வழியாக தெரிந்த மர கிளையில் இருந்து யாரோ குதித்து ஓடியது போல் தெரிந்தது. 

அறையில் இருந்த அவசரகால மணியை அடித்தான். இரவின்  ஆழ்ந்த அமைதினூடே அந்த ஒசை கோட்டை வாயிற்காவலர்களுக்கு கேட்டது.  அப்படி மணி கேட்ட உடன் என்ன செய்ய வேண்டும் என முன்பே படை தளபதியால் சொல்ல பட்டு இருந்ததால் கோட்டை கதவுகளை மூடினார்கள்.மூடிய  உடன் பத்து பேர் கொண்ட சிறுபடை வேல்கம்புகளுடன் தயாராக இருந்தனர். அப்படி தயாரான உடன் தலைமை காவலாளி இரட்டை தீப்பந்தங்களை பற்ற வைத்து இரு கைகளில் பிடித்தபடி அரை வட்ட முறையில் காற்றில் சுழற்றினான். அவ்வாறு சுழற்றினால் தயார் நிலையில் இருக்கிறோம் என்று பொருள். 

கோட்டையின் தலைமை காவலாளி ஔதடனுக்கு இன்று நடப்பது எல்லாம் வித்தியாசமாக இருந்தது.

 வழக்கத்திற்கு மாறாக அமைச்சர் ஞானமுருகு இரவில் சக்கரவர்த்தியை சந்திக்க வந்தது.

 உடன் ஒரு ஆளை அழைத்து வந்தது, அந்த ஆளும் அமைச்சர் உடன் வராமல், அமைச்சர் வந்து சில நிமிடங்கள் காத்திருந்த பிறகு வந்தான். 

அவன் வந்த உடன் அமைச்சரின் உத்தரவு கிடைக்காமல் உடனே எதோ பேச ஆரம்பித்து கையில் இருந்த ஏட்டினை காட்டியது. 

அப்படி காட்டிய ஏட்டை பார்த்த உடன் அமைச்சரின் முகத்தில் கலவரம் படர்ந்தது என எல்லாம் புதிதாக இருந்தது. 

அவர்கள் ஆலோசனை மாளிகைக்கு போனதை தனது அறையில் இருந்து பார்த்ததை எல்லாம் ஒரு முறை நினைத்து பார்த்தார். 

அவர்கள் போன கொஞ்ச நேரத்தில் மணி ஓசை கேட்டது, எந்த ஆபத்தும் வந்துவிட கூடாது என திருக்கோணமலையில் கோயில் கொண்டு இருந்து திருக்கோணேஸ்வரரை வேண்டி கொண்டார். 

சாளரத்தின் வழியாக பார்த்தபடி சூர்பனகை அதிரும் குரலில் ”இளவேந்தா ...... “ என அழைத்தாள்.

அந்த குரலின் சத்தம் அடங்கும் முன்னரே ஒரு உருவம் வந்தது. அந்த உருவம் வந்ததை கூட திரும்பி பார்க்காமல் சாளரத்தின் வழியாக தெரிந்த தோட்டத்தை பார்த்தபடி  “தேய்பிறை வியூகம்... வில் அம்பு படை ...பத்து ரோஜா அம்பறாத்தூணி ....” என்றாள்.

அப்படி சொன்னவள் பின்னால் இருந்த மூவருக்கு என்ன ஆனது என்ற நினைப்பு இல்லை. யார் அவன் என்ற கேள்வி தான் அவள் மனதில்  ஓடி கொண்டு இருந்தது. 

அடுத்த சில நொடிகளில் மாளிகையின் இரண்டாம் அடுக்கில் இருந்த திறந்தவெளி மேல்தளத்தில் இளவேந்தன் நின்று கொண்டு இருந்தான். 

அவன் முன்பு ஐந்து வில்லாளி வீரர்கள் கொண்ட இரண்டு படை இருந்தனர். 

ஒரு படையில் இருந்த ஐந்து வீரர்கள் தேய்பிறை வியூகத்தின் படி அம்புகளை பூட்டி வரிசையாக நின்றார்கள். தேய்பிறை நிலவு வரிசைபடி முதலில் நின்றவன் ஐந்து அம்புகள், இரண்டாமானவன் நான்கு அம்புகள்..... என கடைசி ஆள் ஒற்றை வில் உடன் இருந்தான். எக்கணமும் பூட்டிய அம்புகளை எய்து விட தயாராக இருந்தார்கள்.

சாளரத்தின் வழியாக பார்த்த சூர்பனகைக்கு யாரோ ஓடுவது புரிந்தாலும், அவன் எங்கே இருக்கிறான் தெரியவில்லை.வில் அம்பு படை மட்டும் போதுமா என யோசித்து கொண்டு இருந்தவள், அறையில் இருந்த விளக்கை எடுத்து வட்டமாக இருமுறை சுற்றி அடுத்த தகவல் குறிப்பை ஔதடனுக்கு தெரிய படுத்தினாள். 

போர் நாய் படைக்கான குறிப்பு அது ஔதடனுக்கு தெரியும். அவர் இருந்த தென் பகுதி கோட்டை வாயிலில் தான் போர் நாய்கள் கட்டி வைக்க பட்டு இருக்கிறது. மொத்தம் இருபது நாய்கள். அவைகளை கழற்றி விட தயாராக வைத்திருக்கும் படி அதன் ரோமானிய பயிற்சியாளருக்கு உத்தரவிட்டார்.

காதுகளை கண்களையும் முழு கவனத்துடன் வைத்தபடி சாளரத்தின் வழி தெரிந்த இருளை பார்த்தபடி நின்று இருந்தாள் சூர்பனகை. மற்ற மூவரை எதுவும் பேச வேண்டாம், அரியணையில் அமர்ந்திருக்கும் படி சொல்லிருந்தாள். 

இருளில் அந்த உருவம் மூச்சு இறைத்தபடி என்ன செய்வது என யோசித்து கொண்டு இருந்தாள். சூர்பனகை அங்கு இருக்கிறாள் என்று தெரிந்ததும் தான் எவ்வளவு பெரிய தவறை செய்திருக்கிறோம் என தன்னை தாணே நொந்து கொண்டான். அவள் வைகை நதி அருகே இருக்கும் பாண்டிய மாளிகையில் தனது தோழி இளவரசி மீனாட்சி உடன் இருப்பதாக தானே தகவல் கிடைந்ததென யோசித்து கொண்டு இருக்கும் பொழுதே  போர் நாய் படையில் இருந்த நாய்கள் குரைப்பது கேட்டது. 

அப்பொழுது  மாளிகையில் இருந்து சங்கோசை கேட்டது. மாட்டி கொண்டாலும் “அந்த” பெயரை சொல்லிவிட கூடாது என்று தீர்மானித்த நொடி. அவன் காலில் ஒரு அம்பு வேகமாக வந்து பாய்ந்தது. 

வலியில் சத்தம் போட முடியாமல் வந்த வழியில் திரும்ப பாதுகாப்பாய் போய் விட முடியுமா என பார்க்க தொடங்கிய நொடி ....

அந்த பயங்கரம் நிகழந்தது...

தொடரும் ....

Sunday, May 23, 2021

*நீச்சல்* II தொடர்கதை II அத்தியாயம் -1II தெய்வ தன்மைகள் இல்லாத இராமாயண கதை II Real Life Ramayana

அத்தியாயம்– 1

(முழுவதும் கற்பனையான கதை)

4000 ஆண்டுகளுக்கு முன்பு.

வசதி , படை பலம் என்று எவ்வளவோ இருக்க தனது அண்ணன் ஏன் பிடிவாதமாக ஒரு குரங்கு கூட்டத்தை அழைத்து கொண்டு வந்து இந்த கடற்கரையில்  அமர்ந்திருக்கிறார், ஆயிரம் போர் வித்தைகள் கற்றவராக இருந்தாலும் ஒரு பலம் பொருந்திய அரசனை வீழ்த்த எப்படி இவரால் முடியும், நான் துணைக்கு இருந்தாலும் எப்படி எங்கள் இருவரால் முடியும் ?என்று யோசித்தபடி மீண்டும் மீண்டும் தனது கால்களை தொட்டுவிட்டு போகும் அலைகளை பார்த்தபடி அமர்ந்திருந்த இராமனை நோக்கி இலக்குமணன் வந்து, பக்கத்தில் அமர்ந்தான்.

“அண்ணா எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை, அண்ணியாரின் தந்தை சனகரும் உங்களது கொள்கைகளை வெள்ளி தட்டில் பொரித்து, அதனை நிருபாசனத்தில் வைத்து ஆட்சி செய்யும் தம்பி பரதனும் இருக்கையில், நீங்கள் ஏன் ஒற்றை மனிதராய், விலங்கினமா மனித இனமா என தெரியாத ஒரு கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு எல்லா வலமும் மிக்க இலங்கை அரசன் இராவணனை  எதிர்த்து அண்ணியாரை மீட்க போர் புரிய கிளம்பி இந்த தனுஷ்கோடி கடற்கரை வரையில் எந்த தைரியத்தில் வந்து இருக்கிறீர்கள் ?”

வழக்கம் போல இராமன் பலமான சிந்தனைக்கிடையில் வட்ட சிந்தனையாளன் இலக்குமணனை பார்த்து சிரித்தான். வாசிப்பு பழக்கம் இல்லாததால் கோபங்களை கையாள தெரியா பருவத்தில் இருக்கிறான் என தனக்குள் நினைத்தப்படி பேச ஆரம்பித்தான்.

“தம்பி நமது தந்தையின் ஆணையிட்ட படி தென்திசை நாட்டுகளுக்கு  அதிக வருமானத்தை ஈட்டி தரும் கடல்சார் வணிகத்தை நமது வசமாக வேண்டும் .....”
பேசி கொண்டு இருந்த இராமனை இடைமறித்து இலக்குமணன்
“சரி வர்த்தகத்தை வசமாக்க ஏன் இந்த தனி நபர் போர், சனகரின் படை  இல்லையா நமது நாட்டு போர் படைகள் இல்லை.. வாடகைக்கு வரும் கூர்கா போர் படை இல்லையா ?”

“இருக்கிறது இல்லையென சொல்லவில்லை, திராவிட ஆட்சியை பிடிப்பது மட்டும் தான் நமது இலட்சியம் என்றால் அவர்களது உதவியை நாடி இருக்கலாம். ஆனால் அது வணிகர்களது நம்பிக்கையை பெற்று தராது. ஆட்சியை வசமாக்கிவிட்டு போனால் வரி மட்டுமே வரும், இலாபம் வராது. மீண்டும்  யாராவது கலகம் செய்து திராவிட நாட்டை நமது கைகளில் இருந்து மீட்கலாம்... வணிகர்களது நம்பிக்கையை வென்று விட்டால் நமது பரம்பரையில் கடைசி வரைக்கும்  திராவிடம் நம் வசம்.”

இலக்குமணன் தான் எவ்வளவு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக, அதன்  சாட்சியாக இருக்கிறோம் என்பதனை நினைத்து பெருமிதம் பட்டான் .இந்த திட்டம் மட்டும்  வெற்றி பெற்றால் சீன, சுமாத்திரா, சிங்கைநகரம் போன்ற நாடுகளுக்கு போகும் கப்பல்கள் நிற்கும் துறைமுகம் நமது வசம் ஆகும்.... அப்படியானால் என யோசிக்க யோசிக்க இலக்குமணன்  கடந்த சில மாதங்களில் நடந்தவை எல்லாம் கண்கள் முன்னால் காட்சிகளாக விரிந்தது.

= = =

சூர்ப்பனகை  ஆயிரம் வித்தைகள் கற்றவள், எவ்வளவு பெரிய படையாக இருந்தாலும் ஒற்றை ஆளாக சமாளித்து கலப்பை வில்லை கொண்டு வெற்றி பெற்று விடுவாள்.

 இராவணனது ஒரே தங்கை. 
தனக்கும் தனது தங்கைக்கும் இருபத்தைந்து ஆண்டுகள் வித்தியாசம் என்பதால் அவள் கற்க ஆசை பட்டத்தை எல்லாவற்றையும் கற்க தகுந்த ஏற்பாடுகள் செய்தான். ஞானிகள் அறிஞர்கள் இருந்த சபையில் எல்லோரிடமும் விவாதம் செய்வது சூர்ப்பனகைக்கு பிடித்த ஒன்று. பல தரப்பு கொள்கைகளுடன் விவாதம் செய்யும் பொழுது அறிவு தெளிவு ஏற்படும் என்பது அவளெண்ணம். 

அவளது அறிவு தேடலுக்கு தடை போடாமல் தஞ்சை, காஞ்சி ,மிதிலை, நாளந்தா மற்றும்  பல சிறந்த பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி பிடித்த விஷயங்களை சிறந்த ஆசிரியர்கள் மூலம் கற்க வழி செய்தான். 

அப்படி ஒரு தரம் பருவகால ஓய்வு விடுமுறைக்கு வந்த சூர்ப்பனகை எங்கோ பல தேசங்கள் கடந்து அறியப்படாத எகிப்து என்ற நிலப்பரப்பில் இறந்தவர்களது சடலங்களை பதப்படுத்தும் புதைப்பதை வழக்கமாக இருப்பதை பற்றி இராவணனிடம் ஆர்வம் பொங்க சொல்லி கொண்டு இருந்தாள். 

அறிவும் அழகும் ஒருங்கிணைந்தவளை இன்னும் எத்தனை நாட்கள் தான் இப்படி தன்னை அறிவு தேடலில் தன்னையே தொலைத்து கொண்டு இருப்பாள். தனது வளர்ப்பில் ஏதேனும் தவறிருக்குமோ, அம்மை அய்யன் இல்லாத குழந்தையை ஒரு சக்கரவர்த்தியை தயார் செய்வது போல் வளர்த்து விட்டோமோ என கவலையில் மாலை நேரத்து மேகங்களை பார்த்து கொண்டு இருந்தான். 

அந்த கவலையென்னும் தீயில் மேலும் எண்ணெய் ஊற்றுவது போல .....

“அண்ணா வங்காள தேசத்தில் மரக்கலம் கட்டுவதை பற்றி கொஞ்சம் கற்று கொண்டு வந்திருக்கிறேன்... நாளை அயல்நாட்டு வணிகர்களை சந்திக்க கந்தார துறைமுகத்திற்கு போகிறோம் அல்லவா .... அங்கு போர் மற்றும் வணிக மரக்கலம் கட்டுவதை பற்றி அவர்களிடம் பேச வேண்டிய விஷயங்கள் கொஞ்சம் இருக்கிறது.... அதனை பற்றி போகும் வழியில் உங்களுக்கு விவரித்து விடுகிறேன் .....” என சூர்ப்பனகை சொன்னதும் அப்பொழுது தான் இராவணனுக்கு அவள் தனது அன்பு தங்கை மட்டும் அல்ல இந்த இலங்காதிபதி அரசாட்சியில் வணிக அமைச்சர் என்றதும் நினைவும் வந்தது. 

கொஞ்சம் நேரம் போக உளவுத்துறை அதிகாரிகள் தர போகும் பரத நாட்டு பற்றிய அறிக்கைகளை படிக்க காத்து கொண்டு இருந்தான். 

சூர்ப்பனகை மெல்லிய குரலில் ..”அண்ணா ஒரு விஷயம் உங்களிடம் சொல்ல வேண்டும்...”. இது வரையில் இல்லாத தயக்கம் கவனிக்க செய்தான் . முகத்தின் மொழியோ அவள் வாழ்வின் முக்கியமான ஒன்றை சொல்ல  இருக்கிறாள் என்பதை சொல்லியது. மனத்தில் அதுவாக இருக்குமோ என்ற சந்தோஷம் ஏற்பட்டாலும் இராவணன் எதையும் காட்டி கொள்ளாமல் ...

“இராமர் என்று ஒரு இளவரசர்... “
என்று சூர்ப்பனகை சொல்ல ஆரம்பிக்கும் பொழுது உளவுத்துறை அமைச்சர் ஞானமுருகு இலங்காதிலகம் தனது படை தளபதியான அதிமலையனோடு உள்ளே வந்தார். வந்தவர் முகத்திலுள்ள கலக்கத்தை கண்டு எதோ முக்கிய விஷயம் போலிருக்கிறது என யூகித்து,
“அரசே நான் உத்தரவு வாங்கி கொள்கிறேன் என சொல்லி அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

 பொதுவில் அண்ணனுக்கு சக்கரவர்த்திக்குரிய மரியாதை தர வேண்டும் என்பதில் சூர்ப்பனகை கவனமாக இருந்தாள்.

அப்படி வெளியே போகும் பொழுது அதிமலையன் கையில் இருந்த ஏட்டில் அயோத்தி என்று தலைப்பு இருந்ததை பார்த்தாள்.

தொடரும்.....
Related Posts with Thumbnails