Pages

Showing posts with label வாசிப்பு. Show all posts
Showing posts with label வாசிப்பு. Show all posts

Sunday, September 13, 2020

இரு புத்தகம்

படித்து முடித்தது - குபேரவன காவல், இதிகாசத்தை மைய படுத்திய கதையில் பரபரப்பான சம்பவங்கள் எதிர்பார்த்தேன். அதுவும் மகாபாரத புருஷாமிருகம், யட்சிணி, குபேரவனம் எல்லாவற்றையும் வைத்து வாசகனை மிரட்டி எடுத்திருக்கலாம்.

ஆனால் ஆசிரியர் வேறொரு கோணத்தில் எழுத்திருக்கிறார். 

ஒரு வேளை அதே கதை போக்கில் அவர் இந்த நாவலை எழுதிருந்தால் வாசகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கும்.

படிக்க ஆரம்பித்திருப்பது - முகம்மது யூனுஸ் எழுதிய "Banker To The Poor" என்னும் புத்தகம். 
முகம்மது யூனுஸ் என்பவர் பங்களாதேஷ் நாட்டின் முக்கியமான பொருளாதார நிபுணர். பங்களாதேஷ்  நாட்டில் கிராமீன் வங்கி தொடங்கியதற்கும், சிறிய அளவிலான கடன்கள் மற்றும் நுண்ணிய பொருளாதார கொள்கை ஆகியவற்றுக்காக நோபல் விருது வாங்கி இருக்கிறார்.

ஏழைகள் இல்லா உலகம் உருவாக்க போராடி கொண்டு இருப்பவர்.

சமீபத்தில் ராகுல் காந்தி உடனான இணைய வழி உரையாடலின் ( https://youtu.be/f4J7hK_1n1E ) பொழுது இந்திய நாட்டின் அடிப்படை பொருளாதார அமைப்பு தவறானதாக இருக்கிறது, அது மாற்ற பட வேண்டும் என சொல்லி இருக்கிறார். 

அவசியம் படிக்க வேண்டிய புத்தக பட்டியலில் இவரது புத்தகங்கள் வைத்திருக்கிறேன்.

Tuesday, August 11, 2020

ஒலிப்புத்தகம் / Audio Book : Audible : Storytel

பம்பாய் கண்ணன், இவரை எஸ்.வி.சேகரோடு பெரிய மாப்பிள்ளை சின்ன மாப்பிள்ளை நாடகத்தில் நடித்தவர் என்றளவில் தான் அறிமுகம். ஆனால் சமீபத்தில் இவரும் இவரது குழுவினரும் இணைந்து வழங்கி இருக்கும் பொன்னியின் செல்வன் மற்றும் கடல் புறா ஆகிய நாவல்களின் ஒலி வடிவத்தை கேட்டு பிரமித்திருக்கிறேன். அதனை ஒலி நாடகம் என வகை படுத்திப்பட்டு இருந்தாலும் ஒலி நாடகமாக இல்லாமல் ஒலிப்புத்தகமாக தான் இருக்கிறது.  

தமிழில் இப்பொழுது தான் ஒலி புத்தகங்கள் பெரியளவில் வர ஆரம்பித்து இருக்கிறதென்றாலும் ஆங்கிலத்தில் பல வருடங்களாக வழக்கத்தில் இருந்து வருகிறது. 

அதில் என்ன பிரச்சனை என்றால் பம்பாய் கண்ணன் குழுவினரது ஒலி புத்தகங்கள் தவிர்த்து மற்ற ஒலி புத்தகங்கள் எல்லாம் ஏற்ற இறக்கத்துடன் இல்லாமல் தட்டையாக இருக்கிறது. 

ராஜேஷ்குமார் நாவலை படிக்கும் பொழுது மனதிற்குள் ஏற்படும் பரபரபப்பு யாரோ ஒரு பெண்மணி வாசிக்கும் பொழுது கதையின்  சுவாரசியமே இல்லாமல் போய் விடுகிறது. 

தமிழியில் இப்பொழுது தான் புத்தகங்கள் ஒலி வடிவில் வர ஆரம்பித்திருப்பதால் பல குறைகள் இருக்க தான் செய்யும். மேலும் புத்தகத்தை சுவாரசியமாக ஒலி வடிவத்திற்கு வாசிக்கும் நபர்கள் அதிகம் இல்லை. 

தமிழ் ஒலி புத்தகங்கள் அதிக லாபம் தருமொன்றாக மாறும் காலத்தில் திரைப்பட பின்னணி குரல் கொடுப்பவர்கள் நிச்சயம் கால் பதிப்பார்கள். 

இதுவரையில் சரித்திர நாவல்கள் ஒலி வடிவமாக கள்ள பதிப்பில் தான் கிடைத்தது. அதாவது யாரோ ஒருவர் குறிப்பிட்ட அந்த சரித்திர நாவல் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு தனது குரலில் நாவலை வாசித்து நிழற்படத்துடன் காணொளியாக யூட்யூப்பில் பதிவேற்றி இருப்பார்கள்.

ஆனால் சட்டரீதியான தமிழ் ஒலி புத்தக பதிப்பு பல செயலிகளில் கிடைக்கிறது. குறிப்பாக சொல்வதென்றால் Audible, Storytel போன்ற பிரபல செயலிகள். இதில் ஒரு புத்தகம் மட்டும் வாங்க வேண்டும் அல்லது கேட்க வேண்டும் என்பதற்கு வாய்ப்பு இல்லை. எல்லாம் மாத சந்தா அல்லது வருட சந்தாவில் மேலே குறிப்பிட்டுள்ள செயலிகளில் ஒலி புத்தகங்கள் கிடைக்கிறது. கூகிள் புத்தகங்கள் என்ற செயலில் மட்டுமே தனி ஒலி புத்தகமாக வாங்க முடியும் என தெரிகிறது. தனி ஒலி புத்தகமாக வாங்கினால் பல நூல்களின் விலை கைக்கு அடங்காத ஒன்றாக இருக்கும்.

நீங்கள் தமிழ் நாவல்கள் மட்டுமே வாசிப்பேன் என இருந்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். பல எழுத்தாளர்களது புத்தகங்கள் ஒலி வடிவில் இல்லை. 

பிரபல தமிழ் எழுத்தாளர்கள் தங்களது புத்தகங்களை ஒலி வடிவில் கொண்டு வந்தால் இன்னும் பலரை தமிழ் வாசக பரப்பில் இணைக்க முடியும்.

Tuesday, April 21, 2020

பொன்னியின் செல்வன் :: Ponniyin Selvan / ஒலி புத்தகம் :: Audio Book

பொன்னியின் செல்வனை நாவலை முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

புத்தகம் + ஒலி புத்தகம் என இரண்டையும் ஒன்றன வாசித்தபடியே கேட்டும், கேட்டபடியே வாசித்தும் நாவலை நுகர்ந்து கொண்டு இருக்கிறேன்.

பம்பாய் கண்ணனின் பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம் நாடக வடிவில் இருப்பதினால் ; செந்தில் குமார் மற்றும் ஆர்.ஜே.ஜனா ஆகியோரது குரலிலிருக்கும் இந்த ஒலி புத்தகத்தை தேர்ந்தெடுத்தேன்.வரிவரிக்கும் வார்த்தைகள் அவ்வாறே துல்லியமான உச்சரிப்பு தேனூட்டுகிறது. 

ஆனால் பொன்னியின் செல்வனை வாசிக்கும் பொழுது எல்லோருக்கும் மனதில் ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் தனி குரல் கொடுத்திருப்போம், அம்மாதிரி உருவக படுத்தியோருக்கு இவ்வடிவம் அந்நியமாக இருக்கலாம்.

எப்படியோ இப்படி வாசிப்பதும் தனி சுவையாக தான் இருக்கிறது. 

ஒலி புத்தகம் - Storytel
புத்தகம் - பெரியம்மா கொடுத்தது.

Sunday, April 19, 2020

தொலைக்காட்சியில் புத்தகங்கள்

புத்தகங்களை வீட்டு தொலைகாட்சியில் எப்படி வாசிப்பது.

உங்கள் தொலைக்காட்சியில் இருக்கும் HDMI பகுதியில் கூகிள் காஸ்ட் கருவியை இணைக்கவும்.

அதன் பின்னர்

உங்களது ஆண்டிராய்டு மொபைலில் கூகிள் ஹோம் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்ட பின் அதற்கு தேவையான அனுமதிகளை Settingsல் ஏற்படுத்தி கொள்ளவும்.


பின் கூகிள் ஹோம் உங்கள் தொலைகாட்சியை ஒரு பெயர் வைத்து சேமித்து கொண்டு செயலில் போய் CAST MY SCREENயை தேர்ந்தெடுக்கவும்.


அதன் பின் AMAZON KINDLE அல்லது சேகரிப்பில் இருக்கும் மின்னூல்களை தேர்ந்தெடுத்து படிக்கவும். 

முக்கியமாக ROTATE SCREEN கொடுத்து அகல வாக்கில் வைத்து படிக்கவும். நேர் வாக்கில் வைத்திருந்தால் படிக்க கடினமாக இருக்கும். 

தொலைக்காட்சியும் மொபைலும் ஒரே இண்டர்நெட் இணைப்பில் இணைந்திருக்க வேண்டும்.

இந்த வசதியின் மூலம் யூ டியூப், நெட்ஃபிலிக்ஸ், அமேசான் ப்ரைம் ஆகியவையும் படிக்கலாம்.

கடந்த இரண்டு வருடங்களாக சில புத்தகங்களை இப்படி தான் படிக்கிறேன். இப்படி படிப்பதின் மூலம் கண்களுக்கு அதிக சிரமம் இருக்காது.

இதன் மூலம் ஒரே நேரத்தில் ஒரு குழுவாக உட்கார்ந்து கொண்டு விவாதித்த படியே புத்தகங்களை படிக்கலாம்.

மொபைலில் தரவிறக்கம் செய்து  வைத்திருக்கும் திரைப்படங்களை இதன் மூலம் பார்க்க வேண்டாம். ஒளி ஒலி அமைப்பு சரியாய் வராது.

நன்றி - சிவதீபம், விஸ்வா, கே.ஆர்.டீ. சார், அமேசான் கிண்டில், சாம்சங் நிறுவனம்

Tuesday, April 14, 2020

கமர்கட் - இலக்கிய உவமை

சி.சரவணகார்த்திகேயன் எழுதின பிரியத்தின் துன்பியல் புத்தகத்தை வாசித்து கொண்டு இருக்கிறேன்.

அதில்.

எழுத்தாளர் மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் எழுதிருக்கிறார் போல அல்லது இரவு உணவகத்தில் எதுவுமில்லாத பொழுது உப்புமா தயாரித்து தருவது போல கமர்கட் நாவில் உருட்டி என எழுதிருக்கிறார்.

கமர்கட் மிட்டாயை வாயில் ஒரு ஓரமாக வைத்துக்கொண்டு இருந்தாலே போதும். அதனை வாயிலின் வைத்து உருட்டி உருட்டி யாரேனும் ருசிப்பார்களாக என தெரியவில்லை. 

இது இன்னொரு எழுத்தாளரின் புத்தகத்திற்கு எழுதப்பட்ட முன்னுரை என சொல்கிறார்.(பா. ராகவனின் 14ம் லூயியின் பாத்ரூம் சாஹித்யங்கள்)

இம்மாதிரி உருட்டி உருட்சி ருசிப்பது எல்லாம் சிறு பிள்ளைகள் செய்வார்கள் என்றால், அந்த எழுத்தாளர் எழுதுவது எல்லாம் சிறு பிள்ளைதனமானது என சொல்கிறாரா .... தெரியவில்லை.

தமிழ் இலக்கியத்தில் உவமைகளுக்கு பஞ்சம் வந்துவிட்டது போல.

இது இப்படியே போனால் தீவிர அரசியல் கட்டுரை தொகுப்பிற்கு இலந்தை வடை போல காரசாரமாக உள்ளது என யாராவது எழுதினால் ஆச்சரியம் இல்லை.

Sunday, August 6, 2017

பஞ்ச நாராயண கோட்டம் & எஸ்.ராமகிருஷணன்

நேற்று நடு இரவாகி விட்டது நரசிம்மா எழுதிய பஞ்ச நாராயண கோட்டம் நாவலை படித்து முடிக்க.அருமையான எழுத்துநடை. பக்கங்கள் போவதே தெரியவில்லை.

ஹோய்சாலப் கால கோயில்களை பார்க்க ஆர்வம் வந்துவிட்டது. பெல்லூர், ஹலிபேடு மற்றும் பல கோயில்களை 2004ஆம் ஆண்டு வாக்கில் விவரமெதுவும் தெரியாமல் சுற்றி பார்த்து இருக்கிறேன். ஆனால் இப்போது இணையத்தில் தேடி தேடி படித்து கொண்டு இருக்கிறேன்.

எல்லோரும் படிக்க வேண்டிய ஒன்று.

இதனை அடுத்து நரசிம்மா அவர்களின் மிகவும் புகழ்பெற்ற நாவலான காலச் சக்கரம் வாசிக்க எடுத்திருக்கிறேன்.

கடந்த வியாழன் அன்று வானதி பதிப்பகம் சென்று நரசிம்மா எழுதிய அனைத்து நாவல்களையும் வாங்கி வந்து விட்டேன்.

ஹோய்சாலப் பேரரசு பற்றி வேறு நாவல்கள் இருக்கிறதென்று தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்.

- - -

ஷ்ருதி சேனலில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் நான் படித்த நாவல்கள் என்ற தலைப்பில் அவராற்றிய மேடை உரை அல்லது மேடை பேச்சின் காணொளியை கண்டேன். அதில் அவர் நிறைய விஷயங்களை பற்றி இன்னும் நாவல்கள் எழுத படவே இல்லை என்று சொல்கிறார்.

உண்மை தானே. ஏன் சென்னையிலேயே பேச படாதவைகள் நிறைய உள்ளனவே.

தாம்பாரம் வேளச்சேரி பிரதான சாலையில் வேங்கை வாசல் என்று ஒரு பகுதி இருக்கிறது. எனக்கு தெரிந்தது புதுக்கோட்டையின் திருகோகர்ணம் புகழ் வேங்கை வாசல் தான்.

இங்கு வேங்கை வாசல் ஏன் எதற்கு வந்தது என்று அந்த பகுதியை கடக்கும் பொழுதெல்லாம் யோசிப்பேன்.

பக்கத்தில் நன்மங்கலம் காடு... ஒரு வேளை அங்கு இருந்து வேங்கை ஏதேனும் வந்திருக்குமோ.... தெரியவில்லை.

நிறைய விஷயங்கள் பரவி இருக்கிறது கதைகள் உருவாக்க

Sunday, December 27, 2015

*கலவை* - {செக்ஸ் ரோபோக்கள், கமல்ஹாசன், Clash of Clans}

இழந்த சோழ சாம்ராஜ்ஜியத்தின் பெருமையை காப்பாற்றும் நோக்கில் பல்வேறு போர் வியூகங்களை கொண்டு சிறப்பான நான் தனிப்பட்ட முறையில் தேர்வு செய்த படையின் துணையுடன் கற்று கொண்ட மொத்த திறமையையும் இறக்கி வைத்து பல பாண்டிய நாடு மற்றும் சேர நாட்டின் கோட்டைகளை  கைப்பற்ற Clash of Clans என்ற ரத்த பூமியில் இறங்கி இருக்கிறேன்.

இது ஒரு பொழப்பு என்று வீட்டம்மணி பார்த்தாலும் அவ்வப்போது தேனீர் தயாரித்து தர சொல்லி இருக்கிறேன்.

புறமுதுகிட்டு படைகள் சில வேளை ஓடி வந்தாலும், மீண்டெழுந்து திரும்ப போய் வெற்றி பெற்று வருகிறேன்.

காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு பண்ணி கொள்ள முடியுமா என்று கேட்கலாம் என்று இருக்கிறேன்.

அலுவலத்தின் தினசரி எட்டு மணி நேர பர்மிஷன் கேட்க போகிறேன். நான் கஷட பட்டு கட்டும் கோட்டையை என் கண்காணிப்பு இல்லாத நேரத்தில் எதிரி படைகள் தாக்கிவிட்டு போகிறார்கள். கண்காணிப்பு எப்பொழுதும் தேவையாய் இருக்கிறது. நான் வெற்றி பெதுவிட்டால், அது நிறுவனத்திற்கு தானே பெருமை. புரிந்து கொண்டு பர்மிஷன் தருவார்கள் என்று நினைக்கிறேன்.

வெற்றி பெற்று விட்டால் நானே ராஜா நானே மந்திரி .

= = = = =
உயிர்மையில் மனுஷ்ய புத்திரன் எழுதிய செக்ஸ் ரோபோக்கள் சந்தைக்கு வந்துவிட்டன கவிதையை பெருங்களத்தூர் அரசு நூலகத்தில் அமர்ந்து தெருவில் கட்டபட்டு இருக்கும் ஒலிபெருக்கியின் மூலம் வரும் அய்யப்பன் பாட்டு சத்ததிற்கு இடையில் படித்து கொண்டு இருந்தேன் ... கவிதை நன்றாக இருந்தது.

ஆனால் பிரம்மச்சரியத்தை போற்றும் அய்யப்ப பாடலை காதுகளில் கேட்டு கொண்டே இச்சை தணித்து கொள்ளும் விதங்களை பற்றிய கவிதையை படித்தது வேடிக்கையாக தான் இருந்தது.

யாரோ ஒருவர் முகநூலில் குமுதம் பத்திரிகையில் நர்சிம் எழுதிய நளினியக்கா சிறுகதை பாராட்டி எழுதி இருந்தார். ஆவல்கொண்டு பெருங்களத்தூர் அரிமா சங்க நூலகம் காலையில் திறந்த உடன் முதல் ஆளாக போய், குமுதத்தை தேடி எடுத்து படித்தேன். படித்த பிறகு ஒரே ஒரு கேள்வி தான் மனத்தில் தோன்றியது. இதில் பாராட்டும்படி எதை அவர் கண்டார் ???

நர்சிம் எழுதிய அய்யனார் கமாவில் அருமையாக முத்து முத்தாக மூன்று சிறுகதைகள் படிக்க கிடைக்கும். இந்த நளினியக்கா கதை அய்யனார் கமா கதையின் கால் தூசிக்கு கூட இல்லை. 

= = = = =
கமல்ஹாசன் அவர்களை சுற்றி வரும் பேச்சு இது, எத்தனை பேர் கேள்விபட்டு இருப்பார்களென்று தெரியவில்லை.

அவரது அபூர்வ சகோதரர்கள் படத்தில் ராஜா கைய வைச்சா அது ராங்கா போனது இல்ல என்ற பாடல் அப்பொழுது பெருங்களத்தூரில் இருந்த ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தில் எடுக்கபட்டது. படம் வெளியான சில வருடங்களிலேயே அந்த நிறுவனத்தை இழுத்து மூடி விட்டார்கள். அப்படி மூடபட்டதற்கு கமல்ஹாசன் பட பாடல் அங்கு எடுக்கபட்டதே காரணம் என்று இன்று வரையில் சொல்லி கொண்டு இருக்கிறார்கள் சில.

ஆனால் உண்மையில் அப்பொழுது முன்னுக்கு வந்து கொண்டு இருந்த பிரபல கார் கம்பெனி ஒன்று தொழிற்சங்க பிரச்சனையை மூட்டிவிட்டு தனது நிறுவன கார்களின் விற்பனையை மேம்படுத்தி கொண்டதாக சொல்கிறவர்களுக்கும் இருக்கிறார்கள்.

பிறகு அந்த நிறுவனம் எந்த வகையான காரின் விற்பனைக்காக அதனை செய்ததோ, அந்த கார் வகையின்  உற்பத்தியை கொஞ்ச வருடங்களுக்கு முன்வு நிறுத்தி கொண்டது.

= = = = =
" மாம் கர்மாணி லிம்பந்தி மே கர்ம- லே ஸ்ப்ருஹா இதி மாம் யோ ()பி ஜானாவதி கர்மபி ர் பத்யதே " - பகவத் கீதை

என்னை பாதிக்கும் செயல் எதுவும் இல்லை; என்னைப் பற்றிய இவ்வுண்மையை அறிபவனும் செயல்களின் விளைவுகளால் பந்தப்படுவதில்லை.

படித்ததில் பிடித்தது.

= = = = =
பொழுது போகாமல் பாகிஸ்தான் சிறுகதைகள் வாசிக்க ஆரம்பித்தேன்.

வாசித்த வரையில் ஃப்ரூக் ஸர்வர் எழுதிய ஓநாய் மற்றும் இஸ்மாயில் கௌஹர் எழுதி அப்பா ஆகிய கதைகள் மிகவும் பிடித்து இருந்தது.

ஓநாய் கதையில் பாகிஸ்தானிய  சமூகம் பற்றி கேள்வி கேட்பதாய் இருக்கிறது. மதம், சடங்கு ஆகிய வரையறைகளுக்கு மக்கள் தங்களை அடக்கி வைத்திருப்பதை குறியீடுகள் மூலம் சொல்கிறது.

அதே போல் அப்பா கதையில் பாகிஸ்தான் கிராமிய பஞ்சாயத்தின் கொடூரமான முகத்தை காட்டுகிறது.

வெளியீடு - சாகித்திய அகாதெமி
விலை - 220ரூ.


குறை - ஐம்பது ஆண்டுக்காலத்தில் வெளியான பாகிஸ்தானிய சிறுகதைகளின் தொகுப்பு இது. ஒரு கதையும் எந்த ஆண்டு வெளியானது என்பதையும் போட்டு இருந்தால் அந்நாட்டில் நிகழ்ந்த சமுதாய மாற்றத்தை தெரிந்து கொண்டு இருக்கலாம். 
Related Posts with Thumbnails