Pages

Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Wednesday, May 19, 2021

திருக்குறளும் நானும்

திருக்குறளும் நானும்.

இப்படியாக தலைப்பில் எழுதணும் என ஆசை தான், ஆனால் அப்படி எ அப்படி எழுத வேண்டுமென்றால் ஒன்று திருக்குறளை முழுமையாக படித்து இருக்க வேண்டும் அல்லது அதனை பற்றி சிறிதளவு ஆராய்ச்சி ஆவது செய்திருக்க வேண்டும்.

நான் இவை இரண்டும் செய்திருக்கவில்லை.   எனக்கு 13 வயதாக இருக்கும்பொழுது குடும்ப நண்பர் ஒருவர் எனக்கு திருக்குறள் புத்தகத்தை பிறந்தநாள் பரிசாக தந்தார்.

அதுவரை திருக்குறளை ஒரு மனப்பாடப் பகுதியாக பார்த்து வந்த எனக்கு அந்த புத்தகம் பெரிதாக ஈர்க்கவில்லை. 

 இரண்டு வருடங்களுக்குப் பின் எழுத்தாளர் நரசய்யா அவர்கள் பொதிகைத் தொலைக்காட்சியில் ஒரு பேட்டியில் திருக்குறளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.

அது ஒரு சனிக்கிழமை மதியம் என்பதால் பார்க்க வேறு ஒன்றும் இல்லாத காரணத்தால் அந்த நிகழ்ச்சியை வேறு வழியின்றி பார்க்கத் தொடங்கினேன்.

அதில் திருவள்ளுவர் என்பவர் யார் என்பதை கண்டுபிடிக்க திருக்குறள் பாடல்களிலேயே பல துப்பு இருப்பதாய் சொன்னார். ஒரு பதின் வயத்தொற்றவனுக்கு அவர் சொன்ன தகவல்கள் எல்லாம் ஏதோ ஒரு மாயாஜால பெட்டியை திறந்து விட்டது போல் தோன்றியது. 

ஆவல்கள் மிளிரிட குடும்ப நண்பர் தந்த திருக்குறள் புத்தகத்தை படிக்கத் தொடங்கினேன். பெரிதும் ஒன்றும் புரியாததால் புத்தகத்தை மூடி வைத்தேன்.

+2 பள்ளி பரீட்சையில் தோல்வியடைந்து அடுத்து என்ன செய்வது என தெரியாமல் வியாச பாரதம், ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் என படித்து விட்டு அடுத்து என்ன படிப்பது என தெரியாமல் உட்கார்ந்து கொண்டு இருந்தேன்.  அதிகபடியான மன குழப்பத்தில் இருந்த பொழுது தான் மஞ்சள் அட்டையில் பரிசாக வந்த அந்த திருக்குறள் புத்தகம் கண்ணில் பட்டது.எதோ ஒரு வேகத்தில் அதனை எடுத்து படித்தேன்....

ஆள்வினையுடைமை அதிகாரம், குறள் 611 (இப்பொழுது தான் சரியாக சொல்ல தெரிகிறது)

"அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் 
பெருமை முயற்சி தரும்"

குரல் புரியவில்லை பிறவு விளக்கத்தை படித்தேன். சற்று தைரியம் வந்தது.

அந்த அதிகாரத்தின் கடைசி குறள்..

"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் 
தாழாது உஞற்று பவர்."

இதனை படித்து முடித்த பொழுது என்ன செய்ய வேண்டும் புரிந்து இதெல்லாம் தோல்வியே இல்லை புரிந்து, அப்பாவிடம் சொல்லி ஒரு டுடோரியல் செண்டரில் சேர்த்து விட சொன்னேன். 

நான் படித்தது CBSE, அதனால் தமிழக அரசு கல்வி முறையில் என்னால் ஒன்றி படிக்க முடியுமா என அப்பா யோசித்தார். அப்பாவை எப்படியோ பேசி சம்மதிக்க வைத்தேன்.

அந்த நம்பிக்கையை தந்தது இந்த குறள்..

அதிகாரம் தெரிந்து தெளிதல்.

குறள் 505

"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்".

வென்றுவிட முடியும் என நம்பிக்கை தருவது திருக்குறளே.

- நிற்க -

அந்த திருக்குறள் புத்தகம் எனக்கு பரிசாக தந்தவர் கன்னட மொழியை தாய்மொழியாக கொண்டவர். கன்னடர் மூலமாக தான் எனக்கு திருக்குறள் அறிமுகம் ஆனது. அவர் மட்டும் அந்த பரிசை தராமல் இருந்திருந்தால் ஒரு மனப்பாட பகுதியாக மட்டுமே திருக்குறளை அணுகி இருப்பேன்.

நன்றி - லலிதா ஆண்ட்டி அத்தை ( அவரை நான் அப்படி தான் அழைப்பேன்)

Wednesday, March 25, 2015

ஜேகே எனும் நண்பனின் வதை

ஒரு வழியாக சேரனின் ஜேகே எனும்  நண்பனின் கதை படத்தை பார்த்து முடித்தாயிற்று. அழுத்தமான கதை கருவை அழுத்தமில்லாமல் படைத்திருக்கிறார் இயக்குனர்

மரணம் நோக்கிய ஒருவனது பயணத்தை பற்றிய கதை தான் என்றாலும் அதற்குரிய மெனகிடல்கள் எதுவும் காட்சி படுத்துதலில் தெரியவில்லை

வலசை பறவைகளின் பண்பு,  தனித்து மரணித்தலின் கொள்கையை ஏற்று கொண்டு நாயகன் தனது குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக தொழிலதிபராகி ... பணம் சேர்த்து, குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றி ஆகியவை நடப்பதற்குள், எதை நோக்கி இப்பப்படம் நகர்கிறது என்று யோசித்து யோசித்தே பார்வையாளன் குழம்பி போய் விடுகிறான்.

படம் ஆரம்பித்து பத்து நிமிடங்களுக்கு கதை ஆரம்பித்து விட வேண்டும் என்பது சர்வதேச திரைகதை விதி. சரி இது வணிக படமல்ல இலக்கிய படம்,  பரிசோதனை படம் என்று ஜல்லி அடிக்க பட்டாலும் கூட கதை என்ற வஸ்து ஒன்று இருக்க வேண்டுமே.

உண்மைக்கு மிக நெருங்கிய படம் என்று சிலர் சொல்லலாம் (அவை எல்லாம் "லாம்" என்ற வகையிலேயே தான் இருக்கும் என்பதை குறித்துக்கொள்ள வேண்டும்), ஆனால் நிதர்சனத்தில் எங்கு ஒரு வியாபார ஒப்பந்தம் வாடிக்கையாளரை சந்தித்த சில நிமிடங்களில் கையெழுத்து ஆகுகிறது. அம்மாதிரியான லெமுரிய கால வாடிக்கையாளர்கள் இருந்தால் எனக்கு சொல்லவும் நானும் அவர்களை தான் தேடி கொண்டு இருக்கிறேன்

தேடல் என்று சொன்ன உடன் தான் படத்தில் வரும் ஒரு வசனம் (வசனமல்ல, அது வஜனம்) "ஃபேஸ்புக்க ஒப்பன் பண்ணி பாரு, எவ்வளவு பேர் உன்னைய தேடுறாங்கன்னு தெரியும்"... இந்த நவீன காலத்தில் வாழ்வியல் தேடல் என்பது ஃபேஸ்புக்கில் தான் உள்ளது என்பதை தெளிவாக சொன்ன இயக்குனரின் ஞான மேலாண்மையை (இதை ஆண் மேல் ஆமை என்று கூட சொல்லலாம்) நான் மெச்சுகிறேன்

படத்தில் நாயகன் எப்பொழுதும் இடிச்சபுளி மாதிரியே இருக்கிறார். மறைத்த நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் கூட இப்பட நாயகனை விட நன்றாக நடிப்பார்

கண்டிப்பாக இது ஒரு பரிசோதனை படம் தான், ஆனால் பல பரிசோதனைகளை செய்யும் விஞ்ஞானிகள் கூட வாய் இல்லாத எலிகள் மேல் தான் முதலில் பரிசோதனை செய்வார்கள். அதற்கு எலிகள் எனக்கு தெரிந்து காசு எதுவும் தருவதில்லை. பல பப்படங்களை தயாரித்து தமிழக சினிமாதுறை ஒரு மோசமான நுகர்வு கலச்சாரத்தை நிறுவி கொண்டு இருக்கிறது

சி2எஃச் நல்ல திட்டம் தான், நல்ல படங்கள் மட்டுமே அதில் வெளிவரும் என்று சேரன் உறுதியளித்தால் தொடர்ந்து ஆதரவளிக்கலாமென்று இருக்கிறேன்

Thursday, August 29, 2013

*கலவை* - } மனபிறப்பு கருத்துக்கள் {

உலக முதலீட்டாளர்களுக்கு இந்தியா மீது நம்பிக்கை போய்விட்டது என்று ரத்தன் டாடா கூறியுள்ளார். 

ஆனால் பல சந்தை ஆய்வாளர்கள் கூறுவது என்னவென்றால், உலக முதலீட்டாளர்களின் முதலீட்டு அட்டவணையில் இந்திய சந்தை முக்கிய கவனம் பெறாவிட்டாலும், அதனுடைய பங்கு குறையவும் இல்லை அதிகமாகவும் இல்லை. 

இந்திய அரசோ ரூபாய் மதிப்பை சரி செய்ய இப்பொழுது வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலம் வெளிநாட்டு பண வரவை அதிகபடுத்தும் முயற்சிகளை எடுத்துள்ளது. இந்த முயற்சியின் நேர் நோக்கம் சேமிப்பு கணக்குகள், கடன் பத்திர முதலீட்டுகள் மற்றும் பல.

வங்கிகள் பொதுவாய் நிதியாண்டு இறுதியில் தான் முடிவு செய்ய பட்ட லாப கண்க்கை தக்கவைத்து கொள்ள இந்த மாதிரியான முயற்சிகளை கையாளும். இப்பொழுது அரசு மற்றும் மதிய வங்கியின் அனுமதியோடு கையாள்கிறது. இதே போல கையாளும் தன்மை 1990களின் இறுதியில் கையாள பட்டது.

நிலையை கையாள அரசு அந்நிய நிறுவனங்களுக்கு நாட்டு இயற்கை வளங்களை கொல்லை அடிக்க அனுமதி தந்தாலும் தருமென்று தெரிகிறது. 

பொருளாதார மேலாண்மை என்ன சொல்கிறதென்றால்... ஒரு நாட்டின் பொருளாதார நிலையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல அந்நிய முதலீடு ஆரம்ப காலங்களில் அவசியமானது தான். ஆனால் அதையே நம்பிருந்தால் நாடு கேட்பார் கைபிள்ளையாகிவிடுமென்று.

இந்த நேரத்துக்கு எல்லாம் உள்நாட்டு உற்பத்தியை பெருக்கிருக்க வேண்டும். ஆனால் எந்த அரசும் அதை செய்யவில்லை. 

ஏற்றுமதி இறக்குமதி என்று இரண்டும் சரிசமமாக இருக்க வேண்டும். என்றுமே ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாகி விட கூடாது. அப்படி இருந்தால் அது மோசமான நாட்டு மேலாண்மைக்கு அறிகுறி. 

அப்படி இறக்குமதியே இருந்தால் விலைவாசி கட்டுக்குள் இருக்காது. அப்படி இல்லையென்றால் அது பொது மக்களை தான் பாதிக்கும். அந்த வேளையில் ஏறும் விலையை சமாளிக்க பொதுமக்கள் சேமிப்பில் தான் கை வைப்பார்கள். அப்படி கைவைக்கும் பொழுது நாட்டின் மொத்த பண கையிருப்பு தொகை குறையும்.


= = = = =
தமிழில் அதிகம் பயன் படுத்த படாத எழுத்துக்கள், எனக்கு தெரிந்து இவைகளை மொழி அனாதை என்றே சொல்லலாம். 

ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙெ, ஙே, ஙொ, ஙோ, ஞி, ஞீ, ஞு, ஞெ, ஞே, ஞொ, ஞோ, ....

நானும் பல புத்தகங்கள் படித்து இருக்கேன், ஆனால் எதிலும் இவ்வாற்றின் பயன்பாட்டை.....கண்டதில்லை. . 

மொழி வளர்ச்சி என்பது இவைகளை விட்டுவிட்டு வளர்க முடியாது.


= = = = =
ஒரு முப்பது வருஷதுக்கு முன்னாடி சுஜாதா விஞ்ஞான புனைவுகளை எழுதினப்ப சில பேர் கிண்டல் அடிச்சாங்க. இது எல்லாம் சாதியமான்னு.

நிலைமை அப்படி இருக்குறப்ப விஞ்ஞான முன்னேற்றங்கள் இல்லாத காலத்தில், அதாவது 150 வருஷத்துக்கு முன்னாடி விஞ்ஞான குறிப்புகளோடு பூமியின் நடுபகுதிக்கு நாயகன் பயணிக்கிற மாதிரி ஒரு நாவல் எழுதிருக்கிறார்ன்ன அவருக்கு என்ன மாதிரியான கற்பனை திறமை இருக்கும்ன்னு யோசிச்சு பாருங்க.

அப்ப அவரை என்ன மாதிரி கொண்டாடி இருப்பாங்கன்னு நினைச்சு பார்க்கவே பிரமிப்பா இருக்கு.

ஜூல்ஸ் வெர்னெ [JULES VERNE] ...... எல்லோருக்கும் தெரிந்த "எண்பது நாட்களில் உலகம் [AROUND THE WORLD IN EIGHTY DAYS] நாவலை எழுதியவர். அதில் பந்தய பயணத்தில் கால அளவு மாற்றங்களால் நாயகன் வெற்றி பெறுவது போல் வடித்து இருப்பார். அக்கால பிரிட்டிஷ் காலனிய நாடுகளின் இயல்பை ஒரளவுக்கு நன்றாக எழுதி இருப்பார்.

இந்த பூமிக்குள் போகும் நாவலை தழுவி 1950களில் ஒரு படமும், சமீபத்தில் ஒரு படமும் வந்திருக்கிறது. இரண்டையும் பார்த்திருக்கிறேன் என்பதால் கதை எனக்கு நல்லா தெரியும். இருந்தும் ஜூல்ஸ் வெர்னெவின் வார்தைகளில் படிக்க வேண்டுமென்ற காரணத்திற்காக இப்பொழுது படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.

எல்லா படைப்புகளையும் பிரஞ்சு மொழியில் தான் எழுதி இருக்கிறார். பிற்பாடு தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க பட்டிருக்கிறது. 

பிரஞ்சு மொழியில் இவர் தந்திருக்கும் நுண்ணிய குறிப்புகளெல்லாம் ஆங்கிலத்தில் கொண்டு வர ரொம்ப கஷ்ட பட்டிருக்கிறார்கள். 

இவரது மற்றொரு சிறப்பு கதை விவாரிப்பு தான். 

அப்பொழுதே மனிதன் நிலவுக்கு செல்வது போலெல்லாம் கதை எழுதி இருக்கிறார்..... 150 வருடங்களுக்கு முன்பு. 

இவரையும் இன்னொருவரையும் எழுத்துலக விஞ்ஞான தீர்க்கதரிசி என்று சொல்வார்கள். 

பிற்பாடு நேரம் கிடைக்கையில் இவரை பற்றி இன்னும் விரிவாக எழுதுகிறேன்.


= = = = =
வர வர ஃபேஸ்புக் ல லைக் போடுற பைத்தியகார தனம் அளவுக்கு மீறி போயிட்டு இருக்கு.

நேத்து சொந்தகார அண்ணன் ஒருதரு சாயங்காலமா வீட்டுக்கு நான் ஆபீஸ் ல இருந்து திரும்பி வந்த நேரமா வந்திருந்தார். எல்லோருக்கும் அவரைய பிடிக்கும். ரொம்ப நாள் கழிச்சு அவரை பார்த்த சந்தோஷத்துல.... அவரை போட்டோ எடுத்து ஃபேஸ்புக் ல போட்டு, சொந்தகார பயபுள்ளைங்களை சிலதை கைய பிடுச்சு இழுத்திருந்தேன். சொந்தகாரங்க சில பேர்கிட்ட இருந்து லைக் / கமெண்ட்ஸ் வந்துச்சு.

எல்லோரும் ஹம் ஆப்கெ ஹை கௌன் குடும்பம் மாதிரி பாசத்துல கும்பமேளா நடத்திகிட்டு இருந்த சமயத்துல .....

இது எல்லாம் தெரியாத ஆபீஸ் ல என் கூட வேலை பார்க்குற ஆடுங்க இரண்டு போட்டோவுக்கும் கமெண்ட்ஸுக்கும் லைக் போட்டுட்டு போயிருக்குங்க.

போட்டோவுக்கு லைக் போட்டதை கூட ஒரளவுக்கு புரிஞ்சுக்க முடியுது. ஆனா எதுக்கு கமெண்ட்ஸ் எல்லாத்துக்கும் லைக்கிங் போட்டாங்கன்னு தெரியல.


= = = = =
நானும் சென்னைய பத்தி எதாச்சு சொல்லணும்ன்னு தோனுது...
ரொம்ப சந்தோஷத்தையும் வலியையும் எனக்கு தந்தது சென்னை தான்.

என்னை ஒரு பொண்ணு காதலிச்சதும் பிறகு என்னை விட்டு பிரிஞ்சு போனதும் இதே சென்னைல தான்.

எதிர்கால பற்றின பயத்தை தந்தது இந்த சென்னை தான். உன்னக்குள்ளையும் எதோ திறமை இருக்குடான்னு நம்பிக்கை தந்ததும் இதே சென்னை தான். இன்னும் நிறைய.... சொல்ல போன முண்டகலப்பையா இருந்த என்ன மாத்தினதும் சென்னை தான்.


= = = = =
மகன்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் மாச கடைசியில் பட்ஜெட்டில் துண்டு விழும் பொழுது.... பெற்ற மகன் குடும்ப கணக்கில் விளையாடி இருக்கிறானென்று.

# வர வர இந்த தங்கமீன்கள் பட டயாலாக்கை வைச்சு பொண்ணுங்களை பெத்தவங்க பண்ணுற அலும்பு தாங்க மிடியல


= = = = =
வந்த பொழுதே பார்த்திருக்க வேண்டியது, ஆனால் ஏதேதோ காரணங்களால் பார்க்க முடியாமல் போயிவிட்டது. அப்பொழுது என் வட்டத்தில் மிகவும் பரபரப்பாக இந்த படத்தை பற்றி பேசி இல்லை இல்லை விவாதமே பண்ணி கொண்டிருந்தார்கள்... 

காமூகனோடு ஒரு பெண் என்பது தான் பேச்சின் மைய பொருளாக இருந்தது. அந்த பாத்திரத்தை உணர்ந்து வாழ்ந்து நடித்து இருப்பார் நவரச நாயகன் கார்த்திக்.

முதல் படத்தை காதலை போற்றி எடுத்த அகத்தியன் இந்த படத்தில் காதல் ஒரு கெட்ட வார்த்தை என்று நாயகனை சொல்ல வைத்திருப்பார்.அவனது நிலை மாறுவது தான் கதை போக்கின் முக்கிய அம்சம்.

கோகுலத்தில் சீதை.


= = = = =
நா.பாரதசாரதி எழுதிய "சத்திய வெள்ளம்" நாவலை வாசிக்க ஆரம்பித்து இருக்கிறேன். 

1960களில் மொழி போராட்டத்திற்கு பிந்திய கல்லூரி மாணவ பருவ காலகட்டத்தை கதை களமாக கொண்டுள்ளது. அந்த கால மாணவ வாழ்க்கையை அழகாக பதிவு செய்திருக்கிறார் நாபா. அதுவும் சிந்தனை போர் என்று எல்லாம் வர்ணித்திருக்கிறார். பொறாமையா இருக்கிறது அந்த காலத்திய மாணவர்களை நினைத்தால். நிச்சயம் அந்த காலத்தில் கல்லூரி படித்தவர்களுக்கு இந்த நாவல் நாஸ்டல்ஜியா இருக்கும் என்று நினைக்கிறேன். 

முக்கியமாக மாணவர்களின் அரசியல் சார்பு எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. நான் சோப் கட்டி மனப்பான்மை கொண்ட மாணவர் மத்தியில் படித்ததால் கூட அப்படி தோன்ற காரணமாக இருக்கலாம். 

இப்பொழுது தான் ஆரம்பித்து இருக்கிறேன் என்பதால் எந்த முன்முடிவுக்கும் வர ஆசையில்லை. படித்த பிறவு விமர்சனம் எழுதலாமென்றிருக்கிறேன். 


= = = = =
எந்த அளவுக்கு புத்தகங்களை தேடி தேடி வாங்குவேனோ அதே அளவுக்கு பத்திரிக்கைகளையும் தேடி கண்டிபிடித்து வாங்கி படிப்பதில் எனக்கொரு அலாதி பிரியம்.  ஒரு 14 (முன்பு 30 ஆக இருந்தது) பத்திரிக்கைகள் கிட்ட வாரம் / மாதம் தவறாமல் படித்து விடுவேன். இலக்கியம், பொருளாதாரம், ஜனரஞ்சகம் என்று எல்லாம் கலந்திருக்கும். 

சிறப்பு பகுதிகளுக்கென்று சில பத்திரிக்கைகள் வாங்குவது இதில் சேர்த்தி இல்லை. 

இந்த சுகமான வாசிப்பு பயணத்தில் சில  பத்திரிக்கைகள் தொடர்ந்து வாசிக்க முடியாமல் போவதுண்டு. அந்த வரிசையில் தமிழ் ஆழி, உயிர் எழுத்து, காட்சி பிழை ...மூன்றும் சேர்ந்து விடும் என்று நினைக்கிறேன். 

வழக்கமாய் வாங்கும் கடைகளில் தமிழ் ஆழி, உயிர் எழுத்து இரண்டும் தற்பொழுது கிடைப்பதில்லை.


= = = = =
மரணத்துக்கு கருணை இருந்தால்
திரும்பிவரலாம் என்பதும் இருந்தால்
மணம் மிகுந்த ஒரு இரவில்
நாம் பூமிக்குத் திரும்பி வரலாம்
அந்த வளைந்து செல்லும் சந்துகளின் வழியே
கடலை காண்பதற்கும்
வெண்ணிரவில் அதே தேனை அருந்துவதற்கும்
இந்த எதிரொலிக்கும் கடற்கரைக்கு இரவில்
மீண்டும் இறங்கி வரலாம்
நீண்ட கடலின் மிதமான பேரொலியில்
இங்கே பரந்த நட்சத்திரங்களின் ஒளியில்
ஒரு மணி நேரம்
நாம் மகிழ்ந்திருப்போம்
ஏனெனில் இறந்தவர்கள் சுதந்திரமானவர்கள்.

..                                                    ..  - சாரா டெஸ்டேல்


= = = = =

இந்தியாவில் இருக்கும் பல ஏரிகள் சரித்திரமாகி கொண்டிருக்குறது. இன்னும் கொஞ்சம் வருடம் போனால் அவையெல்லாம் இருந்த சுவடே இல்லாமல் போகிவிடும் நகரமயமாக்குதல். அப்படி தனது சுவடை இழந்து கொண்டிருக்கிறது போரூர் ஏரி. 

ஒரு காலத்தில் கோடம்பாக்கம், வடபழனி ஆகிய பகுதிகளில் இருந்த வயல்களுக்கு இந்த ஏரி தான் நீர்வளமாக இருந்துள்ளது. சென்னை நகர வளர்ச்சியினால் நடந்த ஆக்ரமிப்புகளில் இந்த ஏரியின் ஒரு பகுதி வீட்டு மனைகளாகவும் மற்றொரு பகுதி தனியார் பகுதியாகவும் (ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவ கல்லூரியின் இடது பகுதி பிறவு செட்டியார் அகரம் தெரு பகுதி)     மாறிவிட்டது.

மூன்று வருடங்கள் முன்பு வரை தொழிற்சாலை மற்றும் வீட்டு மனை கழிவுகளுக்கு வடிகாலாகவும் இருந்துள்ளது. 

எல்லாவற்றியிலும் தப்பித்து ஏதோ பெயருக்கு இருந்த ஏரியின் மேல் தேசிய நெடுஞ்சாலை துறையினர் பலம் கட்டி உலை வைத்தனர் ஏரிக்கு. இப்பொழுது ஏரியை சுற்றி கம்பி வலை போட்டுள்ளனர் எதற்கு என்று தெரியவில்லை. 

கரையோரம் வறண்ட பகுதிகளில் வீடுகள் முளைந்து கொண்டே இருக்கின்றன. 

போரூர் ஏரியை பற்றி எல்லாம் வாய் வழி தகவல்களாகவே இருக்கிறது. ஆவணங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை. 

சென்னையில் ஏற்கனவே காற்றில் நீர்பசை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதில் வேறு பெட்ரோல் வண்டிகள் மூலம் வரும் புகை, குளிர்சாதனப் பெட்டிகள் மூலம் காற்றில் குறையும் நீர்பசை ....... இவைகளால் சென்னை மாநகராட்சி இந்த  ஏரியை காப்பாற்ற எதாவது செய்ய வேண்டும். 

இயற்கையின் ஒரு பகுதியான மனிதன், இப்பொழுது இயற்கைக்கு எதிரியாக இருக்கிறான். 


= = = = =


Related Posts with Thumbnails