Pages

Sunday, September 29, 2024

வரி - வரி ஏய்ப்பு - வாடகைக்கு வங்கி கணக்குகள் - அத்தியாயம் 3


போன அத்தியாயத்தில் பொருளாதார குருவிகளிடம் கருப்பு பணம் வருகிற வரைக்கும் பார்த்தோம். கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் முதல் படியாக இந்த குருவிகள் பயன்படுத்துவது பணத்திற்கு ஆசைபடும் ஏழ்மை நிலையில் இருக்கும் வங்கி கணக்குகள். 

இப்பொழுது தினசரி கஷ்ட பட்டு வேலை பார்த்து மாதத்திற்கு 10 ஆயிரம் சம்பாரிக்கும் ஒருவர் தான் இந்த குருவிகளின் குறி. இவர்களுக்கு வெளி உலகம் தெரியாது மேலும் இவர்களது உலகம் ஒரு சிறு வட்டத்திற்குள் இருக்கும். அது போலவே இவர்களது விழிப்புணர்வும் ஒரு எல்லைக்குள்ளாகவே இருக்கும். அதனை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி கொள்வார்கள் இந்த குருவிகள்.

பொதுவாக வாடகை என்று எல்லாம் வெளிப்படையாக தூண்டில் போட மாட்டார்கள் குருவிகள். தங்களுக்கு வியாபாரத்தின் மூலம் ஒரு தொகை வர வேண்டியது இருக்கிறது ஆனால் வங்கி கணக்கை முடக்கி இருப்பதால் அதனை பயன்படுத்த முடியாமல் இருக்கிறேன், கொஞ்சம் பணம் அனுப்பி பெற வேண்டி இருக்கிறது யாரை கேட்டும் உதவ யாரும் வரவில்லை, அந்த பண பரிவர்த்தனைகள் உன் வங்கி கணக்கில் செய்து கொள்ளட்டுமா, சும்மா எல்லாம் இல்லை அதற்கு தரகு பணமாய் 5000 ரூபாய் தருகிறேன் என்பதாய் இருக்கும் அந்த தூண்டில்.

மாதம் முழுவதும் கஷ்ட பட்டு பார்க்கும் வருவாய் சும்மா இருக்கும் வங்கி கணக்கின் மூலம் பாதி வருமானம் கிடைத்தால் லாபம் தானே என அந்த ஏழ்மை நண்பர் யோசிப்பார். கொஞ்சம் கடன் பிரச்சனையை சமாளித்துவிடலாமென யோசிப்பார்.

பெரியதாக பொருளாதார குற்றங்கள் பற்றி தெரியாததால் பல விஷயங்கள் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதால் என் வங்கி கணக்கு என் உரிமை என முடிவெடுப்பார்.

பிறவு என்ன நடக்கும் ?

பொருளாதார குருவிகள் இதே போன்ற பல அப்பாவிகளை பிடிப்பார், அவர்களது வங்கி கணக்குகள் கைவசம் வந்த உடன் வேலையை காட்ட ஆரம்பிப்பார்.

இந்தியாவில் தினசரி வங்கி கணக்கில் ஒரு லட்சம் மேல் பண பரிவர்த்தனை நடந்தால் இந்திய மத்திய வங்கிக்கு பரிவர்த்தனையின் விவரங்கள் வங்கியால் பகிர்ந்துகொள்ள படும். 

வங்கிக்கு தெரியாத நபர் என்றால் நேரில் பார்த்தோ அலைபேசியில் அழைத்தோ விவரங்கள் கேட்டு குறித்து வைத்துகொண்டு அவற்றை மத்திய வங்கி உடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். (இதற்கான அறிக்கை மத்திய வங்கியின் இணையதளத்தில் இருக்கிறது - https://www.rbi.org.in/commonperson/English/Scripts/Notification.aspx?Id=117 )

இதனை தெரிந்துகொண்ட குருவிகள் அந்த அப்பாவிகளின் வங்கி கணக்கில் தொடர்ச்சியாக கொஞ்சம் கொஞ்சமாக வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி கொண்டு இருப்பார்கள்.

முக்கியமாக அப்பாவிகளின் வங்கி கணக்குகள் ஒரே வங்கியை அல்லது ஒரே வங்கி கிளையை சேர்ந்த ஒன்றாக இல்லாத மாதிரி பார்த்து கொள்வார்கள்.

ஏனென்றால் ஒரே ஆள் தொடர்ச்சியாக பல்வேறு கணக்குகளில் பணத்தை செலுத்திகொண்டு இருந்தால் ஏன் என்ன என வங்கி அதிகாரிகள் கேட்க வேண்டும்.

அதனால் மாற்றி மாற்றி கருப்பு பணத்தை மொத்தமாய் வங்கி கணக்கில் கொண்டு வந்திருப்பார்கள்.

பிறகு இந்த பணத்தை எல்லாம் ஏதோ தொண்டு நிறுவனத்திற்கோ அல்லது மத பிரச்சார நிறுவனத்திற்கோ அனுப்பி வைக்க படும்.

இந்த பரிமாற்றத்திற்கு மூன்று வாரங்களில் இருந்து இரண்டு மாதங்கள் வரைக்கும் குருவிகள் கால அவகாசம் எடுத்துக்கொள்வார்கள்.

சொன்ன மாதிரியே அப்பாவிகளிடம் வங்கியில் இருந்து யாராவது கூப்பிட்டு பண பரிவர்த்தனை பற்றி கேட்டால் சொத்து விற்க பணத்தில் உறவினர் கொடுத்தது நியாயபடி எனக்கி வர வேண்டிய பங்கு என சொல்லுங்கள் என சொல்லி விடுவார்கள்.

இது போன்ற காரணங்கள் சூழ்நிலைக்கு ஏற்றது போல் சொல்லி கொடுக்க படும்.

மேலும் இந்த பண பரிவர்த்தனையை எல்லாம் இந்த பொருளாதார குருவிகள் நேரில் செய்ய மாட்டார்கள். இவர்களுக்கென்று ஒரு புள்ளிங்கோ கூட்டம் இருக்கும். பெரும்பாலும் அவர்களும் அப்பாவிகள் தான் எதோ அண்ணன் வாழ்க்கைக்கு வெளிச்சம் காட்ட போகிறாரென நம்பி மோசம் போய் கொண்டு இருப்பார்கள்.

ஒவ்வொரு வங்கி கணக்கிலும் குறிப்பிட்ட அளவிற்கு தான் பணத்தை செலுத்துவார்கள். நிறைய செய்தால் சந்தேகம் வந்துவிடும் என்ற காரணத்தால்.

சரி இந்த தொண்டு நிறுவனமோ அல்லது மத பிரச்சார நிறுவனமோ பணத்தை எடுத்து ஓடிவிட்டால் என்ன செய்வார்கள் ?

அப்படி எல்லாம் நடக்காது, தரவேண்டியது எல்லாம் சரியாக தரபட்டு கொண்டு இருக்கும். தரகு பணம்.

மேலும் இந்த பரிவர்த்தனையை எல்லாம் மறைக்க பொதுமக்களிடமிருந்தும் அதிகமாக நன்கொடை வாங்குவார்கள்.

காரணம்.

திருப்பதியில் மொட்டை அடித்த நபரை கண்டுபிடிக்க முடியுமா ? முடியாது ஏனென்றால் பலர் மொட்டை அடித்து இருப்பார்கள். அது போல பல கோடிகள் நன்கொடையாக  வரும் பொழுது சில லட்சங்கள் கண்டு கொள்ளாமல் விட படும். 

பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் கதையாய் கருப்பு பணமும் நன்கொடை என்ற அடையாளத்தில் மறைந்து கொள்ளும்.

எல்லா தொண்டு நிறுவனங்களும் பிரச்சார நிறுவனங்களும் இப்படியாக என கேட்டால் இல்லை. நேர்மையாய் இருக்கும் பல இருக்கின்றன. 

ஆனால் இன்றைய தேதியில் பல தொண்டு நிறுவனங்கள் உருவாகி கொண்டு இருக்கிறது என்பதும் உண்மை. 

கருப்பு வெள்ளை ஆட்டத்தில் இது மட்டும் தான் வழியாக எடுத்து கொள்ள படுமா ?

இல்லை இதுவும் ஒரு வழி.

அப்படியென்றால் இன்னொரு வழி ?

 கடன்கள்....

தொடரும்

#வரி #வரிஏய்ப்பு

No comments:

Related Posts with Thumbnails